அமமுக கலைக்கப்படுகிறதா.. ஜெ. பாணியை கையில் எடுத்த சசிகலா.. தினகரன் நிலைப்பாடு என்ன?
சென்னை: டிடிவி தினகரனின் அமமுகவை கலைக்குமாறும் கட்சி செயல்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்றும் சசிகலா உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தினகரன் அவரது பேச்சை கேட்டு செயல்படுவாரா என்பது அவர் அறிவித்த ஆர்ப்பாட்டத்தை பார்த்தால் தெரியவில்லை.
மக்கள் நலனுக்காக என ஒரு புறம் இருந்தாலும் அதிமுகவை கைப்பற்றுவதற்காகவும் தேர்தலில் அதிமுகவிற்கு பாடத்தை புகட்டுவதற்காகவும் தினகரன் அமமுகவை தொடங்கினார். கட்சி தொடங்கிய 3 ஆண்டுகளில் இக்கட்சி சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியை பெறவில்லை.
கோவில்பட்டி சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தினகரனாவது அக்கட்சி சார்பில் வென்று சட்டசபை செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இந்த நிலையில் சசிகலா அதிமுகவை கைப்பற்ற பல்வேறு முயற்சிகளை அண்மைக்காலமாக எடுத்து வருகிறார்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் வெளியே வரும் டிடிவி தினகரன்.. பெரும் எதிர்பார்ப்பில் ஆதரவாளர்கள்
பேச்சளவு
ஆனால் அவரது முயற்சி பெறும் பேச்சளவில்தான் இருக்கின்றன. செயல் அளவில் சசிகலா எதையும் செய்யவில்லை. ஆடியோ, வீடியோ மூலம் கட்சியை கைப்பற்ற நினைப்பது குறித்து சசிகலா வெளிப்படுத்தியும் ஈபிஎஸ்- ஓபிஎஸ் எதிர்த்து வருகிறார்கள்.
மத்திய அமைச்சர்
சட்டசபை தேர்தலுக்கு முன்பு கூட மத்திய அமைச்சர் ஒருவர் அதிமுகவுக்கு அறிவுறுத்தி அமமுகவை அதிமுகவில் இணைக்கவும் சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்ளவும் ஆலோசனை கூறியதாகவும் இதற்கு ஓபிஎஸ்- ஈபிஎஸ் மறுத்துவிட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின.
மேற்கு மண்டலத்தினர்
அதிமுகவில் மேற்கு மண்டலத்தினரின் கை ஓங்கியே இருப்பதால் தனிப்பட்ட முறையில் சசிகலாவின் வருகையை ஓ பன்னீர் செல்வம் விரும்புகிறார் என சொல்லப்படுகிறது. ஆனால் அவரால் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து எதையும் செய்ய முடியாததால் தனது எதிர்ப்பு நிலைப்பாட்டை காட்டி வருகிறார்.
ஜெயலலிதா
இதனால் சசிகலா ஜெயலலிதாவின் பாணியை கடைப்பிடிக்க முயற்சிக்கிறார். எம்ஜிஆர் இறப்புக்கு பின்னர் ஜெயலலிதா அணி, ஜானகி அணி என பிரிந்தவுடன் சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததை போல ஜெயலலிதாவுக்கு மூத்த நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இரு அணிகளை ஒன்றிணைந்த ஜெயலலிதா, தன்னை எதிர்த்தவர்களையே அமைச்சர்களாகவும் கட்சியில் பல்வேறு பதவிகளை கொடுத்தும் அழகு பார்த்துள்ளார்.
ஒற்றை தலைமை
இதையடுத்து ஜெயலலிதா எனும் ஒற்றை தலைமையின் கீழ் அதிமுக கட்டுக்கோப்பாக இருந்தது. கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தல் தொடங்கி இரு தேர்தல்களிலும் அதிமுக வென்றது. இந்த வெற்றியை ஜெயலலிதா இருந்த வரை மட்டுமே அதிமுக சுவைத்தது. அதன் பின்னர் தோல்விதான்.
ஜெயலலிதா கட்சி
சசிகலாவும் ஜெயலலிதா இருந்த போது கட்சி எப்படி இருந்ததோ அது போல் நானும் செயல்படுவேன் என தொண்டர்களிடம் கூறி வருகிறார். எனவே ஜெயலலிதா எடுத்த பாணியான இரு அணிகளை ஒன்றிணைத்தலை சசிகலா கையாள்வார் என தெரிகிறது. இதற்காக அமமுகவை கலைத்துவிடுமாறு தினகரனுக்கு உத்தரவிட்டதாகவும் அமமுக செயல்பாட்டை உடனே நிறுத்தும்படியும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமமுகவில் இருந்து பலர் வெளியேறி திமுகவில் இணைவதால் அதை தடுக்க அமமுகவை கலைக்கும் முடிவில் சசிகலா இருக்கிறார் என சொல்லப்படுகிறது.
உண்மை என்ன?
எனவே விரைவில் சசிகலா அதிமுகவில் இணையும் நிகழ்வு நடைபெறும் என்றே உறுதிப்படுத்தப்படாத தகவல் சொல்லப்படுகிறது. ஆனால் தினகரனோ வரும் 6ஆம் தேதி மத்திய மாநில அரசுகளை கண்டித்து மேகதாது அணை விவகாரம் குறித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளார். இதனால் அமமுகவை கலைக்கும் எண்ணம் தினகரனுக்கு இல்லையோ என சந்தேகம் எழுகிறது. எதுவாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் அறிவித்தால்தான் உண்மை விளங்கும். அது வரை பொறுமை காப்போம்!