காலி பெட்டியான பரிசு பெட்டி…!! ஒட்டு மொத்தமாக சரிவை சந்தித்த டிடிவியின் அமமுக..!!
Recommended Video
சென்னை:தமிழகத்தில் அதிமுகவை ஒட்டுமொத்தமாக அசைத்து பார்க்க போகும் அமமுக என்று பெயருடன் வலம் வந்த டிடிவி தினகரனின் அமமுக முழுக்க சரிவை சந்தித்து இருக்கிறது. இன்னும் சொல்ல போனால் டோட்டல் வாஷ் அவுட்டாகி இருக்கிறது.
துரோகிகளை துரத்துவதற்கு உருவாக்கப்பட்டது.. அதிமுக காப்பாற்ற உதயமான அமைப்பு என்ற சர்வரோக நிவாரணி என்ற அளவுக்கு தமிழகத்தில் உருவானது அமமுக(அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்) முதலில் அதன் தலைமை சசிகலா, துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் என்று இருந்தது.
தற்போது, பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் என்று அறிவிக்கப்பட்டு இயங்கி கொண்டிருக்கும் அமமுகவானது, பரிசு பெட்டி என்ற சின்னத்துடன் வலம் வந்தது. லோக்சபா தேர்தல் மற்றும் தமிழக இடைத்தேர்தலில் அதே பரிசு பெட்டி சின்னத்துடன் களம் கண்டது. அதிமுகவை சாய்க்க போகிறோம்... நாங்கள் தான் உண்மையான அதிமுக என்று மார்தட்டிக் கொண்டு தேர்தல் களத்தில் மக்கள் அளித்த ஆதரவு என்பது ஷாக் அடிக்கும் வகையில் இருக்கிறது.
செய்ய வேண்டியதை சரியாக செய்த எடப்பாடி.. ஆட்சியை தக்க வைக்க செய்த தியாகம்.. செம ராஜதந்திரம்!
மாறிய முடிவுகள்
லோக்சபா தேர்தல் முடிவுகள் என்பது கிட்டத்தட்ட திமுகவுக்கு சாதகமாக அமைந்து, அதிமுகவை முழுமையாக சாய்த்திருக்கிறது. அதாவது கடந்த தேர்தலுக்கு நேர் எதிரான முடிவுகளை தந்திருக்கிறது(2014ல் அதிமுக 37, 2019ல் திமுக 37). இந்த இரு பெரும் கட்சிகளுக்கு இடையில் சிக்கி ஒட்டு மொத்தமாக காணாமல் போயிருக்கிறது அமமுக.
அதிர்ச்சியில் அமமுக
பல இடங்களில் இவ்விரு கட்சிகள் பெற்ற வாக்குகளை எட்டியே பிடிக்க முடியாத அளவுக்கு பின்னுக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. லோக்சபா தேர்தல் முடிவுகளை அக்கட்சிக்கு தமிழகத்தின் இடைத்தேர்தல் முடிவுகள் பெரும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது. கிட்டத்தட்ட மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் வாக்குகளை கூட எட்டி பிடிக்க முடியவில்லை.
தருமபுரியில் ஒரே சுற்றில் மாறிய நிலை.. அன்புமணி ராமதாஸ் பின்னடைவு.. முன்னுக்கு வந்த திமுக
பின்தங்கிய அமமுக
குறிப்பாக சில தொகுதிகளின் ஆரம்ப கட்ட தேர்தல் முடிவுகளே அந்த உண்மையை பறை சாற்றுகின்றன. பெரம்பூர் தொகுதி தேர்தல் முடிவில், ஆரம்ப கட்டத்தில் அமமுக வேட்பாளர் வெற்றிவேல் களத்தில் போட்டியிட்டார். முதல் கட்ட முடிவில் அவர் பெற்ற வாக்குகள் 1494, அதே நேரத்தில் மநீம வேட்பாளர் பிரியதர்ஷினி பெற்ற வாக்குகள் 3907, நாம் தமிழரின் மெர்லின் சுகந்தி 1235 வாக்குகள் பெற்றிருக்கின்றனர்.
நாங்களும் ஒருநாள் வருவோம்... அசத்திய நாம் தமிழர் கட்சி... சீமானின் கனவு மெய்ப்படுகிறது?
எட்ட முடியாத வாக்குகள்
திருப்போரூர் தொகுதியிலும் இதே நிலை தான். அமமுக வேட்பாளர் கோதண்ட பாணியின் ஆரம்ப கட்ட வாக்குகள் 1827, மநீம வேட்பாளர் கருணாகரன் பெற்றது 1767, நாம் தமிழர் வேட்பாளர் மோகனசுந்தரி 2098 வாக்குகள். அதாவது... அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை எட்டவே எட்ட முடியாத அளவுக்கு அமமுகவின் வாக்குகள் அதல பாதாளத்துக்கு சென்றிருக்கிறது.
அமமுக ஆதரவாளர்
குடியாத்தம் தொகுதியில் அமமுகவின் நிலை என்பதை சற்றே ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. இந்த தொகுதியில் ஜெயந்தி பத்மநாபன் அதிமுக எம்எல்ஏவாக கடந்த தேர்தலில் தேர்வானார். பின்னர் அதிருப்தி அதிமுக எம்எல்ஏ என்று மாறி அமமுக பக்கம் சாய்ந்தார்.
மற்ற கட்சிகள் அபாரம்
பரிசு பெட்டி சின்னத்தில் நின்று முதல் கட்ட முடிவில் வெறும் 3063 வாக்குகளே பெற்றிருக்கிறார். அதாவது கடந்த தேர்தலில் அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர் தற்போது பெற்றிருப்பது 3 ஆயிரத்து சொச்சம் வாக்குகளே. இது டிடிவி தினகரனின் பரிசு பெட்டிக்கு கிடைத்திருக்கும் வாக்குகள். அமுமுக வாக்குகளை எட்டிப் பிடிக்கும் அளவுக்கு மநீம, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் இருக்கின்றன
நோட்டாவை கூட தொடாத வாக்கு
ஓசூரில் கட்சி நிலைமையை பார்த்து அமமுகவினரே சற்று அதிர்ந்து போயிருக்கின்றனர். ஏன் என்றால் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் ஆரம்ப கட்ட வாக்குகள் கிட்டத்தட்ட 28 ஆயிரத்தை தாண்டியிருக்கின்றன. அமமுகவோ... நோட்டாவின் வாக்குகளை விட பின் தங்கியிருக்கிறது. அதாவது.. ஆரம்ப கட்ட வாக்கு வித்தியாசத்தில் அமமுக வேட்பாளர் புகழேந்தி பெற்றிருப்பது வெறும் 240 வாக்குகள் தான்(இன்னும் சொல்ல போனால் முதல் சுற்று முடிவில் அவர் பெற்றிருந்தது வெறும் 8 வாக்குகளே). நோட்டா பெற்றிருப்பது 914 வாக்குகள். மநீம, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் ஆயிரம் சொச்ச வாக்குகளை தாண்டியிருக்கின்றன.
அமமுகவின் கணிப்பு
இதேபோன்று தான் விளாத்திகுளம், சோளிங்கர், ஆண்டிப்பட்டி, பரமக்குடி ஆகிய தொகுதிகளிலும் இருக்கிறது. கிட்டத்தட்ட அதிமுகவின் வாக்குகளை அப்படியே பரிசு பெட்டியிலும் விழும் என்ற அமமுகவின் கணிப்பு, சுக்கு நூறாக உடைத்தெறியப் பட்டிருக்கிறது. இடைத்தேர்தல் நடைபெற்ற அனைத்து தொகுதிகளிலும் கிட்டத்தட்ட பெரும்பான்மை தொகுதிகளில் மநீம, நாம் தமிழர் பெற்ற வாக்குகளின் தாக்கத்தை கூட அமமுக பெறவில்லை.
முடிவுகள் சொல்வது என்ன?
அதிமுகவின் மாற்று என்பதை இனி வரும் காலங்களில் மக்கள் மேடையில் அமமுக முழங்க முடியாது என்பதை தான் இந்த இடைத்தேர்தல் முடிவுகள் மிக தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கின்றன. ஆக... இனி வரும் நாட்களில் அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்.. தாய் கழகத்தில் தம்மை இணைத்து கொண்டார்கள் என்ற செய்திகளை அதிகம் காணலாம்.