ஓமந்தூரார் மருத்துவமனை... காசநோய் நோயாளிகளுக்கு... கொரோனா தொற்று இல்லை!!
சென்னை: தமிழகத்தில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் காசநோய்க்காக மருந்து எடுத்துக்கொண்ட நோயாளிகளில் ஒருவருக்குக் கூட கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என்பது முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவுக்கு பலியாகிறவர்களை விட காசநோய்க்கு அதிகளவில் உயிரிழந்து வருகின்றனர். 2019ல் இந்தியாவில் மட்டும் 24.04 லட்சம் பேர் காச நோய்க்கு பாதிக்கப்பட்டு இருந்தனர். உலக சுகாதார நிறுவனம் 26.9 லட்சம் பேர் பாதிக்கப்படலாம் என்று கணித்து இருந்தது. இந்த நோயால் இந்தியப் பொருளாதாரம் கடந்த 2006ல் இருந்து 2014 வரையிலான கால கட்டத்தில் ஒரு பில்லியன் டாலர் அளவிற்கு பாதிக்கப்பட்டு இருந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நோய்தான் இந்தியாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் சவாலாக இருந்து வருகிறது.
காசநோய்க்கு இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 1150 பேரும், ஆண்டுக்கு 4 லட்சம் பேரும் உயிரிழந்து வருகின்றனர். இந்த நோய் காற்றின் மூலம் பரவக் கூடியது என்பதால் பிறந்தவுடனே குழந்தைகளுக்கு பிசிஜி தடுப்பூசி போடப்படுகிறது. 1940ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் காசநோய் தடுப்பூசி கட்டாயம் போடப்படுகிறது.
இந்தியாவைத் தவிர பெரும்பாலான நாடுகள் இந்த ஊசியை போட்டுக் கொள்வதில் அக்கறை காட்டுவதில்லை. இந்த நோயும், கொரோனா நோயைப் போன்று நுரையீரலை பாதிக்கக்கூடியது. எனவே, கொரோனா நோயாளிகளுக்கு இந்த தடுப்பு ஊசியை பயன்படுத்தலாம் என்று ஆலோசனை வழங்கப்பட்டது. ஆனால், உலக சுகாதார நிறுவனம் இந்த தடுப்பு ஊசியை பரிந்துரைக்கவில்லை.
இதுகுறித்தும் பல்வேறு நாடுகள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது. சீனா இதுபோன்ற ஊசியை கடந்தாண்டு தனது நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பிரஜ்ஜைக்கும் செலுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால்தான் அந்த நாட்டில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தது என்று கூறப்பட்டது.
கொரோனா "புண்ணியத்தால்" 23 அரியர் பாடங்களிலும் ஆல்பாஸ் ஆன "நேரு".. மகிழ்ச்சியில் முதல்வருக்கு நன்றி!
இந்த நிலையில், தமிழகத்தில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் முதற்கட்ட ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில், காசநோய்க்காக மருந்து எடுத்துக்கொண்ட நோயாளிகளில் ஒருவருக்குக் கூட கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் 60-95 வயதுக்கு உட்பட்டவர்களில் கொரோனா உயிரிழப்பை தடுக்கும் வகையில், அந்த வயதில் இருப்பவர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிசிஜி தடுப்பு ஊசி போடுமாறு அறிவுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.