டிடிஎப் வாசனுக்கு “நோஸ் கட்”.. நேர்காணலில் கிடுக்குப்பிடி கேள்விகள்! பதிலளிக்காமல் நடுவில் “எஸ்கேப்”
சென்னை: பிரபல மோட்டோ யூடியூபரான டிடிஎப் வாசன் தனது விலை உயர்ந்த பைக்குகளை கொண்டு போக்குவரத்து சட்ட விதிகளுக்கு எதிராக அதி வேகத்தில் பயணித்து யூடியூப் சேனலில் வீடியோக்களை வெளியிட்டு வரும் டிடிஎப் வாசன், தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், இது குறித்து கிடுக்குப்பிடி கேள்விகளை எழுப்பிய நெறியாளருக்கு பதிலளிக்காமல் பாதியில் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையை சேர்ந்தவர் டிடிஎப் வாசன். Twin Throttlers என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் இவர் பைக்கில் அதிக வேகத்தில் பயணம் செய்து அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டு வந்தார்.
இவர் வெளியிடும் வீடியோக்களால் கவரப்பட்ட பைக் மீது அதிக ஆர்வம் கொண்ட சிறுவர்கள், இளைஞர்கள் அவரை போலவே பைக்குகளில் சாகசங்களை செய்யத் தொடங்கினார்கள். இதனால் பல விபத்துக்கள் ஏற்பட்டன.
13 பேரை கைது செய்தீர்களே.. இந்த வீடியோவை பாருங்க! டிடிஎப் வாசன் கைதாவது எப்போது? நெட்டிசன்கள் கேள்வி
ஆபத்தான் பைக் சாகசங்கள்
டிடிஎப் வாசன் இளைஞர்களை ஆபத்தான பைக் சாகசங்களுக்கு தூண்டுவதாகவும், இளைஞர்கள், சிறுவர்களை தவறாக வழிநடத்ததி வருவதாகவும் குற்றச்சாட்டுக்களும் எழுந்தன. 34 லட்சம் சப்ஸ்கிரைபர்களை வைத்திருந்தாலும் இளைஞர்கள், சிறுவர்கள், பைக் ரைடிங்கில் ஆர்வம் கொண்ட நபர்களை தவிர்த்து பெரும்பாலான மக்கள் TTF வாசனை அறிந்திருக்கவில்லை.
ரசிகர்கள் சந்திப்பு
கடந்த ஜூலை மாதம் தனது பிறந்தநாளை முன்னிட்டு டிடிஎப் வாசன் நடத்திய ரசிகர்கள் சந்திப்பில் அவரை வரவேற்க ஆயிரக்கணக்கானோர் திரண்டு நின்றனர். கூட்டம் அதிகமானதால் போலீசார் அங்கு வந்து வாசனிடம் பேசி அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்தினர். சமூக வலைதளங்களில் இந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டது.
போலீஸ் எச்சரிக்கை
அத்துடன் ஊடகங்களிலும் செய்தியாக வந்ததால் அனைத்து தரப்பு மக்களுக்கு பரிட்சையமானார் டிடிஎப் வாசன். "வாசன் போன்ற நபர்கள் தாங்கள் ஏதோ நல்லது செய்கிறோம். பெரிய ஆட்கள் என்று நினைக்கிறார்கள். ரோல் மாடல் என்று நினைத்து இளைஞர்களின் வாழ்க்கையை வீணடித்து வருகிறார்கள். காவல்துறை இதை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க மாட்டோம். விரைவில் நடவடிக்கை எடுப்போம். வேகமாக செல்ல கூடாது." என்று எச்சரித்தார்.
ஜிபி முத்துவுடன் ரெய்டு
அதையும் மீறி டிடிஎப் வாசன் அதிவேகமாக பைக்கில் பயணம் செய்து வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். கடந்த நவம்பர் மாதம் டிக்டாக் பிரபலம் ஜிபி முத்துவுடன் பைக்கில் சென்ற டிடிஎப் வாசன் வெளியில் வீடியோவில் மக்கள் செல்லும் பாதையில் டிடிஎப் வாசன் அதிவேகத்தில் சென்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
போலீஸ் வழக்குப்பதிவு
இந்த நிலையில் அவர் மீது கோவை போத்தனூர் காவல்நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதேபோல் கோவை சூலூர் காவல்நிலையத்திலும் டிடிஎப் வாசன் மீது மேலும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அடுத்தடுத்து டிடிஎப் வாசன் மீது பதிவு செய்யப்படும் வழக்குகளின் காரணமாக அவர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்பட்டது.
நீதிமன்றத்தில் வீடியோ
ஆனால், அவர் இதுவரை கைது செய்யப்படாமல் உள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரான டிடிஎப் வாசன் கோர்டு சூட்டுடன் கெத்தாக நடந்து வருவதை போன்றும், பின்னால் வன்முறை தொடர்பான கேஜிஎப் வசனத்தை ஓடவிட்டு வீடியோ வெளியிட்டார். இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
காவல்துறைக்கே சவால்
அதேபோல் சமீபத்தில் கடலூரில் தன்னுடைய ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அவர் சென்று இருக்கிறார். அங்கு ஒரு இயக்குநரின் சினிமா அலுவலக திறப்பு விழாவுக்காக சென்ற டிடிஎப் வாசனை அவரது சப்ஸ்கிரைபர்கள் ஏராளமானோர் சூழந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் காவல்துறையினர் அவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர். இதனால் காவல்துறைக்கே சவால் விடும் வகையில் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
2 கைகளைவிட்டு பைக் பயணம்
கடந்த வாரம் தன்னுடைய பெண் தோழியுடன் பைக்கில் சென்ற அவர், அப்போது நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிகமாக பைக்கில் லாரிகளுக்குள் புகுந்து செல்லும் வீடியோவை வெளியிட்டார். அதில்,2 கைகளையும் விட்டுக்கொண்டு அவர் பைக்கை ஓட்டிச் சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
நேர்காணலில் கோபம்
இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த டிடிஎப் வாசனிடம், விதிகளை மீறி அதிவேகத்தில் பைக்கில் செல்வது குறித்தும் காவல்துறைக்கே சவால் விடுக்கும் விதத்தில் பேசுவது பற்றியும், நீதிமன்றத்துக்கு செல்லும்போது வீடியோ வெளியிட்டது குறித்தும் நெறியாளர் அதிகளவில் கேள்விகள் எழுப்பினார். இதற்கெல்லாம் பதிலளிக்க முடியாமல் தடுமாறிய டிடிஎப் வாசன் ஒருக்கட்டத்தில் வெறும் சர்ச்சையாக கேள்வி கேட்கிறீர்களே என்று கோபத்தில் மைக்கை கழற்றி வைத்துவிட்டு எழுந்து சென்றார்.