உதயநிதி பற்ற வைத்த நெருப்பு.. பிரதமர் மோடியே 'இனப்படுகொலை' டோனில் பேச்சு.. பாஜகவின் தேர்தல் ஆயுதம்?
சென்னை: தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 'சனாதன ஒழிப்பு' முழக்கத்தை தற்போது பாஜக தமது தேர்தல் பிரசார ஆயுதமாக கையில் எடுத்திருக்கிறது. பிரதமர் மோடியே, அரசு நிகழ்ச்சியில் கூட சனாதன விவ்காரம் குறித்து பேசுவது என்பது லோக்சபா தேர்தல் வரை இதனை விடாப்பிடியாக பாஜக கெட்டியாக பிடித்துக் கொள்ளும் என்பதாகவே தெரிகிறது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
தமிழ்நாட்டில் சனாதனம் எதிர்ப்பு, சனாதனம் எதிர்ப்பு மாநாடு, மனுஸ்மிருதி எரிப்பு, சனாதன எதிர்ப்பு மாநாடுகள் என்பது இயல்பான நடவடிக்கைகளில் ஒன்று. திராவிடர் கழகம், அதில் இருந்து பிரிந்து சென்ற அமைப்புகள்தான் இத்தகைய சனாதன எதிர்ப்பு முழக்கத்தை முன்வைத்தும் போராட்டங்களை நடத்தியும் மாநாடுகளை நடத்தியும் வந்தது.

இடதுசாரிகள் மாநாடு: பிராமணியம் தொடர்பான மென்மையான நிலைப்பாடு கொண்டவர்களாக விமர்சிக்கப்படும் இடதுசாரிகளின் தமுஎகசவும் சனாதன ஒழிப்பு மாநாட்டை நடத்தியது கருத்தியல் போராட்டங்களில் ஒரு படிநிலை முன்னேற்றமாகவே பார்க்கப்பட்டது. அதுவும் அந்த மாநாட்டில் திராவிடர் இயக்கத்தவரும் ஆளும் திமுக தலைவர்களும் பங்கேற்றது சிறப்புக்குரியது என்பது திராவிடர் இயக்க பார்வையாளர்கள் கருத்து.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முழக்கம்: இப்பின்னணியில் சனாதன ஒழிப்பு மாநாட்டில், சனாதனத்தை ஒழிப்போம் என தமிழ்நாடு அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசாமல் இருக்க முடியாது; அது இயல்பான ஒரு முழக்கம்தான். ஆனால் காய்ந்த மாடு தீனிக்கு அலைந்தது போல, எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்பதாக தேர்தல் பிரசாரத்துக்கு எது ஆயுதம் என ஏங்கிக் கிடந்த பாஜக இப்போது கெட்டியாக இதனைப் பிடித்துக் கொண்டது.
மோடியின் பேச்சு: சனாதனத்தை ஒழிப்போம் என்கிற உதயநிதியின் பேச்சு கருத்தியல் சார்ந்தது. ஆனால் சனாதனிகளை இனப்படுகொலை செய்வோம் என உதயநிதி பேசியதாக பாஜகவின் ஐடிவிங் பொய் பரப்புரை செய்தது. இந்தப் பொய் பரப்புரையை பின்பற்றி பிரதமர் மோடி கூட அதே டோனில் நேற்று மத்திய பிரதேச அரசு நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். இன்று சனாதனத்தை தாக்குகிறார்கள்; நாளை நம் மீதான தாக்குதல்களை அவர்கள் அதிகப்படுத்துவார்கள்; ஆகையால் சனாதனிகளே இந்தியாவை பாதுகாக்க ஒன்று சேருவோம் என 'இந்துக்கள்' வாக்குகளை ஒருமுகப்படுத்தும் வகையில் நாட்டின் பிரதமரே பேசியிருக்கிறார்.
மோடியின் ஆவேச பேச்சு: சனாதன எதிர்ப்பு முழக்கம் தொடர்பாக நாட்டின் மத்திய அமைச்சரவையை கூட்டி விவாதித்து மத்திய அமைச்சர்கள் பதில் சொல்ல வேண்டும் என அரச கட்டளை பிறப்பித்த பிரதமர் மோடி, இப்படித்தான் பேசுவார்; சனாதனத்தை எதிர்ப்போர் நாக்கை அறுப்போம் என மத்திய அமைச்சர்களும் அப்படித்தான் பேசுவார்கள். தற்போதைய நிலையில் பாஜக, உதயநிதி பற்ற வைத்த பெருநெருப்பை அணையாமல் பார்த்துக் கொள்ளும் என்றுதான் தெரிகிறது. வட இந்திய, இந்துக்கள் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் சேர்க்க சனாதன எதிர்ப்பு அல்லது சனாதன ஒழிப்பு என பேசுகிறார்களே என்கிற ஓலத்தை பாஜக ஒரு பிரதான தேர்தல் ஆயுதமாக கையில் எடுக்கிறது என்பதைத்தான் இந்த பேச்சுகளும் மிரட்டல்களும் வெளிப்படுத்துகின்றன என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications