திமுக இந்து விரோத கட்சி என்ற அவதூறை நொறுக்கிவிட்டார் சேகர் பாபு.. நெகிழ்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின்
சென்னை: திமுக மீதான அவதூறை அடித்து உடைத்து செயல்படுகிறார் அமைச்சர் சேகர் பாபு என எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பொங்கல் திருநாளையொட்டி துறைமுகம் சட்டசபை தொகுதியில் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களின் குடும்பங்களுக்கு புத்தாடைகள், பொங்கல் தொகுப்பு நிதியுதவி மற்றும் 2022-ம் ஆண்டிற்கான நாட்காட்டி வழங்கும் நிகழ்ச்சியை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் முதற்கட்டமாக தொடங்கி வைக்கும் விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் அமைச்சர் சேகர்பாபு, எம்பி தயாநிதிமாறன், எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் எம்எல்ஏ உதயநிதி பேசினார்.

பரிசு பொருட்கள்
அவர் பேசுகையில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் உங்களை எல்லாம் சந்தித்து பரிசு பொருட்களை விநியோகிப்பது வழக்கம். இந்த விழாவை அண்ணா அறிவாலயத்தில் நடத்த அமைச்சர் சேகர்பாபு 10 நாட்களுக்கு முன்பே அனுமதி பெற்றிருந்தார். இந்த நிகழ்ச்சி நேற்று நள்ளிரவு வரை நடக்குமா நடக்காதா என இறுதியாகாமல் இருந்தது.

கொரோனா 2ஆவது அலை
இதற்கு காரணம் கொரோனா தொற்று. உள்அரங்கில் கூட்டங்களை நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. கொரோனா 2ஆவது அலை வந்த போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்த போது நாம் எல்லாம் தீவிரமாக செயல்பட்டு அதை ஒழித்தோம். தற்போது மூன்றாவது அலை மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது.

கொரோனா கட்டுப்பாடுகள்
ஓமிக்ரான், தொற்றும் பரவி வரும் நிலையில் உள்அரங்கில் 100 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதித்து அரசு உத்தரவு போட்டுள்ளது. நேற்று இரவு வரை அன்பகத்தில் இந்த நிகழ்வு நடப்பதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியை ஒத்தி வைக்கலாமா என அமைச்சர் சேகர் பாபுவை கேட்ட போது முடியவே முடியாது என்றார். சேகர் பாபு ஒன்றை நினைத்தால் அதை செய்து காட்டிடுவார் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும்.

அண்ணா அறிவாலயம்
அத்தனை பிடிவாதம் பிடித்து முதல்வர் ஸ்டாலினிடம் பேசி அறிவாலயத்தில் உள் அரங்கில் நடத்தாமல் திறந்தவெளியில் நடத்தி கொள்ளுமாறு அனுமதி வாங்கினார். அதிலும் 100 பேருக்கு மட்டுமே அனுமதி என தெரிவித்தார். இந்த மூன்றாவது அலையையும் சிறப்பாக கையாண்டு தமிழக அரசு மக்களை காப்பாற்றும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நம்பர் 1 முதல்வர்
வடநாட்டிலிருந்து வரும் பத்திரிகையாளர்கள் எல்லாம் இந்தியாவின் நம்பர் 1 முதல்வர் ஸ்டாலின் என்கிறார்கள். ஆனால் நம் முதல்வர் ஸ்டாலினோ , நான் நம்பர் 1 ஆக இருப்பது முக்கியமல்ல. தமிழகத்தை நம்பர் 1ஆக்குவதுதான் முக்கியம் என்றார். இந்தியாவிலேயே நம்பர் 1 முதல்வர் ஸ்டாலின் என்றால் தமிழக அமைச்சரவையில் நம்பர் 1 அமைச்சர் சேகர்பாபுதான்.

சேகர்பாபுவை பாராட்டிய உதயநிதி
எல்லா அமைச்சர்களும் நம்பர் 1தான். நம்பர் 1இல் நீங்கள்(சேகர்பாபு) தான் நம்பர் ஒன். இதை ஏன் சொல்கிறேன் என்றால், திமுக ஆட்சி அமைப்பதற்கு முன்னர் நம் கட்சி மீது தவறான தோற்றத்தை உருவாக்கி வைத்திருந்தார்கள். திமுக இந்து விரோத கட்சி என தவறாக கருத்து இருந்தது. அதை அடித்து உடைத்து சிறப்பான வகையில் சேகர்பாபு செயலாற்றிக் கொண்டிருக்கிறார் என்றார் உதயநிதி.












Click it and Unblock the Notifications