‘ஜஸ்ட் பாஸ் தான்..’ பாருங்க.. அமைச்சர் அன்பில் மகேஷ் முறைக்கிறாரு.. உதயநிதி ஸ்டாலின் கலகல பேச்சு!
சென்னை : சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பள்ளியில் படித்த காலத்தில் தமிழில் மட்டும் அதிக மதிப்பெண் பெறுவேன் எனக் கூறியுள்ளார்.
மற்ற பாடங்களில் ஜஸ்ட் பாஸ் ஆவேன். ஆனால், தமிழில் மட்டும் அதிக மதிப்பெண் பெறுவேன். அதற்கெல்லாம் காரணம் கருணாநிதி உரையைக் கேட்டதுதான் என்று நினைக்கிறேன் என உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
மேலும், தான் பள்ளிக்கூடத்தில் படித்தபோது படிப்பு விஷயத்தில் அப்பா ஸ்டாலின் கண்டிப்போடு இருக்க மாட்டார் என்றும், அம்மாதான் மிகவும் கண்டிப்பாக இருப்பார் என்றும் தெரிவித்தார் உதயநிதி ஸ்டாலின்.
யாராலும் அசைக்க முடியாது- திமுக மேலிடம் கையில் எடுத்த எடப்பாடி பார்முலா.. உ.பி.க்கள் 'மகிழ்ச்சி'
திருவாரூர் முத்துவேல் கருணாநிதி
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நேர்காணல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்வி மற்றும் பதில்கள் அடங்கிய 'திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான்' என்ற நூலை திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி எழிலரசன் தொகுத்துள்ளார். இதன் வெளியீட்டு விழா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த நூலை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. வெளியிட, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெற்றுக் கொண்டார். நக்கீரன் கோபால், திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
திருவாரூர் - திருவல்லிக்கேணி
இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ பேசுகையில், "இந்த புத்தகம் தயார் செய்ய கிட்டத்தட்ட சுமார் 6 மாத காலம் ஆனது. புத்தகத்தை தயார் செய்த பிறகு என்னை அழைத்து புத்தகத்தை வெளியிடச் சொன்னார்கள். இந்த நிகழ்ச்சி அன்பகத்தில் நடத்தப்படவில்லை என்று எனக்கு வருத்தம். ஏனென்றால் அங்கு நடைபெற்றால் மாணவர் அணி வருமானம் கிடைத்திருக்கும். கலைஞர் கருணாநிதி திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் கடைசியாக வெற்றி பெற்றார். இப்போது நான் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இந்தப் புத்தகத்தை வெளியிட வந்து இருக்கிறேன்.
இளைஞரணி செயலாளர் பதவி
இளைஞர் அணி மாநில செயலாளர் பொறுப்பு வழங்கும்போது நான் வேண்டாம் என்று கூறினேன். வேறு ஏதாவது சிறிய பொறுப்பு வழங்குங்கள், அதில் பணிகளை பார்த்துவிட்டு இந்தப் பொறுப்பை கொடுக்கலாம் என்று தெரிவித்தேன். ஆனால் அதை எல்லாம் கேட்காமல் நீங்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று சொல்லி எனக்கு மிகப்பெரிய பொறுப்பைக் கொடுத்தார்கள். இளைஞர் அணியை எப்படி எல்லாம் வழி நடத்த வேண்டும் என்று மாணவரணி செயலாளர் எழிலரசன் எனக்கு கற்றுக் கொடுத்தார்.
மகேஷ் முறைக்கிறார்
தாத்தாவின் நூலை வெளியிட பேரன் வந்திருக்கிறேன். பள்ளிக்கூடம் படிக்கும்போது நான் கோபாலபுரம் இல்லத்தில் தான் வளர்ந்தேன். அப்பா, படிப்பு விஷயத்தில் ரொம்ப கண்டிப்பாக எல்லாம் இருக்க மாட்டார். பாஸ் ஆகிவிடு போதும் என்பார்.. (அப்போது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முறைக்கிறார் என சிரித்தபடி கூறினார் உதயநிதி ஸ்டாலின்) அம்மா மிகவும் கண்டிப்பானவர்.
தமிழில் மட்டும்
கோபாலபுரம் இல்லத்தில் நான் இருக்கும்போது கலைஞர் பேசியது எல்லாம், ரெகார்ட் கேசட் மூலம் வீட்டுக்கு வரும். குட்டி பிஏ சண்முகநாதன் அவற்றைக் கேட்கும்போது நானும் அவற்றைக் கேட்பேன். மற்ற பாடங்களில் ஜஸ்ட் பாஸ் ஆவேன். தமிழில் மட்டும் அதிக மதிப்பெண் பெறுவேன். 85 - 90 மதிப்பெண் பெற்று வகுப்பிலேயே முதல் அல்லது இரண்டாவது மதிப்பெண் பெற்றுவிடுவேன். அதற்கெல்லாம் காரணம் கருணாநிதி உரையைக் கேட்டதுதான் என்று நினைக்கிறேன்.
திராவிட மாடல்
பெரியார், அண்ணா, கலைஞர் மாடல்களின் கலவையாக தற்போது மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை கொடுத்து வருகிறார். அதற்கு எதிர்க்கட்சியை சேர்ந்த பா.ஜ.க.வினரே, கருணாநிதியை விடவும் மு.க.ஸ்டாலின் ஆபத்தானவர் என்று கூறி ஒப்புதல் கொடுத்துவிட்டார்கள். இது மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு. அடுத்த முறையும் தி.மு.க தான் ஆட்சி அமைக்கப் போகிறது. அதை யாராலும் தடுக்கமுடியாது. மு.க.ஸ்டாலின் நடத்தி வரும் நல்லாட்சியையும், நல்ல திட்டங்களையும் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். அதற்கு அத்தனை பேரும் உதவ வேண்டும்.
கருணாநிதி சொன்ன பதில்
கருணாநிதியிடம் திமுகவின் அடையாளமாக அந்நாட்களில் அறியப்பட்ட போர்க்குணம் மிக்க எதிர் அரசியலை பார்க்க முடியவில்லையே என கேட்கப்பட்டதற்கு அவர் அளித்த பதில், "தி.மு.க.வின் போர்க்குணம் குறைந்து விடவில்லை. அது என்றைக்கும் குறையாது. இன்றைக்கும் ஜனநாயகத்திற்கு பாதகமான ஒரு சம்பவம் நடந்தால் திமுகவின் போர்க்குணத்தை நீங்கள் பார்க்கவே செய்வீர்கள்." மத்திய அரசால் பழிவாங்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலோ அல்லது தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டாலோ தி.மு.கவின் போர்க்குணம் கண்டிப்பாக வெளிப்படும்" எனப் பேசினார்.