இதுதான் அமைச்சர் தங்குற ரூமா? கடலூரில் டென்ஷனான எல்.முருகன்.. முதல்வர் வரை சென்ற புகார்! என்னாச்சு?
சென்னை : மத்திய அமைச்சர் எல்.முருகன், கடலூரில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்திற்குச் சென்றிருந்த நிலையில், கடலூர் சர்க்யூட் ஹவுஸில் நல்ல அறை ஒதுக்கப்படாமல் தாம் அவமதிக்கப்பட்டதாக முதலமைச்சர் அலுவலகத்திற்கு புகார் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று கடலூரில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்திற்காக வந்திருந்த எல்.முருகனுக்கு கடலூர் சர்க்யூட் ஹவுஸில் அறை ஒதுக்கப்பட்டிருந்தது.
ஆனால், அந்த அறை மிகவும் பழையதாகவும், வசதிகள் இல்லாமலும் இருந்ததால் அதிர்ச்சியடைந்த மத்திய அமைச்சர் எல்.முருகன், அங்கிருந்தவர்களிடம் விசாரித்ததாக கூறப்படுகிறது.
புதிய அறைகள் மாநில அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதால் டென்ஷன் ஆன எல்.முருகன் இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர், முதன்மை செயலாளர், முதல்வரின் நேர்முக உதவியாளர் என அனைவருக்கும் போன் செய்து ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அட கொடுமையே! பாஜக நடத்திய கபடி போட்டி.. விளையாடகூட வராத அணிகள் -மணி கணக்கில் காத்திருந்த எல்.முருகன்
பாஜக மாநில செயற்குழு
கடலூரில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த செயற்குழுவிற்கு மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கிப் பேசினார். இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும், கட்சியின் மாநில நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
முக்கிய முடிவுகள்
இந்த கூட்டத்தில் 9 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு சட்டப் பேரவையில் அரசியல் சாசன வரம்பை மீறி ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் நடந்த அராஜகத்தைக் கண்டித்தும், ஆளுநர் உரையின் போது ஆளும்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியினரின் நடவடிக்கைகளைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், அண்னாமலை மேற்கொள்ளும் நடைபயணமும் இந்த செயற்குழுவில் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
கடலூர் சர்க்யூட் ஹவுஸ்
முன்னதாக, இந்த செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க கடலூர் வந்த மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு கடலூர் சுற்றுலா மாளிகையில் (சர்க்யூட் ஹவுஸ்) அறை முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. நேற்று மாலை 3 மணியளவில் சர்க்யூட் ஹவுஸுக்கு வந்த எல்.முருகனுக்கு பழைய கட்டிடத்தில் உள்ள சூட் ரூம் ஒதுக்கப்பட்டுள்ளது. அறைக்குள் நுழைந்த மத்திய அமைச்சர் முருகன், அங்கு பழைய பெட்ஷீட், தலையணை என அறை க்ளீனாக இல்லாததால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
எல்.முருகன் கோபம்
உடனே வெளியே வந்த மத்திய அமைச்சர் எல்.முருகன், அருகே இருந்த புதிய பில்டிங்கில் உள்ள சூட் ரூம்களை திறந்து காட்டச் சொல்லியுள்ளார். அங்கிருந்த ஊழியர்கள், அமைச்சருக்கு அந்த ரூம்களை திறந்து காட்டிய நிலையில், அவை சுத்தமாக இருந்துள்ளன. இதையடுத்து, இந்த ரூம் காலியாக இருக்கும்போது பிறகு எனக்கு ஏன் பழைய ரூமை ஒதுக்கினீர்கள் என கோபமாகக் கேட்டுவிட்டு, உடனே அருகில் இருந்த தனியார் ஹோட்டலுக்குச் சென்றுள்ளார் எல்.முருகன்.
கலெக்டரிடம் டென்ஷன்
அங்கிருந்து கடலூர் மாவட்ட ஆட்சியரை தொடர்புகொண்டு, சர்க்யூட் ஹவுஸில் புதிய பில்டிங்கில் நல்ல ரூம் இருக்கும்போது எனக்கு ஏன் பழைய ரூமை கொடுத்தீர்கள் எனக் கேட்டுள்ளார் எல்.முருகன். அதற்கு கலெக்டர், மாநில அமைச்சர்கள் வரவிருப்பதால் அவர்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், பழைய பில்டிங்கிலும் அறைகள் நன்றாகத்தான் இருக்கும் என்றும் கூறி இருக்கிறார். இதனால் டென்ஷன் ஆன எல்.முருகன், "நீங்களே வந்து தங்கிப் பாருங்க" என எகிறியுள்ளார்.
முதல்வருக்கு புகார்
தன்னை திட்டமிட்டு அவமதிப்பதாகக் கருதிய மத்திய அமைச்சர் எல்.முருகன் உடனே தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்புவையும், முதல்வரின் தனி செயலாளர் உதயசந்திரனையும் போனில் தொடர்புகொண்டு இதுகுறித்து தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், முதல்வர் ஸ்டாலினிடமே நேரடியாக முறையிடுவதற்காக அவருக்கும் அழைத்திருக்கிறார் எல்.முருகன். முதல்வரின் உதவியாளர் பேசிய நிலையில், தனக்கு கடலூர் சர்க்யூட் ஹவுஸில் நடந்த விஷயத்தைப் பற்றி விலாவரியாகக் கூறியிருக்கிறாராம்.
பரபரப்பு
இந்த விவகாரம் பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது. ஏற்கனவே பாஜக - திமுக அரசு இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சருக்கு சரியான வசதிகள் செய்து கொடுக்காத விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு இதுகுறித்து ஆக்ஷன் எடுக்காவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கைகளிலும் எல்.முருகன் இறங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.