அடிதூள்! சுய உதவி குழுக்களுக்கு ரூ.100 கோடி வங்கி கடன்! வழங்கும் உதயநிதி ஸ்டாலின்
சென்னை: சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.100 கோடி வரையில் வங்கி கடன்களை அளிப்பதற்கான உத்தரவுகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்குகிறார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. அதில் மிக முக்கியமான திட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் பார்க்கப்படுகிறது. இந்த திட்டங்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்த நிலையில், மேலும் சில திட்டங்களை அமல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியிருந்தது.

தமிழகத்தை பொறுத்த அளவில் சுய உதவிக்குழுக்கள் மிக முக்கியமானவையாகும். கிராமப்புறங்களில் பொருளாதார வளர்ச்சி பெரும் அளவில் இருக்காது. ஆனால் அதை குறையவிடாமல் பார்த்துக்கொள்வது அரசின் கடமையாகும். இந்த சிந்தனையின் பின்னணியில்தான் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. இந்த குழுக்கள் மூலம் கடன் கொடுப்பதால் கிராமத்தின் பொருளாதாரம் தொடர்ந்து இயங்கும். எனவே இந்த குழுக்களை உயிர்ப்புடன் வைத்திருக்க ஆண்டு தோறும் குறிப்பிட்ட அளவு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்படும்.
கடந்த ஆண்டு ரூ.20,000 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.21,500 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல இந்தமுறை ரூ.25,000 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.100 கோடி வரையில் வங்கி கடன்களை அளிப்பதற்கான உத்தரவுகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்குகிறார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், "
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நகர்ப்புற சுய உதவிக் குழுக்களில் உள்ள மகளிர் பயன் பெறும் வகையில் வங்கிக் கடன் இணைப்பு, நகர்ப்புற சாலையோர வியாபாரிகளுக்கு உணவுத்தரச் சான்றிதழ். திறன் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு ஓட்டுநர் உரிமம் / பணி நியமன ஆணைகள், சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த சிறு தொழில் முனைவோர்களுக்கு கடனுதவிகள், நகர்ப்புற சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்பான முறையில் வங்கிக் கடன் வழங்கிய வங்கிகளுக்கு வங்கியாளர் விருதுகள் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.
முத்தமிழறிஞர் கலைஞரால், மகளிரின் முன்னேற்றத்திற்காக, 1989ம் ஆண்டு முதன்முறையாக தருமபுரி மாவட்டத்தில் துவங்கப்பட்ட மகளிர் திட்டம் இன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது சமூக, பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கு சுய உதவிக் குழுக்கள் மற்றும் இத்திட்டத்தின் மூலம் சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை உருவாக்கி, முறையான பயிற்சிகள் வழங்கி, வருமானம் ஈட்டும் தொழில்களைத் தொடங்க வங்கிக் கடன் இணைப்புகள் ஏற்படுத்தி சுய உதவிக் குழு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறது.
மகளிரின் முன்னேற்றத்திற்கான அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் அங்கமான தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் நகர்ப்புறங்களில் சுய உதவிக் குழு இயக்கத்தின் வளர்ச்சிக்காக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் கீழ் நகர்ப்புறங்களில் சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகள் அமைக்கப்பட்டு, அவற்றின் உறுப்பினர்களுக்கு தொழிற்பயிற்சிகள், வங்கிக் கடன் இணைப்புகள், சுய தொழில் வாய்ப்புகள் போன்றவை உருவாக்கித் தரப்படுகின்றன.
இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நகர்ப்புற சுய உதவிக் குழுக்களில் உள்ள மகளிர் பயன் பெறும் வகையில் வங்கிக் கடன் இணைப்பு. நகர்ப்புற சாலையோர வியாபாரிகளுக்கு உணவுத்தரச் சான்றிதழ், திறன் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு ஓட்டுநர் உரிமம் / பணி நியமன ஆணைகள், சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த சிறு தொழில் முனைவோர்களுக்கு கடனுதவிகள், நகர்ப்புற சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்பான முறையில் வங்கிக் கடன் வழங்கிய வங்கிகளுக்கு வங்கியாளர் விருதுகள் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்களுக்கு சான்றிதழ்கள் ஆகியவற்றை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கவுள்ளார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வங்கிகளின் அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications