சபாஷ்..! செம செய்தி.. கல்லூரிகளில் பாடமாக அறிமுகமாகும் திருக்குறள்.. சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு
சென்னை: நடப்பு கல்வியாண்டில் திருக்குறள் ஒரு பாடமாக அறிமுகம் செய்யப்படும் என சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கவுரி அறிவித்துள்ளார்.
உலகப் பொதுமறையான திருக்குறளைப் பிரதமர் மோடி தொடங்கி பல்வேறு தலைவர்களும் தங்கள் பேச்சுகளில் மேற்கோள்காட்டிப் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சமீபத்தில் டெல்லி சென்றிருந்த முதல்வர் ஸ்டாலினும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் எனப் பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தில் திருக்குறள் தனி பாடமாக அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'தொழில் தர்மத்துக்கான திருக்குறள்' என்ற பெயரில் ஒரு பாடமாகத் திருக்குறள் அறிமுகம் செய்யப்படுகிறது. இத்தகவலைச் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி உறுதி செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், நடப்பு கல்வியாண்டில் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளில் திருக்குறள் பாடமாக அறிமுகப்படுத்தப்படும். மேலும், பல்கலைக்கழகத்தின் கல்வித் தரத்தை உயர்த்த பல சீர்திருத்தங்களைக் கொண்டு வர ஓய்வுபெற்ற துணைவேந்தர்கள் அடங்கிய உயர்மட்ட குழு ஒன்றை அமைக்கவும் முடிவு செய்துள்ளோம்" என்றார்.