வடபழனி முருகன் கோவில் குடமுழுக்கு: வானத்தில் கருடன்கள் வட்டமிட கோபுரத்திற்கு புனித நீர் அபிஷேகம்
வடபழனி முருகன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் கோலகலமாக நடைபெற்றது. பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்ற இந்த குடமுழுக்கு விழா நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
சென்னை: வானத்தில் கருடன்கள் வட்டமிட்டு ஆசி வழங்க... கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா முழக்கம் எதிரொலிக்க சென்னை வடபழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் யாரும் நேரடியாக அனுமதிக்கப்பட வில்லை என்பதால் குடமுழுக்கு விழா நிகழ்வுகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
பழனியில் உள்ள தண்டாயுதபாணியைப் போல சிறப்பு வாய்ந்த ஆலயம் சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவில். இது செவ்வாய் ஸ்தலமாகவும் போற்றப்படுகிறது. சென்னையில் உள்ளவர்கள் மட்டுமின்றி, பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வருவது வழக்கம்.
இலங்கை கடற்படை பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் 105 படகுகள் ஏலம்- 5 நாட்கள் நடத்த முடிவு!
இந்த ஆலயத்தின் மூலவராக பழநி தண்டாயுதபாணியாக நின்ற கோலத்தில் காட்சி அளிக்கின்றார்.
இங்குள்ள முருகனுக்கு வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை,ஐப்பசி மாத கந்த சஷ்டி விழா, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் சிறப்பாக விழா நடைபெறும்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி
கடந்த 1890ம் ஆண்டு மிகவும் எளிய ஓலைக்கூரைக் கொட்டகையுடன் இந்த கோயில் கட்டப்பட்டது. இந்த கோயில் அண்ணாசாமி நாயக்கர் எனும் முருக பக்தர் தனது சொந்த வழிபாட்டிற்காக கொட்டகையுடன் இந்த கோயில் அமைத்தர் எனவும். அங்கு பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியின் வண்ணப்படத்தை வைத்து வழிபட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முருகனின் தெய்வீக சக்தி
தன்னுடைய நாக்கை அறுத்து முருகனுக்கு காணிக்கையாக்கினார். இதற்கு பாவாடம் என்று பெயர். இதனால் அவருடைய வயிற்றுவலி நீங்கியது. நாளடைவில் அவர் முருகப்பெருமானின் தெய்வீக சக்தியை உணரத் தொடங்கினார். அதன் பின் அவர் சொல்லக்கூடிய அருள்வாக்கு பலருக்கும் உண்மையாக நடப்பதாக கூறினர். அதனால் மக்கள் தங்களின் அன்றாட பிரச்னை தீர அண்ணாசாமி நாயக்கரிடம் அருள்வாக்கு பெற்றனர்.
சித்தர்கள் ஆலயம்
பின்னர் மக்களின் அதிக வருகையாலும், ஆதரவாலும் கோயில் புகழ் பெற்றது. 1920ஆம் ஆண்டில் இந்த கோயில் ராஜ கோபுரம் கட்டப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.ஆண்டுக்கு சுமார் 7 ஆயிரம் தம்பதியர் இந்த ஆலயத்தில் திருமணம் செய்து கொள்கின்றனர். பல முருகன் கோவில்களில் இல்லாத ஆஞ்சனேயர் சன்னதி இங்கு உண்டு. தென்பழநி கோவிலுக்குச் செய்வதாக வேண்டிக்கொண்ட காணிக்கைகளை இக்கோவிலில் செலுத்துவதும் உண்டு. மூன்று சித்தர்களால் பூஜிக்கப்பட்ட இந்த ஆலயத்தில் இன்றைக்கும் சித்தர்களுக்காக தனி வழிபாடு பௌர்ணமி நாட்களில் நடைபெறுகிறது.
மஹாகும்பாபிஷேகம்
இந்த கோயிலில் கடந்த 2007ஆம்ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பிறகு தற்போது கோயில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் வியாழக்கிழமையன்று தொடங்கின. கோயிலுக்குள் 108 குண்டங்களுடன் பிரம்மாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.
யாகசாலையில் வைத்து பூஜிப்பதற்காக கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகளில் இருந்தும், ராமேஸ்வரம் தீர்த்தக்கிணறு, அறுபடை முருகன் கோயில்கள் என 15 இடங்களில் இருந்தும் புண்ணிய தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. வெள்ளிக்கிழமையன்று காலை 9 மணிக்கு இரண்டாம் கால பூஜை தொடங்கி பகல் 12 மணிக்கு மகா பூர்ணாஹூதியுடன் நிறைவு பெற்றது. பின்னர் மாலை 5.30 மணிக்கு மூன்றாம் கால பூஜைகள் நடந்தன.
கோபுர கலசத்திற்கு ஆசி
நேற்றும் யாகசாலை பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றன. ஆறு கால பூஜைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து இன்று காலை குடமுழுக்கு நடைபெற்றது. வானத்தில் கருடன்கள் வட்டமிட்டு ஆசி வழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. கொரோனா வைரஸ் பரவல் மற்றும் முழு ஊரடங்கு காரணமாக கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் அனைத்தும் தொலைக்காட்சி, யூ-டியூப் சேனல் போன்றவை மூலம் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது . வீட்டில் இருந்தவாரே பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா என முழக்கமிட்டு குடமுழுக்கு விழாவை தரிசனம் செய்தனர்.