நீறு பூத்த நெருப்பு! துரை வைகோவை எதிர்க்கும் அந்த 15 பேர்- கட்டம் கட்டும் மதிமுக?
சென்னை; மகன் துரை வைகோவுக்கு கட்சி பதவி தரக் கூடாது என்பது தமது விருப்பம் என கூறி வரும் வைகோ, ரகசிய வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்தாரா? ஆதரித்து வாக்களித்தாரா? என அதிருப்தி நிர்வாகிகள் கேள்வி எழுப்புவதாக மதிமுக தலைமையகமான தாயக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ம.தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்கள், உயர்நிலை குழு உறுப்பினர்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் ரகசிய வாக்கெடுப்பு மூலம் தனது மகன் துரை வைகோவை கட்சியின் தலைமை நிலையச் செயலாளராக நியமிக்க ஆதரவு பெறப்பட்டது. அதன்படி நியமிக்கப்பாட்டார் துரை வைகோ.
சங்கராபுரம் பட்டாசு கடை தீ விபத்தில் 7 பேர் பலி - பட்டாசு கடை உரிமையாளர் மீது வழக்குபதிவு
ஆனால் இந்த கூட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட மாநில-மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கவில்லை. மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி, நாகர்கோயில் கோட்டார் கோபால்( தணிக்கை குழு உறுப்பினர்), துரை சந்திரசேகரன் (முன்னாள் அமைச்சர் புதுகோட்டை மாவட்ட செயலாளர்), தேனி பொடா அழகுசுந்தரம்( கொள்கை பரப்பு செயலாளர்), வழக்கறிஞர் தேவதாஸ் (வழக்கறிஞர் பிரிவு செயலாளர்), புலவர் செவந்தியப்பன் ( சிவகங்கை மாவட்ட செயலாளர்), மாரியப்பன் ( திருப்பூர் மாவட்ட செயலாளர்), டி.ஆர்.ஆர் செங்குட்டுவன் ( திருவள்ளூவர் மாவட்ட செயலாளர்), திருச்சி வீரபாண்டி (வழக்கறிஞர்), ஈஸ்வரன் (இளைஞரணி செயலாளர்), சண்முகசுந்தரம் (விருதுநகர் மாவட்ட செயலாளர்), மோகன் (மயிலாடுதுறை மாவட்ட செயலாளர்), ஜெ.ராமலிங்கம் (கடலூர் மாவட்ட செயலாளர்.), திண்டுக்கல் மா.செ. செல்வராகன் ஆகியோர் பங்கேற்கவில்லை. இவர்களில் திண்டுக்கல் செல்வராகவன் உள்ளிட்ட சிலர் உடல்நலக் குறைவால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை; துரை வைகோவுக்கு பதவி தர ஆதரவு தருகிறோம் என கடிதம் கொடுத்துள்ளனர். ஆனால் பல மூத்த நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர் என்றே கூறப்பட்டு வருகிறது.
ஆதரவு கடிதம் கேட்ட தாயகம்
இந்நிலையில் அதிருப்தியாளர்களை மதிமுக தலைமையகமான தாயக நிர்வாகிகள் தொடர்பு கொண்டு பேசியிருக்கின்றனராம். அப்போது, ஏதோ ஒரு காரணத்திற்காக கூட்டத்துக்கு நீங்கள் வரவில்லை. அது ஒன்னும் பிரச்சனை இல்லை. உடனே நீங்கள், தலைமை கழகச் செயலாளராக நியமிக்கப்பட்ட துரை வைகோவின் நியமனத்தை ஆதரித்து கடிதம் அனுப்புங்கள்.. அது போதும் என வலியுறுத்தினராம்.
ராஜினாமா கடிதம் தரவா?
ஆனால், அதிருப்தியாளர்களோ, துரை வைகோவிடம் கட்சியை ஒப்படைக்கும் முதல் கட்ட நிகழ்வு என்பதால்தான் கூட்டத்துக்கே நாங்கள் வரவில்லை. இப்போ நீங்கள் கடிதம் கேட்கிறீர்களே? எப்படி தருவோம்? வேண்டுமெனில், எங்களின் ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைக்கிறோம். அனுப்பி வைக்கட்டுமா? என எகிறியதால் அதிர்ந்து போனார்கள் நிர்வாகிகள் என்கின்றன தாயக தகவல்கள்.
அதிருப்தியாளர்கள் நீக்கமா?
இதனால், துரை வைகோவை ஆதரிக்காத அந்த நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கலாமா? என மதிமுகவில் விவாதிக்கப்படுகிறதாம். அதாவது, அவர்கள் ராஜினாமா செய்வதற்குள் நாமே நீக்கி விடுவது சரியாக இருக்குமே என்று சிலர் வைகோவிடம் கேட்டுள்ளனராம். ஆனால் அவர்களை நீக்கினால் காரணம் சொல்ல வேண்டுமே... அவர்களே விலகிச் சென்றால் செல்லட்டும் என சொல்லிவிட்டாராம் வைகோ.
துரை வைகோவுக்கு ஓட்டு போட்டாரா?
இதற்கிடையே, எனது மகன் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை; எனக்கு அதில் உடன்பாடும் இல்லை என சொல்லி வருகிறார் வைகோ. அப்படியானால் துரை வைகோவுக்கு பதவி கொடுப்பது குறித்து நடத்தப்பட்ட ரகசிய வாக்கெடுப்பில் மகனுக்கு எதிராகத்தானே வைகோ வாக்களித்திருக்க வேண்டும், ஆனா, அதை செய்தாரா? என்று அதிருப்தியாளர்கள் தரப்பு கேள்வி எழுப்புகிறதாம். இதுகுறித்து மதிமுக வட்டாரத்தில் நாம் பேசியபோது, துரை வைகோ நேரடி அரசியலுக்கு வருவதை ஒரு தந்தையாக வைகோ விரும்பவில்லை. ஆனால் மதிமுக என்கின்ற ஒரு கட்சியின் பொதுச் செயலாளரான வைகோ அதை விரும்புகிறார் என்று புதிய விளக்கத்தை நம்மிடம் தந்தனர்.