டிடிவியுடன் கைகோர்க்கும் ஓபிஎஸ்? தூதாக பறந்த வைத்தி! ஜூலை 11 நினைத்தது நடக்குமா? ஏக்கத்தில் இபிஎஸ்!
சென்னை : எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அறிவித்தது போல ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடக்காது எனவும் தற்போது அதிமுகவில் பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் இதற்கு எதிராக நடந்த அராஜகங்கள் காரணமாக ஒபிஎஸ்ஸின் செல்வாக்கு தொண்டர்கள் பொதுமக்கள் மத்தியில் பல மடங்கு அதிகரித்துள்ளது என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
Recommended Video
பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் ஹாலிவுட் படங்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அதிமுக விவகாரம் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழக ஊடகங்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பேசு பொருளாக மாறியிருக்கிறது.
நாங்கள் தான் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சிகள் என பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தங்களுக்குள் சண்டை போட்டு வந்த நிலையில் நாங்கள் இருக்கும் வரை நாங்கள் தான் பேசுபொருள் என்பதை நிரூபிப்பது போலவே அனைத்து ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் அதிமுக தொடர்பான செய்திகளை ஆக்கிரமித்து இருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

அதிமுக பொதுக்குழு
எடப்பாடி எடுத்த அஸ்திரங்கள் விஸ்வரூபம் எடுப்பது போல தெரிந்தாலும் கடைசியில் அது உப்பு சப்பில்லாமல் முடிந்துபோகிறது. கடந்தபொது குழுவிலேயே அதிமுக ஒற்றைத் தலைவராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடங்கிய வேகத்திலேயே பொதுக்குழு முடிவடைந்ததை அடுத்து இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கும் வழியில்லாமல் போனது.

ஓபிஎஸ் - இபிஎஸ்
அடுத்து நடைபெறவுள்ள பொதுக் குழுக் கூட்டத்திலேயே இந்த ஒற்றை தலைமை தீர்மானம் கொண்டு வரப்படும் எனவும் கட்சியில் ஓபிஎஸ் நீடிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். அதிமுக தரப்பிலிருந்து இது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகாத நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஒருபுறம் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறிய ஓ.பன்னீர்செல்வம் தற்போதைய சூழல் கருதி அந்தத் திட்டத்தை ஒத்தி வைத்து விட்டு சென்னை திரும்பியுள்ளார். அதே நேரத்தில் சென்னையில் இருந்து சசிகலா புரட்சி பயணம் மேற்கொள்வதாக கூறி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் தொடங்கியுள்ளார்.

டிடிவி தினகரன் ஆதரவு
இந்த நேரத்தில் தான் தற்போது டிடிவி தினகரனுடன் ஓ.பன்னீர்செல்வம் ரகசியமாக சந்தித்ததாக பகீர் புகார் கிளம்பியது. அதனை டிடிவி தினகரன் பன்னீர்செல்வமும் மறுத்துள்ளனர். ஆனால் அவர்கள் நேரடியாக சந்தித்து கொள்ளாவிட்டாலும் தூதர்கள் மூலமாக இருவர் இடையே பேச்சுவார்த்தை நடந்து இருப்பது உறுதியாகி இருக்கிறது. குறிப்பாக அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்துக் கிளம்பிய பிறகு டிடிவி தினகரனுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அந்தவகையில் நேற்று தஞ்சையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளருமான வைத்திலிங்கம் அதிமுக நிர்வாகிகளுடன் மிகவும் நெருக்கம் காட்டினார்.

வைத்திலிங்கம் தூது?
இந்த நிகழ்ச்சியில் அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்ட நிலையில் ஒருவருக்கொருவர் ஆறத் தழுவி அன்பை வெளிப்படுத்தியது அதிமுக அமமுக வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அமைதி காப்பது போல இருந்தாலும் ஆரம்பத்திலிருந்தே ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக இருந்து வந்திருக்கிறார் டிடிவி தினகரன். அமமுக நிர்வாகிகள் வெளிப்படையாக ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவிக்க விட்டாலும் தொண்டர்கள் சமூக வலைதளங்களில் ஓபிஎஸ் இருக்கும் வைத்திலிங்கத்திற்கும் ஆதரவாகவே உள்ளதாக கூறப்படுகிறது. டிடிவி தினகரன் தங்கள் தரப்புக்கு ஆதரவு அளிப்பதை அறிந்து உற்சாகத்தில் இருக்கிறது ஓபிஎஸ் தரப்பு.












Click it and Unblock the Notifications