அராஜகமா..நீங்க பார்த்தீங்களா? கடுகடு வளர்மதி! 1972க்கு பிறகு இப்போதான் நடந்துருக்கு! நேரடி அட்டாக்
சென்னை : அதிமுகவில் அராஜகம் நடைபெறுவதாக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ட்விட்டரில் குற்றம் சாட்டியுள்ள நிலையில் அராஜகம் செய்தது யார் என்பது மக்களுக்கு தெரியும் என்றும் ஒற்றை தலைமை வேண்டும் என தொண்டர்கள் நேரில் வந்து ஆதரவு அளிப்பது எப்படி அராஜகம் ஆகும் என முன்னாள் அமைச்சர் வளர்மதி பதிலடி கொடுத்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை சென்னை வானகரம் ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ள நிலையில், ஒற்றைத் தலைமை வேண்டி ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் எடப்பாடிக்கு ஆதரவாய் மாறியது.
5 நாட்கள் ஊடகங்களை சந்திக்காமல் அமைதி காத்து வந்த எடப்பாடி பழனிச்சாமி பின்னர்தான் தனது உண்மை முகத்தை காட்ட தொடங்கினார்.

இபிஎஸ்க்கு ஆதரவு
தான் வீட்டில் இருந்து வெளியே வராமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மாவட்ட செயலாளரை அழைத்து பேசி தனது தரப்புக்கு வர வைத்தார். ஆரம்பத்தில் சற்று சுணக்கம் போல் தெரிந்தாலும் பின்னர் தான் அவரது ஆதரவு வட்டம் விஸ்வரூப வளர்ச்சி அடைந்தது. அதிமுகவில் சுமார் 75 மாவட்ட செயலாளர்கள் இருக்கும் நிலையில் தற்போதைய நிலவரப்படி 70 மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் திரும்பியுள்ளனர்.

ஓபிஎஸ் திட்டம்
இதையடுத்து ஓபிஎஸ் போட்டு வைத்திருந்த மொத்த திட்டமும் தவிடு பொடியான நிலையில் அதிமுகவின் ஒற்றை தலைமையை அதாவது பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி வருவது 99% உறுதியாகியுள்ளது. எடப்பாடிக்கு கடிதம், நீதிமன்றம், காவல் நிலையம் என பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் அவை அனைத்தும் புஸ்வானம் ஆனதால் கலக்கத்தில் இருக்கிறது ஓபிஎஸ் தரப்பு. இந்நிலையில்தான் இன்று காலை பன்னீர்செல்வம் வெளியிட்ட ட்விட்டர் பதிவு அரசியலை மீண்டும் பரபரப்பைக் கிளப்பியது.

பரபரப்பு ட்விட்
அதாவது, "மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்," என்று ஒரு பதிவும், இந்த தருணத்தில், "தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்" என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்." என பதிவிட்டிருந்தார்.

அராஜகம் என புகார்
அதிமுகவில் ஒற்றைத் தலைமையாக தான் உருவெடுக்க வேண்டும் என்பதற்காக மாவட்டச் செயலாளர்களை இபிஎஸ் மிரட்டி பணிய வைப்பதாக ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பு குற்றம் சாட்டிய நிலையில், சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கு என எடப்பாடி பழனிச்சாமியை தான் அவர் மறைமுகமாகக் குறிப்பிடுகிறார் எனவும் சூது கவ்வும் தர்மம் மறுபடி வெல்லும் என குறிப்பிட்டு இருப்பது தற்போது உடைய சூழ்நிலைகள் சரியான பின்னர் மீண்டும் தனது கை ஓங்கும் என்பதை ஓபிஎஸ் சுட்டிக்காட்டி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறினர். இந்நிலையில் ஒற்றை தலைமை வேண்டும் என தொண்டர்கள் நேரில் வந்து ஆதரவு அளிப்பது எப்படி அராஜகம் ஆகும் என முன்னாள் அமைச்சர் வளர்மதி பதிலடி கொடுத்துள்ளார்.

வளர்மதி பதிலடி
சென்னையில் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆதரவு அளித்த பின் செய்தியாளரிடம் பேசிய முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த நிர்வாகியுமான வளர்மதி, அராஜகம் செய்வது யார் என்பது மக்களுக்கு தெரியும் ஒற்றைத் தலைமை வேண்டும் என தொண்டர்கள் நேரில் வந்து ஆதரவு தெரிவிப்பது எப்படி அராஜகம் ஆகும். அதிமுகவில் ஓபிஎஸ்-ஐ ஓரம் கட்டுவதாக கூறுவது தவறு. நாங்கள் யாரையும் ஓரங்கட்டவில்லை. 1922 இல் ஏற்பட்ட எழுச்சிக்குப் பிறகு இப்போது மீண்டும் அதே எழுச்சி அதிமுகவில் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் ஒற்றை தலைமையாக வேண்டும் என விரும்புகிறார்கள் என பேசினார்.












Click it and Unblock the Notifications