'உள்ளாட்சி தேர்தலில்.. விசிகவை மக்கள் அரவணைத்து அங்கீகரித்துள்ளனர்..' திருமாவளவன் எம்பி பெருமிதம்
சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்குக் கிடைத்த வெற்றி நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய நற்சான்று என்றும் விடுதலை சிறுத்தைகளுக்குக் கிடைத்த பேரங்கீகாரம் என்றும் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்,
தமிழ்நாட்டில் விடுபட்ட விடுபட்ட 9 மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் 2 கட்டங்களாக அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது.
இதில் முதல்கட்ட வாக்குப்பதிவில் 74.37% வாக்குகளும் 2ஆம் கட்ட வாக்குப்பதிவில் 78.47% வாக்குகளும் பதிவாகியிருந்தன. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 74 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் தேர்தல்: சீமானின் நாம் தமிழர் கட்சி படுதோல்வி ஏன்?
திமுகவுக்கு மாபெரும் வெற்றி
2ஆவது நாளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தற்போது வரை வெளியான முடிவுகளில் பெரும்பாலான இடங்களை திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளுமே கைப்பற்றியுள்ளன. ஆறு மாதங்களுக்கு முன் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக, இந்தத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. அதேபோல இந்த 9 மாவட்ட உள்ளாட்சி தனித்துப் போட்டியிட்ட பாமகவுக்கும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
விசிக
இதில் திமுக கூட்டணியில் களமிறங்கிய விசிக, மாவட்டக்குழு உறுப்பினருக்கென போட்டியிட்ட 4இல் 3 தொகுதிகளிலும் ஒன்றியக் குழு உறுப்பினருக்கென போட்டியிட்ட 43இல் 27 தொகுதிகளிலும் விசிக வெற்றி பெற்றுள்ளது. இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு கிடைத்த வெற்றி நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய நற்சான்று என்றும் விடுதலை சிறுத்தைகளுக்கு கிடைத்த பேரங்கீகாரம் என்றும் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்,
திருமாவளவன் எம்பி அறிக்கை
இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில், "அக்டோபர் 06 & 09 ஆகிய நாட்களில் ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணியின் சார்பில், ஒன்றியக் குழு மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்களுக்கான சில தொகுதிகளில் விசிக போட்டியிட்டது. அவற்றில் கணிசமான இடங்களில் அனைத்துத்தரப்பு மக்களின் நல்லாதரவோடு வெற்றி வாகை சூடியுள்ளது.
நன்றி
மாவட்டக்குழு உறுப்பினருக்கென போட்டியிட்ட 4இல் 3 தொகுதிகளிலும் ஒன்றியக் குழு உறுப்பினருக்கென போட்டியிட்ட 43இல் 27 தொகுதிகளிலும் விசிக வெற்றி பெற்றுள்ளது. இந்த மகத்தான வெற்றியை வழங்கிய பொதுமக்களுக்கும் வெற்றிக்கு அரும்பாடுபட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கும் என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் வழங்கியுள்ள நற்சான்று
மேலும், கூட்டணியை இணக்கமாகவும் வெற்றிகரமாகவும் வழிநடத்தி சட்டமன்றத் தேர்தலில் சாதித்ததைப் போலவே இத்தேர்தலிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை நிகழ்த்தியுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் எமது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த மகத்தான வெற்றி திமுக அரசின் நல்லாட்சி நிர்வாகத்துக்கும் திமுக தலைமையிலான கூட்டணியின் நல்லிணக்கத்துக்கும் மக்கள் வழங்கியுள்ள நற்சான்றாகும்.
விசிகவை அரவணைத்து அங்கீகரித்துள்ளனர்
அத்துடன், சாதியவாத மதவாத சனாதன பிற்போக்கு சக்திகளின் அபாண்டமான அவதூறுகளை, மக்கள் தமது வாக்குகளால் தகர்த்தெறிந்து மீண்டும் விசிகவை அரவணைத்து அங்கீகரித்துள்ளனர் என்பதற்கான சிறப்புச் சான்றாகும். சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் விசிகவுக்கு மாபெரும் அங்கீகாரத்தை வழங்கி மைய நீரோட்ட அரசியலில் விசிக ஒரு மகத்தான சக்தி என்பதை மீளுறுதி செய்துள்ள எம் தமிழ்ப்பெருங்குடி மக்களுக்கு உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.