பாஜக இங்கு வாலாட்டினால் ஒட்ட “நறுக்கப்படும்” யார் செய்றாங்களோ இல்லையோ நாங்க செய்வோம்! திருமா சுளீர்!
சென்னை : தமிழ்நாட்டிலும் பாஜக வாலாட்டுகிறது, தமிழ்நாட்டில் வாலாட்டினால் ஒட்ட நறுக்கப்படும், மற்ற கட்சிகள் செய்கிறதோ இல்லையோ அதனை விடுதலை சிறுத்தைகள் கண்டிப்பாக செய்யும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சனாதனத்தை தூக்கிப்பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸை அம்பலப்படுத்தும் முயற்சியாக நவம்பர் 6-ஆம் தேதி மாநிலம் முழுவதும் 1 லட்சம் மனுஸ்மிருதி புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.
இந்திய ரூபாய் சரிவுக்கு மோடி அரசின் தவறான அரசியல் பொருளாதார கொள்கையே காரணம் என்றும் கார்ப்பரேட் மற்றும் சனாதனம் ஆகிய இரண்டும் தான் மோடி அரசின் கொள்கை என்றும் திருமாவளவன் விமர்சனம் செய்தார்.
மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து நவம்பர் 1ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திருமாவளவன் அறிவித்திருந்தார்.

விசிக ஆர்ப்பாட்டம்
அதன்படி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை அருகில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி தலைமையில், தமிழக மீனவர்களின் மீது இந்திய கடற்படையினரின் துப்பாக்கிச் சூடு, இந்து திணிப்பு மற்றும் மாநில உரிமை பறிப்பு ஆகியவற்றிற்கு எதிராகவும் பாஜக அரசை கண்டித்தும் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கொட்டும் மழையிலும் குடைகளைப் பிடித்தபடி 500-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர்.

கன்னத்தில் அறைந்து சொல்லுவோம்
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், "இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, தமிழ் மொழியானது தேசிய மொழி. அது பிராந்திய மொழி என யாராவது கூறினால் அவருடைய கன்னத்தில் அறைந்து அது தேசிய மொழி என உரக்கக் கூறுவோம். பாஜக தமிழ்நாட்டில் வாலை ஆட்டினால் ஒட்ட நறுக்குவோம். மற்ற கட்சிகள் செய்கிறதோ, இல்லையோ அதனை விடுதலை சிறுத்தைகள் கண்டிப்பாக செய்யும்.

மொழிப்போர் - அது விசிக தலைமையில்
பன்முகத்தன்மை உள்ள இந்தியாவை ஒரே நாடு ஒரே கலாச்சாரம் என கொண்டுவர துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, இந்து மதத்திற்குள்ளேயே ஒரே கலாசாரத்தை கொண்டு வருமா? இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்க பாஜக அரசு முயற்சி செய்கிறது. பாஜக மத அரசியலை புகுத்தி இந்தியாவை இந்து தேசமாக கட்டமைக்க முயல்கிறது. இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் இனி ஒரு மொழிப்போர் நடக்கும் என்றால் அது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமையில்தான் நடைபெறும்.

இரண்டும் தான் மோடி கொள்கை
ஒவ்வொரு தேசிய இன மக்களும் தங்களுக்கு என ஒரு தேசம் அமைத்து கொள்ளும் உரிமை உண்டு. இந்திய ஆட்சி நிர்வாகம் கூட்டாட்சி அமைப்பு அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளின் உரிமைகள் அடிப்படையில் தான் இந்திய அரசு செயல்பட வேண்டும். ஆனால் மாநில அரசு கூடாது, மொழி உணர்வு, இன உணர்வு கூடாது என பாஜக நினைக்கிறது. இந்திய ரூபாய் சரிவுக்கு மோடி அரசின் தவறான அரசியல் பொருளாதார கொள்கையே காரணம். கார்ப்பரேட் மற்றும் சனாதனம் ஆகிய இரண்டும் தான் மோடி அரசின் கொள்கை.

தைரியத்தை காட்ட வேண்டும்
இந்திய கடற்படையினரால் சுடப்பட்ட தமிழக மீனவர் வீரவேல் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடற்படையினர் மீது வழக்கு பதிவு செய்த தமிழக அரசை பாராட்டுகிறோம். அதோடு நில்லாமல் அவர்களை கைது செய்து நமது தைரியத்தை நாம் வெளிக்காட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

ஒரே கட்சி - விசிக
நவம்பர் 6-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் மனுஸ்மிருதி புத்தகங்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும். சனாதனக் கொள்கையைத் தூக்கி பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸை அம்பலப்படுத்த நாம் எடுத்திருக்கும் அடுத்த கட்ட முயற்சிதான் மனுஸ்மிருதி புத்தகங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்வது. இந்தியாவிலேயே ஒரு லட்சம் மனுஸ்மிருதி புத்தகங்களை மக்களுக்கு இலவசமாக கொடுக்கும் ஒரே கட்சி விசிக தான்" எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications