மாணவிகள் மரணம்.. “ஆறுதல் சொல்லக்கூட போகல?” விடாத வன்னியரசு! அமைச்சருக்கு அடுக்கடுக்கான கேள்வி
சென்னை: பள்ளி மாணவிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு விடுதலை சிறுத்தைகள் பொதுச்செயலாளர் வன்னியரசு தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் சக்தி இண்டெர்நேஷனல் மெட்ரிக் பள்ளி இயங்கியில் கடந்த 13 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
மாணவி இறப்புக்கு நீதிகோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 300 க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்.
கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. 60 ஆதிதிராவிட இளைஞர்கள் கைது! சாதி போராட்டமாக்க முயற்சி - வன்னியரசு
வன்னியரசு குற்றச்சாட்டு
இந்த நிலையில் நேற்று ட்விட்டரில் பதிவிட்ட வன்னியரசு, "மாணவிக்கு நீதி வேண்டும் எனும் கோரிக்கையோடு நடைப்பெற்ற மக்கள் போராட்டத்தை சாதி போராட்டமாக மாற்ற துடிக்கிறது கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம். ஆதிதிராவிடர்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்கி பள்ளியை பாதுகாக்க துடிக்கிறது. 60 க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளது. இன்னும் தேடுதல் வேட்டையை தொடருகிறது.
ஆதிதிராவிட இளைஞர்கள் கைது
பள்ளி நிர்வாகத்தின் உறவினர்கள் மூலமாக ஆதிதிராவிடர் குடியிருப்புக்குள் புகுந்து படித்த மாணவர்களை அடையாளம் காட்டி வருவதாக தம்பிகள் அச்சத்தோடு தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக போராடுவது தவறா? கைது செய்யப்பட்ட ஆதிதிராவிடர் இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஆதிதிராவிடர் குடியிருப்புக்குள் நடத்தப்படும் தேடுதல் வேட்டையை நிறுத்த வேண்டும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
குற்றச்சாட்டு
அவர் நேற்று வெளியிட்ட மற்றொரு பதிவில், "60 ஆதிதிராவிட இளைஞர்களை கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது மற்றொரு பதிவில், "பள்ளி பிள்ளைகளின் மரணங்கள் பெரும் சந்தேகங்களையும் துயரத்தையும் தருகிறது. பிள்ளைகளிடையே நம்பிக்கையை உருவாக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல. அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுக்கும் உண்டு. அதற்கான பணியை செய்யாமல் கள்ளக்குறிச்சி பள்ளியை திறப்பதிலேயே குறியாக இருப்பது ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவள்ளூர் மாணவி மரணம்
இந்த நிலையில் இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ள வன்னியரசு "கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்தை தொடர்ந்து, திருவள்ளூர் மாணவி மரணித்துள்ளார். இருவர் உடலும் நல்லடக்கம் செய்தாலும், மாணவிகளின் நல்லடக்கத்தில் பங்கேற்று குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லக்கூட அமைச்சர் அன்பில் மகேஷ் ஏன் போகவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அமைச்சர் பதில் சொல்வாரா?" என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.