Vijay Voting: வாக்களிக்க வந்த விஜய்! சரிந்த சாமியானா பந்தல்! போகிற இடமெல்லாம் விபத்துதானா?
சென்னை: தவெக தலைவர் விஜய், நீலாங்கரையில் வாக்களிக்கச் சென்ற போது அங்கிருந்த சாமியானா பந்தல் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விஜய் வருகையின் போது அவரை பார்க்க ரசிகர்கள் தள்ளுமுள்ளு நடத்தியதால் பந்தல் சரிந்தது.
தமிழக சட்டசபை தேர்தலின் வாக்குப் பதிவு தொடங்கியது. இந்த தேர்தலில் அஜித், எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா விஜயகாந்த், கருணாஸ், சிவகார்த்திகேயன், சீமான் உள்ளிட்டோர் வாக்கு அளித்துள்ளனர். அரசியல் கட்சியினரும் திரை பிரபலங்களும் காலையிலேயே வாக்களிக்க சென்ற வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில் நீலாங்கரையில் நடிகர் விஜய் வாக்களிக்க வந்தபோது, அவர் பின்னால் ரசிகர்கள் மற்றும் செய்தியாளர்கள் அதிக அளவில் திரண்டதால் அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக நிழற்குடை (சாமியானா பந்தல்) எதிர்பாராத விதமாக சரிந்தது.
விஜய் வாக்களிக்க வந்ததைக் கண்ட செய்தியாளர்களும் ரசிகர்களும் அவரை நெருங்க முற்பட்டதால், நுழைவாயில் பகுதியில் திடீரென பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த தள்ளுமுள்ளு காரணமாக அங்கிருந்த தற்காலிக பந்தலின் தூண்கள் நிலைதடுமாறி சரியத் தொடங்கின.
அதிர்ஷ்டவசமாக, அங்கிருந்தவர்கள் உடனடியாகச் செயல்பட்டு சரிந்த பந்தலைத் தாங்கிப் பிடித்தனர். இதனால் பந்தல் முழுமையாகக் கீழே விழாமல் தடுக்கப்பட்டதுடன், யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
வாக்களிக்க வந்த இடத்தில் ஏற்பட்ட இந்தச் சிறு பரபரப்பு அப்பகுதியில் சற்று நேரம் பதற்றத்தை ஏற்படுத்தியது. விஜய் பொது இடத்திற்கு வந்தாலே விபத்துகள் நேருகின்றன என்கிறார்கள். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி விஜய் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழக பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
110 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த கோர சம்பவத்தைத் தொடர்ந்து 2 மாதங்களுக்கும் மேலாக எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார் விஜய். பின்னர்தான் புதுச்சேரி, காஞ்சிபுரம், ஈரோடு, சேலம் என சில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
இந்நிலையில் கடந்த பிப்.13 ஆம் தேதி சேலம் கூட்டத்தின்போது ஒருவர் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தவெக தலைவர் விஜய் நடத்திய முதல் மாநாட்டில் இருந்தே உயிர் பலிகள் தொடர்ந்து வருகின்றன.
விக்கிரவாண்டியை அடுத்த விசாலையில் மாநாடு நடத்தினார் விஜய். அன்று காலையில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் வருகை தந்தனர். வி.சாலை முழுவதும் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் வெள்ளத்தில் மிதந்தது. மாலை 4 மணிக்கு மேல் தான் விஜய் மேடைக்கு வருகை தந்தார். காலை முதலே லட்சக்கணக்கானோர் மாநாட்டு திடலில் குவிந்ததால் ஏராளமானோர் குடிநீர் இல்லாமல், வெப்பம் தாங்காமல் 100க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்தனர்.
மயக்கம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்கப்பட்டது. சார்லஸ் என்பவர் மயக்கமடைந்த நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விஜய் மாநாட்டிற்காக சென்னையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் புறப்பட்ட இளைஞர்கள் சாலை விபத்தில் பலியாகினர். அதேபோல, திருச்சி மாவட்டத்தில் இருந்து மாநாட்டுக்கு காரில் சென்ற தவெக நிர்வாகிகளும் விபத்தில் சிக்கி பலியாகினர். விக்கிரவாண்டி மாநாட்டுக்கு வந்தவர்களில் 6 பேர் விபத்துகளில் பலியாகினர்.
மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடந்தது. இந்த மாநாட்டின்போது கூட்ட நெரிசலில் சிக்கி நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளைஞர் ரோஷன் உயிரிழந்தார். மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட ரோஷனை அவரது நண்பர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மதுரையில் நடந்த தவெக மாநாட்டில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிய அரியலூரை சேர்ந்த இளைஞர் ஜெயசூர்யா, சாலை விபத்தில் சிக்கினார். திருச்சி அருகே நடந்த விபத்தில் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயசூர்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அது போல் தஞ்சையில் நடந்த பிரச்சாரத்தின் போது விஜய் வாகனத்தை பின்தொடர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் விபத்தில் சிக்கி 20 நாள் சிகிச்சைக்கு பிறகு உயிரிழந்தார்.
அதாவது விஜய் வெளியே வந்தாலே குறைந்தபட்சம் மயக்கமாவது வந்துவிடுகிறது என்கிறார்கள். இதைத் தான் பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன், "விஜய் வெளியே வந்தாலே சேதாரம் ஏற்படுகிறது. அவர் நல்ல ஜோதிடரை பார்த்து பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்" என்றார். விஜய் வெளியே வந்தாலே பொதுமக்களுக்கு ஆபத்து என்றால் அவர் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் என்னவாகும் என்றும் பலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.












Click it and Unblock the Notifications