பிரேமலதாவுக்கு ப்ரொமோஷன்.. “அவருக்கு முக்கிய பொறுப்பு” அதிரடி மாற்றங்களுக்கு தயாராகி வரும் தேமுதிக!
சென்னை : கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
தே.மு.தி.கவிற்கு தற்போது ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாத நிலையில், கட்சியை மீண்டும் தூக்கி நிறுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரனுக்கு முக்கிய பொறுப்பை அளிக்கவும், பிரேமலதா விஜயகாந்த்தை செயல் தலைவர் ஆக்கவும் பல மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் மின்வெட்டால் ஏற்பட்டு வரும் பாதிப்பை சரிசெய்ய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அரசுக்கு வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதிரடி முடிவுகள்
மேலும், இந்த தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தேமுதிகவை தோல்விப் பாதையில் இருந்து தூக்கி நிறுத்த அதிரடி மாற்றங்களைச் செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. கட்சியின் எதிர்கால நன்மைக்காக தலைமை எடுக்கும் முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வதாக பிரேமலதாவிடம் மாவட்ட செயலாளர்களும் உறுதியளித்துள்ளனர்.

ஒதுங்கிய விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே கட்சி நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடுவதில்லை. அவரது பெயரில் அறிக்கைகள் வெளியானாலும், கட்சியின் அனைத்து முடிவுகளும் அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோராலேயே எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த கால தவறுகள்
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது கடைசி நேரத்தில் அ.தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேறியது தே.மு.தி.க. பிரேமலதாவின் அந்த முடிவை அவரது கட்சியினரே விரும்பவில்லை. எதிர்க்கட்சியாக செயல்படும் அளவுக்கு இருந்த கட்சி இன்று ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாத நிலைக்கு அந்த முடிவே காரணம் என நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில்தான், இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இளைஞர்களை ஈர்க்க
2024 தேர்தலையொட்டி கட்சியை பலப்படுத்த வேண்டியிருப்பதால், இளைஞர்களை அதிகளவில் கட்சிக்கு கொண்டுவர வேண்டும் என பேசப்பட்டுள்ளது. விஜயகாந்த் கட்சி தொடங்கும்போது இளைஞர்கள் கூட்டம் அவரது ஆதரவாளர்களாக இருந்தது. இப்போதைய இளைஞர்கள் தேமுதிகவில் பணியாற்றுவது இல்லை. ஆனாலும், விஜயகாந்த் கட்சி மீது அபிமானத்தில்தான் உள்ளனர் என்றும், அவர்களை ஈர்க்க என்ன வழி என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த் மகன்
விஜய பிரபாகரன் தே.மு.தி.க கட்சிக் கூட்டங்களிலும், நிர்வாகிகள் இல்ல விழாக்களிலும் பங்கேற்று வருகிறார். கட்சியில் எந்த பொறுப்பும் இல்லாத நிலையில் கட்சிக்காக உழைக்கும் அவர்தான் தொண்டர்களின் நம்பிக்கையாக இருக்கிறார். அவருக்கு தே.மு.தி.க இளைஞர் அணி செயலாளராக பொறுப்பு அளிக்க வேண்டும், இதன் மூலம் இளைஞர்களை கட்சியில் ஈர்க்கலாம் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பலரும் வலியுறுத்தி உள்ளனர்.

பிரேமலதாவுக்கு ப்ரொமோஷன்
அதேபோல், கட்சியை வழிநடத்தி வரும் பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த், கட்சியின் செயல் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்றும் மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதனால் விரைவில் பொதுக்குழு கூட்டம் நடத்தி முக்கிய மாற்றங்கள், புதிய பொறுப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகக்கூடும் என்கின்றனர் கேப்டனின் தொண்டர்கள்.












Click it and Unblock the Notifications