ஆவடிக்கு வரும் விஜயகாந்த்துக்கு அதிர்ச்சி கொடுத்த அதிமுக.. 500 பேர் "ஜம்ப்.." பின்னணியில் மாஃபா
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று ஆவடியில் பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில் தேமுதிக பிரமுகர்கள் 500க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்துள்ளனர். மறுபடியும் மாஃபா பாண்டியராஜன், தேமுதிக தலைமைக்கு அதிர்ச்சியை பரிசளித்துள்ளார்.
Recommended Video
இந்த சட்டசபை தேர்தலில், தேமுதிக-அமமுக கூட்டணியில் போட்டியிடுகிறது. கடைசி நேரத்தில், அந்த கட்சி அதிமுக கூட்டணியிலிருந்து பிரிந்து சென்றது.
மேலும், அதிமுக தலைமை குறித்து சரமாரியாக விமர்சனத்தை முன்வைத்தார், விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன்.
திறந்த வேனில் விஜயகாந்த்
இந்த நிலையில்தான், விஜயகாந்த் நேற்று முதல், தேர்தல் பிரச்சாரத்திற்கு வரத் தொடங்கியுள்ளார். கும்மிடிபூண்டி தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் டில்லியை ஆதரித்து பஜார் சாலையில், விஜயகாந்த் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். திறந்த வேனில் வந்த அவர், வாக்காளர்களிடம் கைகூப்பி மற்றும் கையசைத்து வாக்குகள் சேகரித்தார்.
களத்தில் விஜயகாந்த்
இந்த நிலையில்தான், இன்று மாலை அவர், வில்லிவாக்கம் சட்டசபைத் தொகுதியில் தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். இதையடுத்து, இன்று இரவு, ஆவடி தொகுதியில் பிரச்சாரம் செய்வார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே தேமுதிகவுக்கு ஆவடியில் அதிமுக அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.
அதிமுகவில் இணைந்தனர் தேமுதிக நிர்வாகிகள்
ஆம்.. ஆவடியில் அமைச்சர் பாண்டிய ராஜன் மீண்டும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிகிறார் என்பது அறிந்ததே. இதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல மாற்றுக் கட்சியினரும் அதிமுகவில் இணைவது போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் ஆவடி மாநகர் 2 முன்னாள் கவுன்சிலர்கள், வட்ட செயலாளர்கள் உள்பட ஆவடி மாநகர தேமுதிக, அமமுகவினர் 500 பேர் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
விஜயகாந்த் பிரச்சாரம்
ஆவடியில் இன்று இரவு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில் இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் ஷாக்
கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது அதிமுகவுடன் கூட்டணி வைத்த தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எதிர்கட்சி தலைவர் வரிசையில் அமர்ந்தார் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த். அப்போது மாஃபா பாண்டியராஜன் தேமுதிக எம்எல்ஏவாக இருந்தார். ஆனால் ஜெயலலிதா-விஜயகாந்த் மோதலையடுத்து, பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் சேர்ந்தார். இப்போது மீண்டும் தேமுதிக தலைமைக்கு மாஃபா பாண்டியராஜன் ஒரு ஷாக் கொடுத்துள்ளார்.