விஜயகாந்த் பிறந்தாளில் விஜய்யின் மதுரை மாநாடு.. வந்து விழுந்த கேள்வி.. தவெக புஸ்சி ஆனந்த் கொடுத்த ரியாக்ஷன்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு வரும் ஆகஸ்டு 25 ஆம் தேதி திங்கட்கிழமை மதுரையில் நடைபெறும் என விஜய் அறிவித்துள்ளார். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை தான் மாநாடு நடத்தப்படும் நிலையில் விஜய் திங்கட்கிழமையன்று மாநாடு நடக்கும் என அறிவிக்க பின்னால் சில காரணங்கள் உள்ளன. விஜய் தனது திருமண நாள் என்பதாலும், விஜயகாந்த் பிறந்தநாள் என்பதாலும் அந்த நாளை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. இது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு டிவிகே பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் ரியாக்ஷன் கொடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், 2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வருகிறார். ஜனநாயகன் படத்தின் சூட்டிங் முடிந்த நிலையில் தற்போது முழு நேர அரசியலில் ஈடுபடத் தொடங்கியுள்ளார். திமுக அரசியல் எதிரி என்றும், பாஜக கொள்கை எதிரி என்றும் விஜய் அறிவித்துள்ளார்.

விஜய்யின் இரண்டாவது மாநாடு
மேலும் வரும் தேர்தலில் தவெக தலைமையில் தான் கூட்டணி என்றும், 2026 சட்டசபை தேர்தல் தமிழகத்தில் இதுவரை சந்திக்காத தேர்தலாக இருக்கும் என்றும், தவெக - திமுக இடையே தான் போட்டி என்றும் விஜய் பேசி இருந்தார். முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்தது. இதனை தொடர்ந்து தற்போது 2வது மாநாட்டை மதுரையில் நடத்த தவெக திட்டமிட்டது.
அதன்படி தற்போது விஜய்யின் அடுத்த மாநாடு எங்கே, எப்போது நடைபெறும் என்பதை அறிவித்துள்ளார். இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம். தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன். வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம்" என்று கூறியிருந்தார்.
விஜயகாந்த் பிறந்தநாளில் மாநாடு
ஆகஸ்டு 25 ஆம் தேதி திங்கட்கிழமை என்பதால், ஏன் விடுமுறை நாளில் மாநாடு தேதியை அறிவிக்காமல் இந்த தேதியினை அறிவித்தார் என தொண்டர்கள் பலரும் குழம்பினர். ஆனால் விஜய் எதை செய்தாலும் அதனை யோசித்து தான் செய்வார் என்பதற்கு இணங்க, ஆகஸ்டு 25 ஆம் தேதி விஜய்க்கு மிக முக்கியமான நாளாகும்.
அதாவது விஜய் சங்கீதாவின் திருமண நாள். அதுமட்டுமின்றி கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளும் கூட. இதையெல்லாம் கவனத்தில் வைத்து தான் விஜய் இந்த தேதியை அறிவித்துள்ளார் என்று கூறும் தவெக தொண்டர்கள், அதனை கொண்டாடி வருகிறார்கள். இதற்கிடையே விஜயகாந்த் பிறந்தநாளில் விஜய்யின் இந்த மதுரை மாநாடு நடத்துவது பற்றி கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
புஸ்சி ஆனந்த் பேட்டி
இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:- தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அடுத்த மாதம் 25 ஆம் தேதி அடுத்த மாநாடு மதுரையில் நடைபெறும் என தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இதையடுத்து மாநாட்டிற்கு பாதுகாப்பு வழங்கக் கோரி இன்று காவல்துறையில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாநாடு நடத்தியது போல் மக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் வெற்றிகரமாக நடத்துவோம்..
விஜய் தொட்டாலே வெற்றி தான். கடந்த மாநாட்டை போல் இந்த மாநாடும் வெற்றி மாநாடு தான். கடந்த மாநாட்டில் எவ்வளவு பேர் கலந்துகொண்டனர் என்பது உங்களுக்கு தெரியும். அதைவிட இந்த மாநாட்டில் அதிகம் பேர் வருவார்கள். 506 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இன்னும் இடம் கேட்டிருக்கிறோம்.. தமிழ்நாடே இந்த மாநாட்டுக்கு சாதகமாக இருக்கும்" என்று கூறினார். விஜயகாந்த் பிறந்தாளில் மாநாடு நடத்துவது பற்றிய கேள்விக்கு சின்ன சிரிப்புடன் புஸ்சி ஆனந்த் அங்கிருந்து கிளம்பி சென்றார்.












Click it and Unblock the Notifications