பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகரிப்பு.. உலக அரங்கில் இந்தியாவுக்கு தலைகுனிவு.. கே.எஸ்.அழகிரி!
சென்னை: பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பாஜக ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், பாலின சமத்துவம் இல்லாததால் பெண்களின் வளர்ச்சிக்கு பாஜக முட்டுக்கட்டையாக இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
உலக பொருளாதார மன்றமானது 2022ம் ஆண்டு பாலின சமத்துவ இடைவெளி குறித்த அறிக்கையை ஜெனீவாவில் வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, உலகிலேயே ஆண், பெண் சமத்துவம் இருப்பதில் ஐஸ்லாந்து தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. பின்லாந்து, நார்வே, நியூசிலாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதில் இந்தியாவிற்கு 135வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவிற்கு பின் சுமார் 11 நாடுகள் மட்டுமே பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்தியாவிற்கும் கீழான தரவரிசையில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், காங்கோ, ஈரான் ஆகிய நாடுகள் உள்ளன.

இந்தியாவின் நிலை
இந்தியாவில் பெண்களின் எண்ணிக்கை சுமாா் 66.2 கோடி இருப்பதாகவும், அவா்களின் பொருளாதாரப் பங்களிப்பும், வாய்ப்புகள் அளிக்கப்படுவதும் 2021-ஆம் ஆண்டு முதல் சிறந்த மாற்றம் கண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அரசியலில் பெண்கள் எம்.பி., எம்எல்ஏ-க்களாகவும், மூத்த அதிகாரிகளாகவும், மேலாளராகவும் இருப்பது 14.6 சதவிகிதத்தில் இருந்து 17.6 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. அதேபோல் பெண்களுக்கு அரசியல் அதிகாரமளித்தலில் இந்தியா 48வது இடத்தில் உள்ளது.

கே.எஸ்.அழகிரி ட்வீட்
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாலின இடைவெளியில் 146 நாடுகளில் இந்தியா 135வது இடம் வகிப்பதாக 2022 ஆம் ஆண்டுக்கான உலக பாலின இடைவெளி குறியீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாலின சமத்துவம் ஏற்பட 132 ஆண்டுகள் ஆகும் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.

சீனாவோடு ஒப்பீடு
2023ம் ஆண்டுக்குள் 30 சதவிகித ஜிடிபி இலக்கை எட்டும் நோக்கில் சீனா பணியாற்றிக் கொண்டிருக்கிறது. வளர்ச்சி பெற வேண்டிய பகுதியைக் கண்டறிந்து குறியீடுகளை வரையறுத்து ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுப்பதே, பொருளாதார இலக்கை அடைவதற்கான வழி. அதைவிட்டு, போகிற போக்கில் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவோம் என்று மோடி அரசு தொடர்ந்து கூறிக் கொண்டிருப்பது மக்களை ஏமாற்றும் மோசடி செயலாகும்.
Recommended Video

பாஜக மீது விமர்சனம்
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பா.ஜ.க. ஆட்சியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாலின சமத்துவம் தான் தங்கள் கொள்கை என்று பேசும் ஆர்எஸ்எஸ் வழி வந்த மோடி தலைமையிலான பாஜக அரசு, பாலின சமத்துவத்தில் 135வது இடத்தில் இருப்பது, உலக அரங்கில் இந்தியாவை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications