குடியுரிமை திருத்தச் சட்டம்.. உத்தரப்பிரதேசத்தில் வன்முறை.. பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு
சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற வன்முறையின்போது பலியானவர்களின் எண்ணிக்கை 18-ஆக உயர்ந்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அவற்றுள் உத்தரப்பிரதேசம், டெல்லி உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் போராட்டங்களில் வன்முறை நடைபெற்றது.
கடந்த வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின்னர் மாநிலத்தில் பல்வேறு இடங்கள் போராட்டக்காரர்கள் குவிந்தனர். அப்போது நடந்த வன்முறையில் 6 பேர் பலியாகிவிட்டனர். இந்த நிலையில் ராம்பூரில் நேற்று மீண்டும் வன்முறை நடந்தது.
போராட்டம் நடைபெறும் இடமான ராம்பூரில் போலீஸார் மீது சிலர் கற்களை வீசினர். அப்போது போலீஸாரும் பதிலுக்கு கண்ணீர் புகை குண்டுகளை வீசி வன்முறையை கட்டுப்படுத்தினர்.
அது போல் மீரட் மாவட்டத்தில் 4 பேர் பலியாகிவிட்டனர். வாரணாசியில் ஒரு வன்முறை கும்பலை காவல் துறையினர் விரட்டிச் சென்ற போது கூட்ட நெரிசலில் சிக்கி 8 வயது சிறுவன் பலியாகிவிட்டான்.
மாநகர போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நாளை விடுப்பு எடுக்கக் கூடாது.. சுற்றறிக்கையில் தகவல்
இது போல் பல்வேறு இடங்களில் வன்முறை நடைபெறுவதால் உத்தரப்பிரதேசத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை நிலவரப்படி 18 ஆக உயர்ந்துவிட்டது.
இது தொடர்பாக மொத்தம் 705 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4500 பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. பாதுகாப்பு படையை சேர்ந்த 260 பேர் காயமடைந்தனர். அந்த 260 பேரில் 57 பேருக்கு துப்பாக்கிச் சூட்டில் காயமேற்பட்டது.
டெல்லியில் தொடர் போராட்டங்கள் மோதல்களை தொடர்ந்து பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர ஆஸாத் கைது செய்யப்பட்டார். அவர் தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.