கூட்டம் கூட்டமாக மக்கள் வாக்குச் சாவடிக்கு சென்றாலும்.. ஓட்டு சதவீதம் கம்மியா இருக்கே ஏன் தெரியுமா?
சென்னை: காலை முதலே தமிழகம் முழுக்க வாக்குச்சாவடிகளுக்கு மக்கள் படை எடுத்துச் சென்ற போதிலும் கூட, வாக்குப்பதிவு சதவீதம் என்பது கடந்த தேர்தலை விடவும் 5 சதவீதம் குறைவாக பதிவாகி உள்ளது.
ஆமாம்.. காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 13.8 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
காலை முதலே வாக்குச்சாவடிகளுக்கு மக்கள் பெருவாரியாக கூட்டம் கூட்டமாக சென்று கொண்டிருந்தனர்.

கூட்டமாக சென்ற மக்கள்
திமுக தலைவர் ஸ்டாலின் அளித்த பேட்டியில் கூட மக்கள் தமிழகம் முழுக்க எழுச்சியாக வாக்களித்து வருகின்றனர். இதன் முடிவுகள் மே இரண்டாம் தேதி சிறப்பாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அந்த அளவுக்கு பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வாக்குச்சாவடிகளுக்கு செல்வதாக தகவல் வந்தது.

குறைவான வாக்குப் பதிவு
ஆனால் கடந்த தேர்தலை விட காலை 9 மணி நிலவரப்படி 5 சதவீதம் வாக்கு குறைவாக பதிவாகியுள்ளதாக புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது. சத்யபிரதா சாகு கூறிய புள்ளிவிவரத்தை வைத்து கடந்த தேர்தல் வாக்குப்பதிவு ஒப்பிட்டால் அப்படித்தான் தெரிகிறது. இது எப்படி சாத்தியம் என்பது பற்றி விசாரித்தபோது சில தகவல்கள் கிடைத்தன.

மாஸ்க் தேவை
இது கொரோனா நோய் பரவல் காலம் என்பதால், வாக்கு பதிவு செய்ய வருவோருக்கு சில கட்டுப்பாடுகள், சில பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டு உள்ளன. உதாரணத்திற்கு, வாக்காளர்கள் அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயம் என்பது உத்தரவிடப்பட்டுள்ளது. யாராவது மாஸ்க் அணியாமல் வந்தால் வாக்குச்சாவடியில் மாஸ்க் இருந்தால் அது கொடுக்கப்படுகிறது. அல்லது கடைகளுக்குச் சென்று வாங்கி வர வேண்டியுள்ளது.

கொரோனா தடுப்பு
கைகளுக்கு கிளவுஸ் கொடுக்கப்படுகிறது. காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த பணிகளுக்கு ஒவ்வொரு வாக்காளருக்கும் வழக்கத்தை விட கூடுதலாக குறைந்தபட்சம் ஒரு நிமிடம் தேவைப்படும் என்றாலும், 10 வாக்காளர்களுக்கு 10 நிமிடம் தாமதம் ஏற்படும் என்பதை யோசித்துப் பார்த்தால், ஏன் வாக்கு பதிவு சதவீதம் குறைவாக இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

காத்திருப்பு
அதாவது வாக்குச்சாவடிக்கு பெருமளவு மக்கள் வருகிறார்கள். ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக அவர்கள் வாக்குச்சாவடியில் சிறிது நேரம் காத்திருக்க வேண்டியதாக இருக்கிறது. எனவே தான், காலையில் வாக்கு சதவீதம் குறைவாக இருக்கிறது. இது படிப்படியாக அதிகரித்து மாலைக்குள், பெருமளவுக்கு வாக்குகள் பதிவாகும் என்பது கள நிலவரம்.












Click it and Unblock the Notifications