என் ஓட்டு தவெகவுக்கு.. விஜய் தான் அடுத்த சிஎம்! ஓபனாகப் பேசிய சினிமா பிரபலம்.. இனி ப்ராப்ளம் தான்!
சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்துக்கு தான் வாக்களித்ததாகவும், நடிகர் விஜய் தான் இந்த சமுதாயத்தையும், மக்களையும், இந்த சிஸ்டத்தையும் உயர்த்துவதற்கான சரியான நபர் என்றும் அவர்தான் முதலமைச்சர் ஆவார் என வெளிப்படையாக பேசி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் நடிகரும் தயாரிப்பாளருமான விடிவி கணேஷ்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 75,000-க்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

காலையில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அஜித் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்குச்சாவடிகளில் காத்திருந்ததை ஊடகங்கள் நேரலை செய்தன. காலை 9 மணிக்கு முன்பாகவே மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, சீமான், விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்துவிட்டனர்.
இதேபோல நடிகர்கள் சிவக்குமார், திரிஷா, சிவகார்த்திகேயன், விக்ரம், பிரபு, துருவ் விக்ரம் உள்ளிட்ட பலரும் வாக்குசெலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை நந்தனத்தில் உள்ள மாதிரி அரசு பள்ளியில் நடிகரும் தயாரிப்பாளருமான வி டிவி கணேஷ் வாக்களித்தார்.
வாக்குப்பதிவுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"நான் எனது வாக்கை தவெகவுக்கு செலுத்தி இருக்கிறேன். இந்த சமூகத்தை உயர்த்துவதற்கு சரியான நபர் விஜய் தான். இந்த மக்களையும் சமூகத்தையும் இந்த சிஸ்டத்தையும் அவர்தான் மாற்றுவார். இளம் வாக்காளர்கள் அதிக அளவில் ஓட்டு போடுவதை பார்க்க முடிகிறது. அவர்களும் விஜய்க்கு தான் வாக்களிப்பார்கள் என நம்புகிறேன்" எனக் கூறியிருக்கிறார்

நடிகர் தயாரிப்பாளர் குணசித்திர நடிகர் என சினிமா உலகில் பரபரப்பாக வலம் வரும் விடிவி கணேஷ் இப்படி பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி வாக்களித்த பின் அதனை வெளியே தெரிவிப்பதும் சமூக வலைதளங்களில் சொல்வதும் அல்லது இது தொடர்பாக கருத்து தெரிவிப்பதும் குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரு பொதுவெளியில் ஒரு நடிகர் ஒருவரே விஜய்க்கு தான் வாக்களித்தேன் என சொல்லி இருப்பது பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications