பாஜக அரசு மாறிடுச்சு.. கடுமையாக விமர்சிப்பதை குறைத்துள்ளோம்.. இதுதான் காரணம்.. டிடிவி தினகரன் பரபர!
சென்னை: தமிழ்நாட்டு மக்கள் விரும்பாத திட்டங்களை இங்கே திணிப்பதில்லை என்ற நிலைப்பாட்டை மத்திய பாஜக அரசு எடுத்துள்ளது, எனவே நாங்கள் பாஜகவை கடுமையாக விமர்சிப்பதைக் குறைத்துள்ளோம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாளை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் அமைந்துள்ள எம்ஜிஆரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

தினகரன் பேசுகையில், "ஓ.பன்னீர்செல்வமும், நானும் வருங்கால அரசியலில் இணைந்து செயல்பட வேண்டும் என ஒரு முடிவை எடுத்துள்ளோம். கூட்டணி பற்றி உரிய நேரத்தில் முடிவை அறிவிப்போம். கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் தமிழ்நாட்டு மக்கள் நலனுக்கு எதிராகச் செயல்படும் எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று உறுதியாக கூறியிருந்தேன்.
தமிழ்நாட்டு மக்கள் விரும்பாத திட்டங்களை இங்கே திணிப்பதில்லை என்ற நிலைப்பாட்டை மத்திய பாஜக அரசு எடுத்துள்ளதாக தெரிகிறது. அதனால் நாங்கள் பாஜகவை கடுமையாக விமர்சிப்பதைக் குறைத்துள்ளோம். விவசாயிகளை, தமிழ்நாட்டு மக்களை பாதிக்கும் திட்டங்களையும், ஸ்டெர்லைட், மீத்தேன் ஹைட்ரோ கார்பன் என போன்றவற்றை முன்பு தமிழ்நாட்டில் திணித்த பாஜக அரசு தற்போது திணிப்பதில்லை.
வெள்ள நிவாரணத்துக்கு உரிய நிதியை மத்திய அரசு தர வேண்டும். திருவள்ளுவருக்கு காவி ஆடை விவகாரத்தில் ஆளுநர் நடந்து கொள்வது அவரது பதவிக்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமாக உள்ளது. ஆளுநர் ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கை. " எனத் தெரிவித்துள்ளார்.
தென் மாவட்டங்களில் உள்ள 35 சட்டமன்ற தொகுதிகளில் திமுக கடந்த முறை 25 தொகுதிகளிலும் அதிமுக 14 தொகுதிகளையும் வெற்றி பெற்றது. டிடிவி தினகரனின் அமமுக இந்த தொகுதிகளில் மொத்தமாக ஏறத்தாழ 4 லட்சம் வாக்குகளை பெற்றது. குறிப்பாக ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் அதிகமான அளவில் தினகரன் வாக்குகளை வாங்கினார்.
எதிர்வரும் தேர்தலில் இவர் ஓபிஎஸ்ஸுடன் கைகோர்க்க இருப்பதாக அவரே உறுதி செய்துள்ளார். மேலும் பாஜக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவெடுத்துள்ளார். இதனால், இந்தக் கூட்டணி குறித்து அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications