அதிக மேயர் பதவி கேட்போம்...விரைவில் ஆளுங்கட்சியாக ஆட்சியில் அமருவோம்... கே.எஸ்.அழகிரி நம்பிக்கை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் திமுகவிடம் அதிக இடங்களில் மேயர் பதவிகள் கேட்க இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
சென்னை: இந்தியாவில் பெரிய கட்சி காங்கிரஸ் தான், இன்றும் நாங்கள் வலிமையான அகில இந்திய கட்சி என்று தெரிவித்து கொள்கிறோம் எனவும், நிச்சயம் நாங்கள் ஒரு நாள் ஆளும் கட்சியாக வருவோம் என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் திமுகவிடம் அதிக இடங்களில் மேயர் பதவிகள் கேட்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி வாகை சூடியுள்ளது. வரும் 4ஆம் தேதி மறைமுகத்தேர்தல் நடைபெற உள்ளது. மேயர், துணைமேயர், நகராட்சித்தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு பலரும் முட்டி மோதி வருகின்றனர்.
கூட்டணி கட்சியினரும் திமுகவிற்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கே. எஸ் அழகிரி செய்தியாளர் சந்திப்பில் போது இரு தலைவர்கள் மோதிக் கொண்டனர்.
எல்.முருகனுக்கு வரவேற்பு அளித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ... சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த புகார் தூது..!
சத்தியமூர்த்தி பவனில் சண்டை
கே.எஸ் அழகிரி அமரும் மேடையில் காங்கிரஸ் கமிட்டியின் தொழிலாளர் பிரிவு நிர்வாகி முனுசாமி அமர்ந்தற்கு முன்னாள் நிர்வாகி பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து ஒருமையில் பேசியுள்ளார். மேடையிலிருந்து அவரை கீழே இறங்கும்படியும் வசைபாடியுள்ளார். இதன் காரணமாக இரு தரப்பினரிடையே முதலில் வாய்த் தகராறு ஏற்பட்டு பின்னர் மோதலாக வெடித்தது.
மாறி மாறி திட்டிய தலைவர்கள்
மாநிலத் தலைவர் கே. எஸ் அழகிரி முன்நிலையில் இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் செய்தியாளர் சந்திப்பு சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. செய்தியாளர்கள் மத்தியில் தனது கண்ணெதிரில் நிர்வாகிகளின் மோதிக் கொண்டதால் செய்வதறியாமல் திகைத்த மாநிலத் தலைவர் கே.எஸ் அழகிரி சிறிது நேரம் செய்வதறியாது திகைத்தார். எல்லோர் முன்னிலையிலும் இரு தரப்பினரும் மாறி மாறி தகாத வார்த்தையால் திட்டி சண்டையிட்டனர். இதன் காரணமாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மேயர், துணைமேயர் பதவி
இருவரையும் சமாதானப்படுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் திமுகவிடம் அதிக இடங்களில் மேயர் பதவிகள் கேட்க இருப்பதாக கூறினார். மேலும் பேசிய அவர் இரண்டு தினங்களாக பாஜகவும் அதிமுகவினரும் காங்கிரஸ் பற்றி பல அவதூறான கருத்துக்களைப் பேசி வருவதாக கூறினார். நீங்கள் ஒன்றில் உரிமை கோருகிறீர்கள் என்றால் அதில் உண்மை, நியாயம் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆளுங்கட்சியாக அமருவோம்
இன்றும் இந்தியாவில் பெரிய கட்சி காங்கிரஸ் தான், இன்றும் நாங்கள் வலிமையான அகில இந்திய கட்சி என்று தெரிவித்து கொள்கிறோம் எனவும், நிச்சயம் நாங்கள் ஒரு நாள் ஆளும் கட்சியாக வருவோம் என அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் மாநகராட்சியில் அதிக இடங்களில் மேயர் பதவி கேட்க இருப்பதாகவும் தெரிவித்தார். அதிக அளவில் மேயர் துணை மேயர் பதவிகளை கேட்க போவதாக கேஎஸ் அழகிரி அறிவித்திருப்பது திமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.