கொரோனா அதிகமாக பரவிவிட்டது.. பக்கத்து வீட்டுக்காரரிடம் பேசும்போதும் மாஸ்க் போடுங்க- டாக்டர் பிரகாஷ்
சென்னை: பக்கத்து வீட்டுக்காரர்களிடம் பேசும்போது கூட மாஸ்க் அணிவதுதான், கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒரே வழி என்று டாக்டர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
டாக்டர் பிரகாஷ் இதுபற்றி "ஒன் இந்தியா தமிழுக்கு" அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது: மாஸ்க் போடுங்கள், சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் என்று கூறுபவர்களை பைத்தியக்காரர்கள் போல இந்த சமூகம் பார்க்கிறது.
கடந்த 10 வருடங்களாக பல்வேறு நோய்களுக்கு நான் சிகிச்சை அளித்துள்ளேன். ஆனால், கடந்த 10 நாட்களாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது உதவி செய்ய முடியாத நிலைமையில் கையறு நிலையில் இருப்பதாக உணர்கிறேன். எனவேதான் சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஆக்சிஜன் அளவு
90 முதல் 95 என்ற அளவுக்கு ஆக்சிஜனும் இருந்தால் ஆன்டி-வைரஸ் ஊசிகளை செலுத்தலாம். ஆனால் 80 சதவீதம் அல்லது 75 என்ற ஆக்சிஜன் அளவுடன்கூட, நோயாளிகள் வருகிறார்கள். அவர்களை குணப்படுத்துவது ரொம்பவே கஷ்டம். அடுத்த சில நாட்களில் அவர்கள் இறந்து போவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது அவர்களுக்கு எக்ஸ்ரே எடுத்து பார்க்கும் போது நுரையீரல் மொத்தமாக பாதித்துள்ளதை கவனிக்க முடியும். ஆக்சிஜன் மிக குறைவாக இருக்கிறது, கொரோனா வைரஸ் பாதித்துள்ளது என்று நோயாளியிடம் சொன்னால், அவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள்.

வயதானவர்களுக்கு அறிகுறி
நாம் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை, எனக்கு எப்படி நீங்கள் இப்படி சொல்லலாம் என்று வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் நிலை நமக்கு தெரிந்தாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. பாடம் நடத்த வேண்டியதாக இருக்கிறது. இது எவ்வளவு கொடுமையான சூழ்நிலை என்பதை மருத்துவரின் இடத்தில் இருந்து பார்த்தால்தான் தெரியும் . வயதானவர்களுக்கு தொண்டை வலி எதுவும் இருக்காது, நேரடியாக நுரையீரலை பாதித்து விடும். பசியின்மை, உடல் வலி, உடல் சோர்வு போன்றவை இதற்கான அறிகுறி . ஆரம்பத்திலேயே பார்த்து விட வேண்டும். ஆக்சிஜன் அளவு குறைந்தால், உயர்தர சிகிச்சை வழங்கும் இடங்களுக்கு செல்ல வேண்டும்.

ஊரடங்கை நம்பி ஏமாற வேண்டாம்
கொரோனா பரவல் நிலவரம் குறைவதாக தெரியவில்லை. அரசு ஊரடங்கு உத்தரவைப் போட்டு விட்டது. அவர்கள் கடமையை அவர்கள் செய்து விட்டார்கள். ஆனால் நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பொதுமக்கள் தரப்பிலிருந்து ஒத்துழைப்பு தரவேண்டும். ஊரடங்கு உத்தரவு போட்டு விட்டால் கொரோனா குறைந்துவிடும் என்று நமக்கு நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது.

உறவினர்களிடம் பேசும்போது
ஊரடங்கு உத்தரவு முதல் நிலை மற்றும் இரண்டாவது நிலை ஆகிய பரவலின்போது மட்டும்தான் தடுக்க கூடியது. இப்போது இரண்டாவது அலையின், நான்காவது கட்டத்தில் இருக்கிறோம். பொதுமக்கள் வெளியே செல்லும்போதும், கடைகளுக்கு செல்லும்போதும் முக கவசம் அணிந்து கொள்கிறார்கள். ஆனால், பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பேசும்போதும் உறவினர்களுடன் பேசும்போதும், முகக் கவசத்தை இறக்கிவிட்டு பேசுகிறார்கள் . இவர்களுக்கு எப்படி கொரோனா இருக்கும் என்று தங்களுக்குத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.

அறிகுறி இருந்தால்
அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சென்று பாருங்கள். ஐஸ்கிரீம் சாப்பிட்டு, குளிர்ந்த நீரை குடித்தேன் , கூல்டிரிங்ஸ் குடித்தேன் எனவேதான் எனக்கு தொண்டை வலி இருக்கிறது, தலைவலி காய்ச்சல் இருக்கிறது என்று நீங்களே நினைத்துக் கொள்ளாதீர்கள். மற்ற நேரத்தில் இது சரியாக இருக்கலாம். இது பெருந்தொற்று காலம் என்பதால் உடனடியாக பரிசோதனை நடத்திக் கொள்ளுங்கள்.

உடனே மருத்துவரை பாருங்கள்
தினசரி உங்களது ஆக்ஸிஜன் அளவை பரிசோதித்து பார்க்க வேண்டும். 94 என்ற அளவை விட கீழே குறைந்தால், நீங்கள் உடனே சுதாரித்துக் கொண்டு உடனடியாக அதற்குரிய ஊசிகளை செலுத்தினால், மேற்கொண்டு ஆக்ஸிஜன் அளவு குறையாமல் தடுக்கலாம். 80க்கு கீழே ஆக்சிஜன் அளவு சென்றால்தான், காப்பாற்றுவது கஷ்டம். மற்றவரிடம் பேசும்போது, மூக்கை மூடும் வகையில் மாஸ்க் அணியுங்கள். கிருமிநாசினி தெளித்து காலத்தை விரயம் செய்யாமல் முக கவசம் அணிவதில் கவனம் செலுத்துங்கள். இவ்வாறு மருத்துவர் பிரகாஷ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications