சென்னை அருகே நாளை கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. வெளுக்க போகும் மழை!
சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை சென்னை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடந்த வாரம் கனமழை சென்னை உள்ளிட்ட சுற்றியுள்ள மாவட்டங்களில் கொட்டி தீர்த்தது. இந்த நிலையில் இரு நாட்கள் ரெஸ்ட் எடுத்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்தம் தாமதமாக தீவிரமடைந்தது.
அதன்படி இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது மேலும் வலுப்பெறாது என சொல்லப்பட்ட நிலையில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

எச்சரிக்கை
இதனால் தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னையிலிருந்து தென்கிழக்கு திசையில் 310 கி.மீ. தொலைவில் உள்ளது.

வடதமிழகம்
இது தெற்கு ஆந்திரா- வடதமிழகம் இடையே சென்னை அருகே நாளை அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் காற்றழுத்த தாழ்வு மண்டலம் பரந்து விரிந்திருக்கும் என்பதால் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

24 மணி நேரம்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மழையின் தீவிரம் அதிகரிக்கும். அடுத்த 24 மணி நேரத்தில் ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய வட தமிழகம் ஆகிய பகுதிகளில் அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு,அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடல் மற்றும் தமிழ்நாடு-புதுச்சேரி-தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையோரங்களில் பலத்த காற்று மணிக்கு 45-65 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.

மத்திய வங்கக் கடல்
தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலிலும், தமிழ்நாடு-புதுச்சேரி-தெற்கு ஆந்திரப் பிரதேசக் கடலோரப் பகுதிகளிலும் கடல் சீற்றத்துடன் இருப்பதால், மீனவர்கள் நவம்பர் 19ம் தேதி வரை இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே காரைக்காலுக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே கரையை கடந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications