தங்க நகைகளை வங்கி லாக்கரில் வைக்க போறீங்களா? எப்படி வைக்கணும்? தீமைகள் என்ன?
சென்னை: வங்கி லாக்கரில் தங்க நகை வைப்பது எப்படி அதனால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் என்னென்ன என்பதை சொல்ல முடியுமா?
இதுகுறித்து தமிழ் குவோராவில் வெங்கடராமன் ராமசுப்பிரமணியன் என்பவர் கூறியிருப்பதாவது: வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் நகை வைப்பதற்கு நீங்கள் வங்கியை அணுக வேண்டும். பாதுகாப்பு பெட்டகத்தின் அளவு, வங்கி அமைந்துள்ள இடம் என்பதற்கு ஏற்ப, வருடாந்திர கட்டணம் மாறுபடும்.

பாதுகாப்பு பெட்டகம் வழங்க, சில வங்கிகளில் , உங்களை வைப்பு நிதி வைத்துக் கொள்ளுமாறு வேண்டுவார்கள் அல்லது ஏதாவது ஒரு காப்பீடு எடுத்துக் கொள்ளுமாறு வேண்டுவார்கள். ஆனால், பாரத ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள்படி, அவர்கள் உங்களை கட்டாயப்படுத்த முடியாது. வங்கியை திருப்தி படுத்த ஏதேனும் ஒரு வைப்பு நிதி குறைந்த தொகையில் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். அது உங்களுடைய இஷ்டம்.
வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் நகை வைப்பதில் உள்ள நன்மை, தீமைகளைப் பார்ப்போம்.
நன்மைகள்: வங்கியில் உள்ள பாதுகாப்பு பெட்டகம் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியது. பாதுகாப்பு பெட்டக அறை, திருட்டு அபாயசங்கு, கண்காணிப்பு காமராக்கள் என்று பல்வேறு அம்சங்கள் உள்ளதால், திருட்டு நடக்க வாய்ப்பு குறைவு.
வெளியூருக்கு செல்லும் போது, அதிக தங்கம் வீட்டிலிருந்தால் கவலைப்படுவதை போல், கவலைப் படத் தேவையில்லை.
தங்கம் எப்போது தேவைப்படுகிறதோ அப்போது வங்கிக்கு சென்று பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து தங்க நகை எடுத்துக்கொள்ளலாம். உரிய அனுமதியின்றி எளிதில் எடுத்துக்கொள்ள இயலாது.
தீமைகள்: வருடாந்திர பாதுகாப்பு பெட்டக கட்டணம். இது வங்கிக்கு ஏற்ப, பாதுகாப்பு பெட்டகத்தின் அளவிற்கேற்ப மாறுபடும்.
வங்கி இயங்கும் நேரத்தில் தான் எடுக்க முடியும். எப்போது வேண்டுமானாலும் எளிதில் எடுக்க முடியாது.
பாரத ரிசர்வ் வங்கி விதிகளின்படி வங்கியில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் ஏதேனும் தொலைந்தால் அதற்கு எந்தவித நஷ்ட ஈடும் கிடையாது. இது வீட்டை வாடகைக்கு விடும் வீட்டு முதலாளியைப் போன்ற உறவுதான். பொருட்கள் தொலைந்தால் அதற்கு வாடகைதாரரே பொறுப்பு.
மேலும் வங்கிக்கு என்னென்ன பொருட்கள் பாதுகாப்பு பெட்டகத்தில் இருக்கின்றன என்ற விவரம் தெரியாது.
என்னை பொருத்தவரை, வங்கியில் உள்ள பாதுகாப்பு பெட்டகம் என்பது அருமையான ஒரு விஷயம். அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குறைந்த வருடாந்திர கட்டணத்தில் மிக அதிகமான பாதுகாப்பினை நம்மால் பெறமுடிகிறது. அத்தகைய பாதுகாப்பினை நாம் நமது வீட்டிற்குக் கொண்டுவர லட்சங்களை செலவழிக்க வேண்டும். அவ்வாறு செய்து கொண்டிருந்தாலும் அது எவ்வளவு தூரம் நம்மால் பாதுகாக்க முடியும் என்பதை எளிதில் சொல்ல முடியாது. வெளியூருக்குச் செல்லும்போது மனதில் தேவையற்ற மன உளைச்சலை உண்டு பண்ணும்.
வங்கி பாதுகாப்பு பெட்டகத்தை பயன்படுத்தி மனநிம்மதியை பெறுவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications