தாலி குறித்து சென்னை உயர்நீதிமன்றம் உண்மையில் கூறியது என்ன? மீடியாக்களில் வெளியான தவறான செய்திகள்
சென்னை: திருமண உறவில் இருக்கும் பெண்கள் தாலியை அகற்றுவது குறித்து சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருந்ததாக மீடியாக்களில் வெளியான கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
ஏனெனில், மீடியா செய்திகளின்படி, மனைவி தனது தாலியை அகற்றுவது அதிகப்படியான மன உளைச்சலை கணவருக்கு ஏற்படுத்தும் என்று நீதிமன்றம் கூறியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் சரியாக இந்த கருத்து மீடியாக்களில் வெளியானதா, உண்மையிலேயே அப்படிதான் நீதிமன்றம் கூறியிருந்ததா? இதோ விளக்கம்..
ஈரோட்டை சேர்ந்த ஒரு தம்பதி விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. இந்தநிலையில் அவர்களுக்கு விகாரத்து வழங்க குடும்பநல நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனையடுத்து உயர்நீதிமன்றத்தில் கணவர் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் வி.எம்.வேலுமணி மற்றும் எஸ்.சௌந்தர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
நீதிபதிகள் கூறியது என்ன?
"கணவனும் மனைவியும் கடந்த 2008ம் ஆண்டிலிருந்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மட்டுமல்லாது மனைவி தாலியை அணிந்துகொள்வதில்லை. இது மனுதாரரின் உளவியலை பாதித்துள்ளது. எனவே இருவருக்கும் விவாகரத்து வழங்க வேண்டும்" என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வழக்கு பின்னணியில் இருந்த பல விசயங்கள் நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அதாவது, கணவனின் குணாதிசயத்தை மனைவி சந்தேகித்து வந்திருப்பது, சக ஊழியர்கள் முன்னிலையில் அவருக்கு எதிராக திருமணத்திற்கு தாண்டி தொடர்பு இருப்பதாக கூறி அவமதித்திருப்பது, எந்தவித அடிப்படையும் இல்லாமல் கணவன் மீது மனைவி காவல்நிலையத்தில் வழக்கும் தொடர்ந்திருப்பது என மனைவியின் நடவடிக்கைகள் நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தப்பட்டது. இதற்கிடையில் மனைவி கோபத்தில் தனது தாலியையும் அகற்றியுள்ளார்.
தொடர்ந்து இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், "தாலியை அகற்றியதால் மட்டுமே ஒரு தம்பதியினருக்கு விவாகரத்து கொடுத்துவிட முடியாது" என்று திட்டவட்டமாக கூறினர்.
மேலும் மனைவியின் நடவடிக்கைகளை குறிப்பிட்ட நீதிபதிகள், "இவ்வாறான நடவடிக்கைகள் இந்த தம்பதியினர் இடையே திருமண உறவை தொடரும் எண்ணமில்லை என்பதை காட்டுகிறது" என்று தெளிவுபடுத்தினர். மேலும், "மனைவியின் நடவடிக்கை மனக்கொடுமை" என்று கூறியுள்ளனர். ஆனால் இது ஊடகங்களால் ஒருதலைபட்சமாக புரிந்துகொள்ளப்பட்டு சர்ச்சைக்குரியதாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது தாலியை அகற்றுவதே தவறு என்பது போல நீதிமன்றம் கூறியதாக செய்தி வெளியாகிவிட்டது. ஆனால் அது எந்த சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது என்பது இப்போது மீடியாக்களுக்கு விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications