நீட் விலக்கு மசோதா.. தமிழகம் தரப்பிலிருந்து இதுவரை எடுத்த முன்னெடுப்புகளும், பின்னடைவுகளும்!
சென்னை: நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பியது முதல் ஆளுநர் அனுப்பியது வரை நடந்தது என்ன?
நீட் தேர்வு கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்தல் சமூகநீதிக்கு எதிரானது என கூறி இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. இந்த தேர்வுக்கான வினாத்தாள்களை சிபிஎஸ்இ தயாரிப்பதால் மாநில பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவம் எட்டாக்கனியாக இருக்கும் என சொல்லப்பட்டது.
இது தொடர்பாக மாணவர்களும் அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நீட்டால் தமிழகத்தில் 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் சட்டப்பேரவையில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கை சட்டம், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை சட்டம் என இரு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

குடியரசுத் தலைவர்
இந்த இரு சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் இரு சட்ட மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்கும்படி மத்திய உள்துறை அமைச்சர், சுகாதாரத் துறை அமைச்சகம், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஏகே ராஜன் கமிட்டி
ஆனால் இந்த வழக்கு விசாரணையின் போது இந்த இரண்டு சட்ட மசோதாக்களையும் குடியரசுத் தலைவர் கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பரில் நிராகரித்து உத்தரவிட்டதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு குறித்த ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

மசோதா நிறைவேற்றம்
இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு அது ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித்திடம் ஏகே ராஜன் பரிந்துரை கடிதத்துடன் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த மசோதா மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் அவர் மாறுதலாகி சென்றுவிட்ட நிலையில் புதிதாக வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் நீட் விலக்கு மசோதா மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

உள்துறை அமைச்சர்
ஆனால் இதுகுறித்து நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க மாநில ஆளுநருக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக எம்பிக்கள் குழு சந்தித்து கடிதம் கொடுத்தனர். நீட் தேர்வு விலக்கு மசோதாவின் மீது முடிவெடுப்பதில் காலம் தாழ்த்தி வந்த நிலையில் குடியரசு தின உரையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, நீட்டுக்கு ஆதரவாக குறிப்பிட்டிருந்தார். அதாவது நீட் தேர்வுக்கு முன்னதான காலத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 1 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்திருக்கிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டின் காரணமாக இத்தகைய எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. எனவே அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துங்கள் என தனது உரையில் ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்திருந்தார்.
Recommended Video

நீட் தேர்வுக்கு ஆதரவாக
இந்த நிலையில் நீட் தேர்வுக்கு ஆதரவாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதற்கு முரசொலியில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் போதும் தமிழக திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் நீட் மசோதா குறித்து நடவடிக்கை எடுக்காதது குறித்து கடந்த 31-ஆம் தேதி ஜனாதிபதி உரையின் போது நாடாளுமன்ற மைய மண்டபத்தில் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் இன்றைய தினம் நீட் விலக்கு மசோதாவில் குறைகள் இருப்பதாக கூறி ஆளுநர் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பிவிட்டார். நிபுணர் குழு வழிகாட்டுதலுடன் அனுப்பிய போதிலும் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications