வேகம் காட்டும் ஓபிஎஸ்.. ‘விதிப்படி பொதுக்குழு’- எடப்பாடிக்கு எதிராக பாயிண்டை பிடித்த பன்னீர் தரப்பு!
சென்னை : அதிமுகவை கைப்பற்றுவதில் எடப்பாடி பழனிசாமி முன்னேறி நிற்கும் சூழலில், போட்டி பொதுக்குழுவை நடத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அழைப்பு விடுக்கும் பொதுக்குழுவே செல்லும் என்ற விதியை நம்பிக்கையோடு கையில் எடுத்திருக்கிறது ஓபிஎஸ் தரப்பு.
ஜூன் 23ஆம் தேதி ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் இணைந்து பொதுக்குழு நடத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அதற்குள் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவால், ஓபிஎஸ்ஸுக்கு எதிராகத் திரும்பியது பொதுக்குழு.
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவை நடத்தினர். அதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
அங்க ஆரம்பிச்சது ஓபிஎஸ் சரிவு.. கையை விட்டுப் போகும் அதிமுக.. 'மறைமுக மெசேஜ்’ - இனி அவ்ளோதானா?
ஈபிஎஸ் கட்டுப்பாட்டில்
பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி ஜூலை 11ஆம் தேதி நடத்திய பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோரை கட்சியை விட்டு நீக்கினார். மேலும், ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டன. பொதுச் செயலாளர் தான் கட்சியின் அதிகாரமிக்க தலைவர் என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன் மூலமாக கட்சியை தன் வசப் படுத்தினார் ஈபிஎஸ்.
பொதுக்குழு செல்லாது
ஆனால், ஜூன் 23ஆம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழுவில் அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என தொடர்ந்து கூறி வருகிறது ஓபிஎஸ் தரப்பு. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இன்றி விடுக்கப்படும் பொதுக்குழு அழைப்பு செல்லாது என்றும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஓபிஎஸ். ஆனால், நீதிமன்ற தீர்ப்பு ஈபிஎஸ்ஸுக்கு சாதகமாக வந்தது. பொதுக்குழு நடத்த தடை இல்லை என தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனாலும், அதை எதிர்த்து மேல் முறையீடு செய்த வழக்கு, மீண்டும் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
நிர்வாகிகள்
இந்நிலையில், அதிமுகவில் இரு தரப்பினரும், புதிதாக நிர்வாகிகளை நியமித்து வருகின்றனர். எதிர் தரப்பினரை கட்சியை விட்டு நீக்கி, அனைத்து பதவிகளுக்கும் தங்கள் ஆதரவாளர்களை நியமித்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி, துணை பொதுச் செயலாளர்கள், தலைமை நிலைய செயலாளர்கள் உள்ளிட்டோரை நியமித்து நிலையில், ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தனது ஆதரவாளர்களை நியமித்துள்ளார். அவரைப் பொறுத்தவரை ஒருங்கிணைப்பாளர் பதவிகளே கட்சியில் தற்போது இருப்பவை.
அடுத்தகட்ட திட்டம்
அடுத்தகட்டமாக பொதுக்குழு கூட்டத்தையும் நடத்த திட்டமிட்டு வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். இந்த பொதுக்குழுவும் வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்திலேயே நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பொதுக்குழுவிற்கான அழைப்பை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கமும் இணைந்து விடுப்பார்கள் என்று கூறப்படுகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்ட பிறகு பொதுக்குழுவுக்கான வேலைகள் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.
கட்சி விதி
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் சேர்ந்து அழைப்பு விடுக்கும் பொதுக்குழுவே செல்லும். அதனால், தங்கள் தரப்பு நடத்தும் பொதுக்குழு தான் செல்லும் என அவர் தேர்தல் ஆணையத்திற்கும் லெட்டர் போடுவார் எனக் கூறப்படுகிறது. என்னதான் ஆதரவாளர்கள் ஈபிஎஸ் பக்கம் அதிகம் இருந்தாலும், கட்சி விதிகளை மீறி எடப்பாடி பழனிசாமி செயல்பட்டதைத்தான் முன்வைத்து களமாட இருக்கிறதாம் ஓபிஎஸ் தரப்பு.
Recommended Video
போட்டி அலுவலகம்
அதேபோல, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தின் சாவி எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்கப்பட்டிருப்பதால், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லவும் ஓபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில், தற்போது கட்சி ஆலோசனைக் கூட்டங்களை மயிலாப்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடத்தி வருவதால், கட்சிக்கு அலுவலகமும் தேடப்பட்டு வந்தது. அதன்படி மந்தைவெளி பகுதியில் அதற்கான கட்டடத்தையும் முடிவு செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.