அலறவிடும் மாண்டஸ் புயல்.. சென்னையில் பொது போக்குவரத்து நிலை என்ன? பஸ், மெட்ரோ, ரயில்கள் இயங்குமா
சென்னை: மாண்டஸ் புயல் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் சென்னையில் பேருந்து, ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்துகள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து எந்தவொரு புயலும் உருவாகாமல் இருந்த நிலையில், இப்போது முதல் புயலாக மாண்டஸ் புயல் உருவாகியுள்ளது. இதனால் வடதமிழகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது,
இந்தப் புயலானது நேற்று தீவிர புயலாக வலுப்பெற்ற நிலையில் இப்போது மீண்டும் சாதாரண புயலாக வலுவிழந்துள்ளது. மணிக்கு சுமார் 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வரும் இந்த மாண்டஸ் புயல் சாதாரண புயலாகவே கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
11 ஆயிரம் ஊழியர்கள்.. மாண்டஸ் புயலை எதிர்கொள்ள மின்சார வாரியம் தயார்.. அமைச்சர் செந்தில் பாலாஜி
மாண்டஸ் புயல்
இன்றிரவு அல்லது நாளை சனிக்கிழமை அதிகாலையில் புதுச்சேரி -ஸ்ரீஹரிகோட்டா இடையே இந்தப் புயல் கரையைக் கடக்கும் எனச் சொல்லப்படுகிறது. புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு அதிகபட்சமாக 85 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் கனமழை இருக்கும் என்பதால் மொத்தம் 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் புயல் காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் அதைச் சரி செய்யவும் மின்சார துறை ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
பொது போக்குவரத்து
மேலும், புயல் பாதிப்புகளை சமாளிக்கவும் பொதுமக்களைப் பாதுகாக்கவும் 10 மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் தயார் நிலையில், உள்ளனர். மேலும், புயல் காரணமாக இன்று 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னை, செங்கல்பட்டு உட்பட பல மாவட்டங்களில் விடுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே புயல் காரணமாக பொது போக்குவரத்திலும் சில தடைப்பட்டுள்ளன.
பேருந்துகள்
மாண்டஸ் புயல் காரணமாக முன்னதாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்படும் எனத் தகவல் வெளியானது. அரசு பேருந்துகள் இயங்கவில்லை என்றால் வேலைக்குச் சென்று வீடு திரும்பும் மக்கள் பல பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும் எனப் பலரும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். அதேநேரம் தேவையற்ற பயணத்தைத் தவிர்க்குமாறும் அவசியமென்றால் மட்டும் பாதுகாப்பான முறையில் பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
புதுச்சேரி, மாமல்லபுரம்
அதேநேரம் மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும்போது புயல் காரணமாகப் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகளை நிறுத்துவதாகப் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. கிழக்கு கடற்கரைச் சாலை வழியாகச் சென்னை, காரைக்காலுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் நிறுத்தப்படுவதாகவும், புயல் கடந்த மீண்டும் பேருந்துகள் இயக்கப்படும் எனப் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
புறநகர் ரயில்கள்
சென்னையில் பேருந்திற்கு இணையாகப் புறநகர் ரயில்களையும் மக்கள் அதிகம் பயன்படுத்துவார்கள். புயல் காரணமாக ரயில் சேவை நிறுத்தப்படுமோ என மக்கள் குழம்பினர். இதற்கிடையே சென்னை புறநகர் ரயில்களைப் பாதுகாப்பான முறையில் இயக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. புயல் மற்றும் கனமழை நேரத்தில் ரயிலை மணிக்கு 10 முதல் 15 கிமீ வேகத்தில் மட்டுமே இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் புயல் எச்சரிக்கையால் சூழலுக்கு ஏற்ப புறநகர் ரயில் சேவை இயக்கம் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ
அதேபோல மெட்ரோ ரயில் சேவை குறித்தும் சிஎம்ஆர்எல் முக்கிய விளக்கத்தைக் கொடுத்துள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக மெட்ரோ ரயில் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றிரவு அல்லது நாளை காலை புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சென்னையில் மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான சேவை
மாண்டஸ் புயல் காரணமாக ஏற்கனவே சென்னையில் பல இடங்களில் பலத்த காற்று வீசி வருகிறது. பலத்த காற்று காரணமாகச் சென்னையில் விமான நிலையத்தில் 10க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் என்பதால் மேலும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட வாய்ப்புகள் அதிகம். சென்னை வரும் விமானங்கள் பெங்களூரு விமான நிலையத்திற்குத் திருப்பி விடவும் வாய்ப்புகள் உள்ளன.
சென்னை மாநகராட்சி
மேலும், புயல் காரணமாக ஏற்கனவே சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களை மறு அறிவிப்பு வரும் வரை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகரில் விழும் நிலையில் இருக்கும் மரக்கிளைகள் ஏற்கனவே அகற்றப்பட்டுள்ளது. மேலும், மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. தலைநகர் சென்னையில் மட்டும்169 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.