’தலைமகனே கலங்காதே..தீர்ப்பு எப்படி வந்தாலும் ஓகே! ஆனால் ‘அது’தான் நமது டார்கெட்! ஓபிஎஸ்-இபிஎஸ் உறுதி
சென்னை : அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் நிலையில் தீர்ப்பு எப்படி இருந்தாலும் தங்களது அடுத்த கட்ட நடவடிக்கைகளை திட்டமிட்டபடி மேற்கொள்ள ஓபிஎஸ் இபிஎஸ் தரப்பு தீவிரமாக இருக்கிறது.
கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவரது ஆதரவாளர்களுடன் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் அதிமுகவின் இடைக்கால பொதுசெயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனை எதிர்த்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தரப்பு ஜூலை 11ல் கூட்டிய பொதுக்குழு செல்லாது ஜூன் 23க்கு முந்தைய நிலை தொடரும் என உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார்.

அதிமுக பொதுக்குழு
குறிப்பாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்; இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியின் ஒப்புதல் இன்றி நிர்வாக குழு அல்லது பொதுக்குழு கூட்டத்தை கூட்ட முடியாது என நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவில் கூறியிருந்தார். இதனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உற்சாகத்தில் ஆழ்ந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் பின்னடைவை சந்தித்தது. அதே நேரத்தில் இந்த தீர்ப்பு ஒருதலைப்பட்சமானது எனவும், கட்சி நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது.

இன்று தீர்ப்பு
இந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பு பல்வேறு வாதங்களை முன்வைத்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் எம். துரைசாமி, சுந்தர் மோகன் , ஆகியோர் அடங்கிய அமர்வு, இரு தரப்பினரின் வாதங்களையும் எழுத்துப்பூர்வமாக ஆக 26ஆம் தேதி மாலை 3 மணிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

ஓபிஎஸ் தரப்பு
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக இருக்கிறது. இதற்காக இரு தரப்புமே ஆர்வமாக காத்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளதாம். ஓ.பன்னீர்செல்வத்தை பொருத்தவரை தீர்ப்பு தங்கள் தரப்புக்கு சாதகமாக வந்தால் இதனை வைத்து மேலும் பல நிர்வாகிகளையும் முன்னாள் அமைச்சர்களையும் தங்கள் தரப்புக்கு இழுப்பதோடு, சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரோடு சேர்ந்து அதிமுகவை கைப்பற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த முறை சென்னை தவிர்த்து கோவையில் பொதுக்குழு கூட்டம் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

பதற்றத்தில் எடப்பாடி
எடப்பாடி பழனிச்சாமி தரப்பை பொறுத்தவரை மிகுந்த பதட்டத்துடன் காணப்படுவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே தனி நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு தங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்திய நிலையில் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பையே நம்பி இருக்கின்றனர். சாதகமாக வந்தால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கிவிட்டு பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தவும், ஒருவேளை எதிராக வந்தால் உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்யவும் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இரு தரப்பும் என்ன முடிவெடுக்கும் என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிய வந்துவிடும்.












Click it and Unblock the Notifications