பீகாரும் தமிழகமும் ஒன்றா...? ஒவைசி கட்சி நிலைப்பாடு என்ன.. கூட்டிக் கழித்தால் கணக்கு குழப்புதே!
சென்னை: மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அவ்வாறு கமலுடன் அசாதுத்தீன் ஒவைசியின் மஜ்லிஸ் கட்சி கூட்டணி வைத்தால் 25 தொகுதிகள் வரை போட்டியிடக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே மதச்சார்பற்ற கூட்டணியில் உரிய அங்கீகாரம் கிடைக்காவிட்டால் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அடையாளம் கண்டு தனித்து போட்டியிட தயங்கமாட்டோம் என அதிரடி கிளப்பியுள்ளார் அக்கட்சியின் தமிழக தலைவர் வகீல் அகமது.
ஹைதராபாத்
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது அகில இந்திய மஜ்லிஸ் -எ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சி. இதன் தலைவராக பாரிஸ்டர் அசாதுத்தீன் ஒவைசி இருக்கிறார். கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே விறுவிறு வளர்ச்சி அடைந்த இவர் தெலுங்கானா மாநிலத்தை கடந்து மஹாராஷ்டிரா, பீகார், என மற்ற மாநிலங்களிலும் கட்சியின் கட்டமைப்பை நிறுவி வருகிறார்.
எதிர்பார்க்காத வெற்றி
அகில இந்திய அளவில் இஸ்லாமியர்களுக்கான உரிமைக் குரல் குரல் எழுப்பும் கட்சியாக மஜ்லிஸ் கட்சியை அவர் உருவாக்கி வருகிறார். இந்நிலையில் அண்மையில் நடைபெற்று முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஆர்.ஜே.டி. காங்கிரஸ் கூட்டணியில் கேட்ட சீட்கள் கிடைக்காத காரணத்தால் மஜ்லிஸ் கட்சியை தனித்து களமிறக்கி யாரும் எதிர்பார்க்காத வகையில் 5 இடங்களை வென்றெடுத்தார்.
சட்டமன்றத் தேர்தல்
இதன் மூலம் பீகாரில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார் தேஜஸ்வி. பாஜகவின் பீ டீமாக ஒவைசி செயல்படுகிறார் என விமர்சனகள் வந்த நிலையிலும் அதனை அவர் சட்டை செய்ததாக தெரியவில்லை. இதனிடையே வரும் 2021-ம் ஆண்டு நடைபெறும் 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் மூன்று மாநிலங்களில் தனது கட்சியின் கணக்கை தொடங்கவிரும்புகிறார் ஒவைசி.
இது தமிழகம்
மேற்கு வங்கம், தமிழகம், கேரளா, ஆகிய மூன்று மாநிலங்களிலும் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துள்ள மஜ்லிஸ் கட்சியினர் பீகார் தேர்தலில் பெற்ற வெற்றியை கோடிட்டுக் காட்டியே கூட்டணிக் கணக்குகளை போட்டு வருகின்றனர். மற்ற மாநிலங்கள் எப்படியோ தமிழகம் திராவிட மண் என்பதால் இங்கு மஜ்லிஸ் கட்சியின் கணக்கு சரியாக இருக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
பல கட்சிகள்
ஏற்கனவே இந்தியன் யூனியன் முஸ்லீம், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ., மனிதநேய ஜனநாயக கட்சி, போன்ற அமைப்புகள் எல்லாம் தமிழகத்தில் மிக வலிமையான கட்டமைப்புகளை உருவாக்கி வைத்துள்ளன. பீகாரை போல் தமிழகம் இல்லை என்பதற்கு இவைகளே உதாரணம். இஸ்லாமிய மக்களுக்கான பிரச்சனைகளை கடந்து மண் சார்ந்த எந்தவொரு பிரச்சனை என்றாலும் வீதிகளில் கொடிபிடித்து இறங்கி குரல் எழுப்ப மேற்கண்ட கட்சிகள் தவறியதில்லை.
தமிழகம் வேறு
இந்த மண்ணுக்கேற்ற அரசியலை பக்குவமாக செய்து வருகிறார்கள். இந்நிலையில் புதிதாக தமிழகத்தில் கணக்கை தொடங்கவிருக்கும் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தமிழக வாழ்வாதாரப் பிரச்சனைகள் மற்றும் மண்ணின் உரிமைகளுக்காக இதுவரை எத்தனை போராட்டங்கள் நடத்தியிருக்கின்றன என்ற கேள்வியும் எழுகிறது. பீகார் வேறு தமிழகம் வேறு என்பது தான் யதார்த்த நிலை எனக் கூறுகிறார் அரசியல் பார்வையாளரும், மூத்த பத்திரிகையாளருமான கணபதி.
கோரிக்கை
இதனிடையே மஜ்லிஸ் கட்சி குறித்து இங்குள்ள சில இஸ்லாமிய அமைப்பு பிரதிநிதிகளிடம் நாம் பேசிய போது, யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் கட்சி தொடங்கட்டும் அதைப்பற்றி வருத்தமில்லை, நோக்கம் மதவாதத்தை எதிர்ப்பதாக தான் இருக்க வேண்டும். மதவாத சக்திகளை எதிர்ப்பதாக கூறிக்கொண்டே அவர்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கக் கூடாது என்பதே கோரிக்கை.
ஒவைசி வருகை
இதைத்தவிர மஜ்லிஸ் கட்சிக்கு உருதுமொழி பேசக்கூடிய முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான வேலூர், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, தருமபுரி, பகுதிகளில் ஓரளவு கட்டமைப்பு பலமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஜனவரி மாதம் ஒவைசி தமிழகம் வருகை தரவுள்ளதால் அதற்கு முன்பாக மாநிலம் தழுவிய அளவில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிர்வாகிகள் நியமனம் தீவிரம் அடைந்துள்ளது.