விசாரணை வளையத்திற்குள் "கண்ணாமூச்சி" காட்டும் விஐபிகள்!
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கைகளின் மீது இன்னும் வேகமாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
ஜெயலலிதாவின் மரணம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு ஆகியவற்றின் முறையே விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஆறுமுகச்சாமி மற்றும் அருணா ஜெகதீசன் தலைமையில் தனித்தனி விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டன. இரண்டும் கமிஷனும் தங்களின் ரிப்போர்ட்டை அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சமீபத்தில் தமிழக சட்டப்பேரவையிலும் அந்த அறிக்கைகள் தாக்கல் செய்தது திமுக அரசு.
ஆறுமுகச்சாமி கமிசனை பொறுத்தவரை, சசிகலா உள்ளிட்ட சிலரை குற்றவாளிகள் என அடையாளம் காட்டி அவர்களிடம் அரசு விசாரணை நடத்தி முடிவுகளை எடுத்துக்கொள்ளலாம் என பரிந்துரைத்திருந்தது.

துறைரீதியாக விசாரணை
இந்த சூழலில், ஆறுமுகச்சாமி கமிஷன் சுட்டிக்காட்டிய சுகாதாரத் துறையின் முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.சிடம் துறை ரீதியிலான விசாரணை நடத்த, துறையின் தற்போதைய செயலாளர் செந்தில்குமார் ஐ.ஏ.எஸ். சுக்கு உத்தரவிடவிட்டிருந்தது அரசு. ஆர்டர் போடப்பட்டு சுமார் 1 மாத காலம் ஆகும் நிலையில், துறை ரீதியாக எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை என்கிறது கோட்டை வட்டாரம்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு
இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் தொடர்புடைய குற்றவாளிகள் என ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளை அடையாளம் காட்டியது அருணா ஜெகதீசன் கமிசன். தொடர்புடைய ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் இது குறித்து விளக்கம் கேட்டு விட்டு, பிறகு முடிவு செய்யலாம் என அரசு நினைத்தது. அதன்படி அவர்களிடம் விளக்கம் கேட்கப் பட்டிருக்கிறது. அவர்களோ இன்னும் பதில் தரவில்லை என்று சொல்கிறது உள்துறை வட்டாரம்.

என்ன காரணம்
இந்த நிலையில், சசிகலா, டாக்டர் சிவக்குமார் உள்ளிட்டவர்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் முயற்சி இன்னும் தொடங்கவில்லை எனத் தெரிகிறது. ஒருவேளை குற்றவியல் நடவடிக்கையை எடுத்தால் அது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சசிகலா, தினகரன் தரப்பால் பிரச்சாரம் முன்வைக்கப்பட வாய்ப்புள்ளதாக சீனியர் அமைச்சர்கள் எச்சரித்துள்ளதால் இன்னும் விசாரணை முழு வேகம் பிடிக்கவில்லை என்கிறது கோட்டை வட்டாரம்.

விடவும் முடியாது
ஒருவேளை நடவடிக்கை எடுக்காவிட்டாலும், அது அரசுக்கு எதிராக விமர்சனங்களை ஏற்படுத்தும் என்ற யோசனையும் முன்வைக்கப்படுகிறதாம். இதனால் புலி வாலை பிடித்ததை போல ரொம்பவே லாவகமாகத்தான் இந்த விஷயத்தை கையாள வேண்டும் என்று அரசு யோசித்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications