மீட்டிங் தான் இல்ல.. எல்லா மேட்டரும் மோடி காதுக்கு போயிருச்சு.. தனியாக சந்திக்காததன் காரணம் இதுதானா?
சென்னை : பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உடனான தனிப்பட்ட சந்திப்புகளைத் தவிர்த்தாலும், தமிழக பாஜக நிர்வாகிகள் மூலம் கள நிலவரம் குறித்து விரிவாக ஆலோசித்து, சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை வந்த பிரதமர் மோடி, அதிமுகவில் இரு அணிகளாக செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை தனியாகச் சந்திக்காமல் திரும்பிச் சென்றது சலசலப்பை ஏற்படுத்தியது.
பிரதமர் மோடி ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸை விமான நிலையத்தில் பார்த்துப் பேசினாலும், தனியாக நேரம் ஒதுக்கிச் சந்திக்கவில்லை. ஓபிஎஸ்ஸிடமாவது 10 நிமிடங்கள் பேசினார், எடப்பாடி பழனிசாமியிடம் அவ்வளவு நேரம் கூட பேசவில்லை.

ஓபிஎஸ் ஈபிஎஸ் மோதல்
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தற்போது இரு துருவங்களாகச் செயல்பட்டு வருகின்றனர். இரு தரப்பினரும் எதிர் தரப்பினரை கட்சியை விட்டு நீக்கி வருவதோடு, புதிய நிர்வாகிகளை நியமித்து வருகின்றனர். மேலும், நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் அணுகியுள்ளனர். இதனால் பாஜக தலைமையின் ஆதரவு இருந்தால் கட்சியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் முயற்சித்து வருகின்றனர்.

டெல்லி சென்ற ஈபிஎஸ்
இதை மனதில் கொண்டுதான் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றார். அப்போது பிரதமர் மோடியை தனியாகச் சந்தித்துப் பேச முயன்றார். அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ராம்நாத் கோவிந்த் பிரியாவிடை நிகழ்வுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. ஓபிஎஸ் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எடப்பாடி பழனிசாமி, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதற்காக டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

இருவருமே பேசவில்லை
டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்துப் பேச முயன்றார். ஆனால், அவருக்கும் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த எடப்பாடி பழனிசாமி உடனடியாக சென்னை திரும்பிவிட்டார். ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே டெல்லி சென்று மோடியை சந்தித்துத் தனியாகப் பேச முடியாமல் போனது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

சென்னை வந்த மோடி
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி வரவேற்றார். அதேபோல, பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று அகமதாபாத் சென்ற பிரதமரை வழியனுப்பி வைக்க ஓ.பன்னீர்செல்வம் விமான நிலையம் சென்றிருந்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் பேசினார் பிரதமர் மோடி.

நேரம் ஒதுக்கவில்லை
சென்னை வந்திருந்த பிரதமர் மோடியிடம் தனித்தனியாக சந்தித்துப் பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் நேரம் கேட்டிருந்தனர். ஆனால் பிரதமரோ இருவருக்கும் தனியான சந்திப்புக்கு நேரம் ஒதுக்கவில்லை. வரவேற்பு கொடுக்க எடப்பாடி பழனிசாமிக்கும், வழியனுப்பி வைக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இருவரையும் பிரதமர் சந்திக்காமல் சென்றது அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

பாஜகவினர் சந்திப்பு
அதே நேரத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் அனுமதி அளிக்கப்பட்டது. அதிமுக தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்காத நிலையில், பாஜக நிர்வாகிகளுடன் நீண்ட நேரம் ராஜ் பவனில் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது அதிமுக நிலவரம் குறித்தும் பிரதமர் மோடி கேட்டு அறிந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் பாஜகவின் முடிவு என்னவாக இருக்க வேண்டும் என்பது பற்றியும் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.

நடந்தது என்ன?
பிரதமர் மோடியைச் சந்திக்க ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸும் பிரயத்தனம் செய்தாலும், அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலைமை தலையிடாது என்றே எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களான இரண்டாம் கட்டத் தலைவர்கள் கூறி வருகின்றனர். இதனால், தமிழக பாஜகவுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு மீது நம்பிக்கை இல்லை என்று கூறப்படுகிறது. கூட்டணியில் இருந்தாலும் கூட அதிமுகவுக்கும், தமிழக பாஜகவுக்கும் இடையே சரியான புரிந்துணர்வு இல்லை என்பதால் இப்போது வெளிப்படையாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

பாஜக தலைமையில்
மேலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலை குறிவைத்து செயல்பட்டு வருவதால், எதிர்கால நலனையும் பார்க்க வேண்டும், ஓபிஎஸ் ஈபிஎஸ் பிரிவால் கூட்டணிக் கட்சியான நமக்கும் சிக்கல் ஏற்படும். கட்சியில் ஆதரவு இல்லாத நிலையில் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு கொடுப்பதும் சரியாக இருக்காது, அதிமுகவின் இந்த சூழல் நமக்கு சாதகமாக அமையும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையில் கூட்டணி அமைய வேண்டும், அதற்கான முயற்சிகளில் ஈடுபடுங்கள் என பிரதமர் மோடி தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக திட்டம்
சென்னை வந்தும் இருவரையும் சந்திக்காமல் சென்றால் அது அரசியலில் பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுக்கும் என்பதால் அது பற்றியும் ஆலோசித்துள்ளனர். அப்படி ஒரு கேள்வி எழுந்தால், அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலைமை தலையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டையே இருவருக்கும் தெரியப்படுத்தலாம் என இந்த ஆலோசனையில் தீர்மானிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications