"தப்பா இருக்கு.." நாட்டின் சுதந்திர போராட்ட வரலாற்றையே மாற்றி எழுதணும்.. பட்டுனு சொன்ன ஆளுநர் ரவி
சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126ஆவது ஆண்டு பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இது தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, நாட்டின் சுதந்திர வரலாற்றையே மொத்தமாக மாற்றி எனவும் வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்தியாவின் சுதந்திரத்திற்கு பல்வேறு தரப்பினரும் பங்களிப்பைக் கொடுத்துள்ளனர். காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அகிம்சை முறையில் போராடினார்கள் என்றால் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆயுதம் ஏந்தி போராடினார்.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவர் மிகப் பெரிய ராணுவத்தையே திரட்டிக் கொண்டு வந்தார். இந்தியாவின் முதல் ராணுவமாக அதுவே கருதப்படுகிறது. அவரது பிறந்த நாள் ஜனவரி 23 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
நேதாஜி - ஆர்எஸ்எஸ்.. இருவருக்கும் ஒரே குறிக்கோள்தான்.. ஆர்எஸ்எஸ் மோகன் பகவத் பரபரப்பு பதில்
நேதாஜி பிறந்த நாள்
ஏற்கனவே நேதாஜியின் பிறந்த நாள் பராக்கிரம தினமாகக் கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி நேற்றைய தினம் நாடு முழுக்க பல்வேறு கொண்டாட்டங்கள் இருந்தன. குறிப்பாக அந்தமானில் இருக்கும் 21 தீவுகளுக்குப் பிரதமர் 21 பரம் வீர் சக்ரா விருது பெற்ற வீரர்களின் பெயர்களைப் பிரதமர் மோடி சூட்டியிருந்தார். இதனிடையே சென்னையில் நடந்த நேதாஜி பிறந்த நாள் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, நாட்டின் சுதந்திர வரலாறு குறிப்பிட்ட கட்சியை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளதாகவும் அதை மாற்றி எழுத வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நேதாஜி பிறந்த நாள்
சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த நேதாஜியின் 126ஆவது பிறந்தநாள் விழாவில் பேசிய ஆளுநர் ரவி, "இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைக்கும் போது பல தரப்பினரும் அதற்காகப் போராடினார்கள். மவுண்ட்பேட்டன் நமது நாட்டில் இருந்து விட்டு வெளியேறிய போது சில தலைவர்கள் கண்ணீர் சிந்தியது வேடிக்கையானது.. ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி உயிர் நீத்தவர்களின் தியாகத்தைக் கேள்விக்குறியாக்கும் வகையில் இது இருந்தது.
குறிப்பிட்ட கட்சியால் கிடைக்கவில்லை
எந்தவொரு குறிப்பிட்ட கட்சியாலும் நமக்குச் சுதந்திரம் கிடைத்துவிடவில்லை. பல்வேறு தரப்பினரும் தியாகம் செய்துள்ளனர். ஆயுதம் ஏந்தி போராடியவர்களும் முக்கியமானவர்கள். ஆனால், நாம் சுதந்திரம் கிடைத்த பிறகு ராணுவத்தை ஒதுக்கி வைத்தோம். ஆனால், இந்த நிலையை மாற்றிய பிரதமர் மோடி அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு 21 பரம் வீர் சக்ரா விருது பெற்ற வீரர்களின் பெயர்களைப் பெயர் சூட்டியுள்ளார்.
தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்கள்
நான் தமிழ்நாட்டிற்கு வந்தவுடன் இங்கு நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர்கள் யார் எனத் தெரிந்து கொள்ள விரும்பினேன். இங்குச் சுதந்திரத்திற்காகப் போராடியவர்கள் குறித்த தகவல்களைக் கேட்டேன். அப்போது அவர்கள் 200 பேர் குறித்து மட்டுமே சொன்னார்கள். அவர்கள் அனைவருமே தலைவர்கள்.. இவர்களைத் தாண்டி பலரும் களத்தில் இருந்து நாட்டின் சுதந்திக்காகப் போராடினார்கள். தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர் சுதந்திரத்திற்காகப் போராடியுள்ளனர். அதை யாராலும் மறுக்க முடியாது.
மாற்றி எழுதணும்
ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் சுதந்திரதிற்காக பலரும் போராடியுள்ளனர். இருப்பினும், அவை அனைத்தும் முறையாக வரலாற்றில் பதிவு செய்யப்படவில்லை.. குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் குறித்த விவரங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. நமது நாட்டின் இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாறு முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. எனவே, சுதந்திரப் போராட்ட வரலாறு முற்றிலுமாக மாற்றி எழுதப்பட வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.