ஆடி முடிஞ்சு ஆவணி வந்தாச்சு! தேதி எப்போ குறிப்பீங்க..? நச்சரிக்கும் ’சவுத்’.. செவிசாய்க்குமா டெல்டா?
சென்னை : அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் சசிகலா-டிடிவி தினகரன்- ஓபிஎஸ் சந்திப்பு இருக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த தென் மாவட்ட நிர்வாகிகள் அது எப்போது நடக்கும் என தேனி தரப்பிடம் கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமான நிகழ்வுகள் அடுத்தடுத்து நடைபெற்று வரும் நிலையில் ஆடி மாதம் நிறைவடைந்ததும் சசிகலாவை ஓ பன்னீர்செல்வம் சந்தித்து பேசுவார் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்திற்கு இடையே ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக இணைந்து செயல்படுவார்களா என்ற எதிர்பார்ப்பே மேலோங்கி நிற்கிறது.

அதிமுக பொதுக்குழு கூட்டம்
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாகவே சசிகலா, டிடிவி தினகரனுடன் இணைந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓபிஎஸ் நெருக்கடி தருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது மாதிரியான நிகழ்வுகள் நடைபெறவில்லை. ஆனால் அது விரைவில் நடைபெறும் என உறுதியாக சொல்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.

விசாரணை தாமதம்’
தற்போது எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி அளித்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ள நிலையில் வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. தீர்ப்பு என்னவாக இருக்கும் என இரு தரப்பினருமே ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில் சசிகலாவின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.

ஒன்றிணைவோம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் பேசிய சசிகலா அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு திமுக காரணம் எனக்கு கடுமையாக குற்றம் சாட்டியதோடு 2024 ஆம் ஆண்டு அனைவரையும் ஒன்று சேர்த்து எழுதலை சந்திப்போம் எனவும் அப்போது அதிமுக ஆட்சி அமைக்கும் எனக் கூறியிருந்தார். அதை வைத்தே கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர் சந்திப்பில் சசிகலா டிடிவி தினகரன் என யார் வந்தாலும் ஒன்றாக இணைந்து செயல்பட தயார் எனக் கூறியிருந்தார்.

பலத்த எதிர்பார்ப்பு
இதனால் சசிகலா தரப்பு, டிடிவி தினகரன் தரப்பில் இருந்த நிர்வாகிகளும், ஓபிஎஸ் தரப்பில் இருக்கும் தென் மண்டல நிர்வாகிகளும் உற்சாகத்தில் இருந்தனர். காரணம் சசிகலா தரப்பு டிடிவி தரப்பு என தனியாக இருப்பதை விட அதிமுகவில் பதவியில் இருப்பதை பெருமையாக கருதும் அவர்கள் மூவரும் இணைந்து செயல்பட்டால் கடந்த சில வருடங்களாக பதவியின்றி தவிக்கும் தங்களுக்கு குறிப்பிட்ட அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தனர்.

தேனிக்கு நெருக்கடி
ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதத்தில் ஓபிஎஸ் சசிகலா சந்திப்பு இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது வரை அதற்கான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் ஏற்கனவே குறிப்பிட்டபடி எப்போது சசிகலா டிடிவி தினகரன் ஓபிஎஸ் சந்திப்பு இருக்கும் என தேனி தரப்பிடம் கேட்டு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். அதே நேரத்தில் சசிகலா தரப்பு அது குறித்த எந்தவிதமான முடிவையும் இதுவரை உறுதியாக தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications