பெட்ரோல், டீசல் விலையை எப்போ குறைப்பீங்க.. மடக்கிப் பார்த்த "அக்ரி".. பிடிஆர் போட்ட பொளேர் பதில்!
சென்னை: தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி எப்போது திறக்கப்படும் என்பது பற்றி தமிழ்நாடு நிதித் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
சட்டசபை தேர்தலையொட்டி திமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு முக்கிய வாக்குறுதிகளை வழங்கி இருந்தது.
அதில் ஒரு வாக்குறுதி ஆட்சிக்கு வந்தபிறகு பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்படும், டீசல் விலையில் லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும் என்பதாகும்.

வாக்குறுதி நிறைவேற்றம்
பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம், ஆவின்பால் விலை குறைப்பு, போன்ற திட்டங்கள் வாக்குறுதியாக வழங்கப்பட்டு அது உடனடியாக நடைமுறைக்கு வந்துவிட்டது. ஆனால் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலை குறைக்கப்படவில்லை.சமீபத்தில் இது தொடர்பாக நிதித் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது எரிபொருட்களின் விலை குறைக்கப்படும், ஆனால் எப்போது குறைக்கப்படும் என்பது தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை, எனவே சிறிது காலம் பொறுத்திருங்கள் என்று கூறினார்.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி
இந்த நிலையில் இன்று, சட்டசபையில், அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசியபோது, திமுக தனது தேர்தல் அறிக்கையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பதாக தெரிவித்திருந்தது, ஆனால் ஆளுநர் உரையில் அதுகுறித்த எந்த அம்சமும் இடம்பெறவில்லை என்பதை சுட்டிக் காட்டினார்.

கடந்த கால ஆட்சிகள்
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், கடந்த காலங்களில் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில அரசின் வரி உயர்த்தப்பட்டது. ஆனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போதும் கூட கருணாநிதி ஆட்சி காலத்தில் மூன்று முறை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறைக்கப்பட்டது.

மோடி அரசு காரணம்
2014 ஆம் ஆண்டு மத்தியில் பாஜக அரசு பதவிக்கு வந்தபிறகு பெட்ரோலிய பொருட்கள் மீது கடுமையாக வரியை உயர்த்தியுள்ளது. சுமார் இரண்டு மடங்குக்கும் அதிகமாக வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது.

நிதி நிலைமை சரியாகட்டும்
தற்போது மாநில அரசுக்கு வரக்கூடிய நிதி ஆதாரங்கள் மிகவும் குறைவாக இருக்கின்றன. பெட்ரோல், டீசல் போன்றவற்றின் மீதான வரி வருவாய் உள்ளிட்ட சில ஆதாரங்கள் மட்டும்தான் மாநில அரசுக்கு கிடைக்கிறது. இப்போது தமிழக நிதி நிலைமை சரி கிடையாது. தமிழக நிதி நிலைமை சரியான பிறகு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும். இவ்வாறு பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications