தமிழ்நாட்டில் மறுபடியும் கிராம சபை கூட்டம்.. எல்லாருமே கலந்துக்கணும்.. கலெக்டர்களுக்கு திடீர் ஆர்டர்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.
தமிழக அரசியலில் கிராம சபை கூட்டங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்து வருகின்றன.. கிராம சபை கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் முக்கியமான நாட்களில் நடைபெறுவது வழக்கம்.

அதிர்வலைகள் : இந்த கிராம சபை கூட்டங்களில் விவாதிக்கப்படும், எழுப்பப்படும் பல்வேறு விவகாரங்கள், அரசியல் களத்தில் மிகப்பெரிய அதிர்வலையையும் ஏற்படுத்திவிடும் என்பதை மறுப்பதற்கில்லை.
மக்கள் அதிகாரத்திற்கு முக்கியத்துவம் தரும் வகையில் சக்தி வாய்ந்த அமைப்பாக இந்த அரசியல் அமைப்பில் பார்க்கப்படுவது கிராம சபை என்பதால், இதற்கு முக்கியத்துவம் தரும் வகையில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைத்தவுடன் கிராம ஊராட்சிகளில் ஆண்டுதோறும் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களின் எண்ணிக்கையை 4ல் இருந்து 6 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது.
கிராம சபை கூட்டம்: அந்த வகையில் கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு தினமான 26 - ஜனவரி, தொழிலாளர் தினமான மே - 1, இந்திய சுதந்திர தினமான ஆகஸ்டு - 15, காந்தி ஜெயந்தியான அக்டோபர் - 2, உலக நீர் நாளான மார்ச் - 22 மற்றும் உள்ளாட்சி நாளான நவம்பர் - 1 ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது கிராம சபைக் கூட்டங்கள் கூட்டப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தற்போது இந்த வருடத்துக்கான கிராம சபை கூட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
கிராம சபைக்கூட்டம்: அதில், "குடியரசு தினத்தன்று (26.01.2024) அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி குடியரசு தினத்தன்று காலை 11.00 மணி அளவில் நடத்த வேண்டும். குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
வருகின்ற 26ம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், அனைத்து கிராம மக்களும் ஆர்வத்துடன் எதிர்வரும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஏதுவாக கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ள இடம், நேரம் ஆகியவற்றை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications