நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; இந்த வாரம் வெளியாகிறது அறிவிப்பு? பரபரக்கும் அரசியல் கட்சிகள்!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இந்த வாரம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தலுக்கான அட்டவனை தயாரிக்கும் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் முடித்துவிட்டதால் அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பு பற்றிக்கொண்டன.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்பமனு பெறும் படலம் ஏறத்தாழ எல்லா கட்சிகளிலும் தொடங்கிவிட்டது.

நகர்ப்புற உள்ளாட்சி
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய பொறுப்பு மாநில தேர்தல் ஆணையத்துக்கு இருப்பதால், அதற்கான முன்னேற்பாடுகள் தயாராக உள்ளன. இரண்டு கட்டங்களாக தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ள தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை இந்த வாரத்தில் வெளியிடக்கூடும் எனத் தெரிகிறது.

முழு வீச்சில் பணிகள்
வார்டு மறுவரையறை செய்யும் பணிகள் முழுமையாக முடிவடைந்ததோடு எந்தெந்த வார்டு ஆண் வேட்பாளர், பெண் வேட்பாளர் என்ற விவரத்தையும் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுவிட்டது. கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை காரணமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகள் சற்று சுணக்கம் அடைந்ததாகவும் இப்போது முழுவீச்சில் அதற்கான ஏற்பாடுகள் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முதற்கட்டம்
முதற்கட்டமாக ஏற்கனவே இருந்த பழைய மாநகராட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படலாம் என்றும் இரண்டாவது கட்டத்தில் தாம்பரம், காஞ்சிபுரம், கரூர் என புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறக் கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே பொங்கல் பரிசுத் தொகுப்பை ஒன்றரை மாதங்களுக்கு முன்பே அறிவித்து தேர்தலுக்கு திமுக முதல் ஆளாக தயாராகிவிட்டது.

விருப்பமனு
திமுக, மதிமுக, என பல கட்சிகளில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்பமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. அரசியல் கட்சிகள் காட்டும் வேகத்தை பார்த்தால், டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பே இரண்டு கட்டத் தேர்தலும் நடைபெற்று முடிந்துவிடும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications