சல்லடையை போட்டு புஸ்ஸி ஆனந்த்தை தேடும் போலீஸ்.. இன்று கைது செய்யப்படுவாரா? தவெகவில் நாலாபக்கம் பரபர
சென்னை: நாமக்கல்லில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் விதிமுறைகள் மீறியதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது நாமக்கல் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தலைமறைவாக இருந்த தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகனை தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில், புஸ்ஸி ஆனந்தையும் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
கரூர் வேலுசாமிபுரத்தில் 2 நாட்களுக்கு முன்பு நடந்த தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.. இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நாமக்கல் வாகனங்கள்
இதையடுத்து, நாமக்கல் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் சாந்தகுமார் புகார் ஒன்றை தந்தார்.. அதில், "கூட்டத்தில் பங்கேற்கும் தவெக தலைவர் விஜய் வாகனத்தை சுற்றி 5 எண்ணிக்கைக்கு அதிகமாக வாகனங்கள் வரக்கூடாது. காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணிக்குள் பிரச்சாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்பது உள்பட 20 நிபந்தனைகள் முன்கூட்டியே விதிக்கப்பட்டிருந்தன.
ஆனால், நிபந்தனைகள் எதையுமே அன்றைய தினம் பின்பற்றப்படவில்லை என புகார் எழுந்தது. மேலும், அன்று மதியம் 2.45 மணியளவில் தவெக தலைவர் விஜய் கூட்டத்தில் பங்கேற்றார். காலதாமதமாக விஜய் பங்கேற்ற காரணத்தினால், கூடியிருந்த கூட்டத்தில் அசாதாரண சூழல் ஏற்பட்டது" என்று புகாரில் கூறியிருந்தார்.
புஸ்ஸி ஆனந்த்
இந்த புகாரின் பேரில் தவெக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் என்.சதீஷ்குமார், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்பட கட்சி நிர்வாகிகள் மீது உண்மைக்கு புறம்பான தகவல் தந்தது, அச்சுறுத்தல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்து கூட்டத்தை கூட்டுவது என்பன உள்பட 5 பிரிவுகளின் கீழ் நாமக்கல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதாவது, முதல் குற்றவாளியாக தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், 2வது குற்றவாளியாக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், 3- ஆவது குற்றவாளியாக கட்சியின் இணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்ட 4 பேர் மீது கரூர் நகர போலீசார் ஜாமீனில் வெளி வரமுடியாத வகையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கு பதிவானதுமே, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமறைவாகினர். எனினும் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தலைமறைவானவர்களை தேடும்பணி ஆரம்பமானது..
மதியழகன் கைது
இதில் தலைமறைவாக இருந்த தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகனை தனிப்படை போலீசார் நேற்று மாலை கைது செய்தனர். முதல் தகவல் அறிக்கையில் முதல் குற்றவாளியாக மதியழகன் பெயர் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்..
இதையடுத்து, இந்த விவகாரத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்டோரையும் கைது செய்வதற்கு போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.. நேற்றிரவுக்குள் புஸ்ஸி ஆனந்த் கைதாவார் என்று சொல்லப்பட்டு வந்தது.. எனவே இன்றைய தினம் எப்படியும் அவரை கைது செய்து விடுவது என்ற முனைப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
விஜய் கைதாவாரா
இதனிடையே, விஜய்யையும் கைது செய்ய வேண்டும் என்று ஆங்காங்கே முழக்கங்கள் கிளம்பி உள்ளன.. கரூரில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இந்த சம்பவத்தைக் கண்டித்தும் தவெக தலைவர் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தியும் தமிழக மாணவர் சங்கம் என்ற பெயரில் நாமக்கல் மாநகரம் முழுவதும் ஏராளமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது, கூடுதல் பரபரப்பை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications