மூச்சுவிட சிரமப்படும் சென்னை.. ஆக்சிஜன் பெட் வசதி.. இப்போது எங்கு காலியாக உள்ளது.. நிஜ நிலவரம்!
சென்னை: தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா தொற்று பாதிப்பு மிகப்பெரிய அளவில் உச்சம் பெற்றுள்ளது. இதனால் நோயாளிகள் பலர் சிகிச்சை பெறுவதற்கு மருத்துவமனைகளில் பெட் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். நோயாளிகள் சிலர் கடந்த இரண்டு நாட்களாக ஆம்புலன்சிலேயே உயிரிழப்பதும் சென்னையில் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக ஆக்ஸிஜன் வசதி உள்ள பெட் கிடைப்பது என்பது மிகவும் கடினமாக உள்ளது. தற்போதைய நிலையில் சென்னையில் சில தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே ஆக்ஸிஜன் பெட் வசதி உள்ளது. அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பெட் வசதி என்பது இப்போது வரை எங்கும் காலியாக இல்லை.
ஈகைத் திருநாள் எனும் புனித ரமலான் - நோன்பின் முக்கியத்துவமும் சிறப்புகளும்
https://stopcorona.tn.gov.in/beds.php என்ற இணையதளத்தில் தமிழகஅரசு, தமிழகத்தில் எந்த மருத்துவமனைகளில் எவ்வளவு பெட் வசதி காலியாக உள்ளது. எங்கெல்லாம் ஆக்சிஜன் பெட் வசதி தற்போது இருப்பில் உள்ளது, எங்கெல்லாம் ஐசியு பெட் வசதிகள் உள்ளது என்ற தகவலை பகிர்ந்து வருகிறது.
100 மருத்துவமனைகள்
அதில் சென்னை நிலவரத்தை பார்த்தால், மிகவும் கவலை தரும் வகையில் உள்ளது. சென்னையில் கொரோனாவிற்கு சிகிச்சை தரும் தனியார் சுமார் 100 என்கிற அளவில் உள்ளன. அரசு மருத்துவமனைகளின் நிலைமை தெரியவில்லை. ஆனால் தனியாரில் ஆக்சிஜன் பெட் வசதி பெரும்பாலும் காலியாக இல்லை. அப்பல்லோ, பில்ருத், செட்டிநாடு, காவேரி உள்பட மிகப்பிரபலமான பல்வேறு தனியார் மருத்துவமனைகளிலும் இதுதான் நிலைமை,
எல்லாமே தனியார்
சென்னையில் இன்றைய நிலவரப்படி எங்கெல்லாம் ஆக்சிஜன் பெட் வசதி காலியாக உள்ளது என்று பார்த்தால் ஒரு சில தனியார் மருத்துவமனைகளிலும் வெகு சில இடங்களே காலியாக உள்ளன. ஜிஎல்பி மருத்துவமனையில் நான்கு, எஸ்ஆர்எம் மருத்துவமனையில் 11, சேலையூரில் உள்ள கேஎம்எஸ் ஹெல்த்கேரில் 5, எம்ஆர் மருத்துவமனையில் ஒன்று என உள்ளது. இன்னும் சில மருத்துவமனைகள் காலியாக இருக்க வாய்ப்பு உள்ளது. எப்படி பார்த்தாலும் சுமார் 50 படுக்கைகள் அளவிற்கே காலி இடங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது.
நிலைமை மோசம்
தமிழ்நாட்டின் தலைநகரிலே இந்த நிலைமை என்றால் கோவை, மதுரை, சேலம் உள்பட மற்ற ஊர்களில் இன்னமும் நிலைமை மோசமாக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர நிலை அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் வசதி தேவைப்படுகிறது. ஆக்சிஜன்அளவு 90க்கு கீழ் குறைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்.
தனித்திரு விழித்திரு
எனவே கொரோனா பாதிப்பை தடுக்க முடிந்த வரை விழிப்புடன் இருங்கள். வந்துவிட்டால், அரசின் வழிமுறைகளை தயவு செய்து கடைபிடியுங்கள். உங்கள் குடும்பத்திடம் இருந்து தனித்து இருங்கள். இல்லாவிட்டால் உறவுகளும் மோசமான சிக்கலை சந்திக்க வேண்டியதிருக்கும். சென்னையில் உள்ள மக்கள் உண்மை நிலவரத்தை அறிந்த உஷாராக இருப்பது மட்டுமே நல்ல தீர்வை தரும். மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பெட் வேண்டும் என்றாலோ அவசர தேவை என்றாலே உடனே அரசின் உதவி எண்ணான 104 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.