எம்ஜிஆரை நீக்கிய திமுக ஆட்சியில் ஓட்டுனராக நீடிக்க விரும்பாதவர்.. யார் இந்த தமிழ்மகன் உசேன்!
சென்னை: எம்ஜிஆரை கட்சியிலிருந்து நீக்கிய திமுக ஆட்சியின் அரசு ஓட்டுநராக நீடிக்க விரும்பாமல் ராஜினாமா கடிதத்தை கண்டக்டரிடம் கொடுத்துவிட்டு எம்ஜிஆரை பார்க்க சென்றவர் தமிழ்மகன் உசேன்.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் தமிழ்மகன் உசேன். இவர் 1970களில் அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் 1972 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது அக்கட்சியிலிருந்து எம்ஜிஆர் வெளியேற்றப்பட்டார்.
அப்போது போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்த தமிழ்மகன் நாகர்கோவிலில் இருந்து திருச்சிக்கு பஸ்ஸை ஓட்டி சென்றார். மதுரை மேலூர் அருகே சென்ற போது சாலையில் ஒரு கூட்டமாக இருந்ததை கண்டு பேருந்தை நிறுத்தினார் தமிழ்மகன்.

திமுகவில் இருந்து
அப்போது அங்கிருந்தவர்களிடம் விசாரித்த போது எம்ஜிஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டதாக செய்தி ரேடியோவில் ஒலிபரப்பாவதாக தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக பேருந்தை விட்டு இறங்கிய தமிழ்மகன் எம்ஜிஆரை நீக்கிய ஆட்சியில் ஓட்டுநராக இருக்க நான் விரும்பவில்லை என ராஜினாமா கடிதத்தை எழுதி கண்டக்டரிடம் கொடுத்தார்.

நாகர்கோவில்
பின்னர் வாடகை காரை அமர்த்தி கொண்டு சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு விரைந்தார். அங்கு எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி எம்ஜிஆர் தனிக் கட்சியை தொடங்க வேண்டும் என தீர்மானம் போட்டு அத்துடன் எம்ஜிஆரை சந்திக்க சென்னை வந்தார். அங்கு ராமாவரம் தோட்டத்தில் எம்ஜிஆரை சந்தித்து தனிக் கட்சி தொடங்க வேண்டும் என்றார்.

முதல் மாவட்ட அமைப்பாளர்
அவருடன் சத்யா ஸ்டுடியோவில் ஆலோசனையில் ஈடுபட்ட நிர்வாகிகளில் தமிழ்மகனும் ஒருவர். அது போல் அவர் கட்சி தொடங்க கையெழுத்திட்டவர்களிலும் இவர் ஒருவர். அதே போல் எம்ஜிஆர் 1977 ஆம் ஆண்டு அதிமுகவை தொடங்கினார். அப்போது முதல் மாவட்ட அமைப்பாளராக தமிழ்மகனைத்தான் அறிவித்தார்.
Recommended Video

மகனுக்கு பிஆர்ஓ பதவி
அப்போது முதல் 68 ஆண்டுகளாக இன்று வரை அதிமுகவிலேயே இருந்து வருகிறார் தமிழ்மகன். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் விசுவாசியாக இருக்கும் தமிழ்மகனின் விசுவாசத்தையும் சேவையையும் கவுரவிக்க அவரது மகன் ஷேக் உசேனிற்கு ஜெயலலிதா பி.ஆர்.ஓ. பதவி கொடுத்து அழகு பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications