கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி.. யாருக்கு சான்ஸ்? தமிழக காங்கிரஸ் தலைமைக்கு இளம் தலைவர்..தலைமை திட்டம்
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமையில் விரைவில் அதிரடி மாற்றங்கள் இருக்கும், தலைவர் பதவிக்கு இளம் தலைமுறையை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவார் என்கிறது கதர்ச் சட்டை வட்டாரம்.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக ராகுல் காந்தி இருந்தபோது அனைத்து மாநிலங்களிலும் இளைஞர்களுக்கு உரிய முக்கியத்துவம் தரவேண்டும், பொறுப்புகள் வழங்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டினார்.
ஆனால் மத்திய பிரதேசத்தில் அவர் பெரிதும் நம்பிய இளம் தலைமுறையைச் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவுக்கு தாவியதும் ராகுல் காந்தி மனம் வெறுத்துப் போனார்.

சீனியர்கள்தான் பலம்
"இதற்குத்தான் சொன்னோம்.. காங்கிரஸ் கட்சியின் பலம் அதன் சீனியர் தலைவர்கள்தான்.. அவர்களைப் பகைத்துக் கொண்டு புதிதாக எதையும் செய்யக்கூடாது .." என்று சீனியர்கள் தரப்பிலிருந்து ராகுல் காந்தியின் அடுத்த கட்டத் தலைவர் வரை மெஸேஜ் பாஸ் செய்யப்பட்டிருந்தது. ஒரு கட்டத்தில் இந்த பதவியே வேண்டாம் என்று ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகிக்கொண்டார். அதற்கு முக்கிய காரணம் இது போன்ற ஏமாற்றங்கள் தான்.

பாஜக பரிச்சாத்த முயற்சி
அதேநேரம் ஆளுங்கட்சியில் இருப்பதால் பாஜக தைரியமாக இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கி வருகிறது. இப்படியே போய்க் கொண்டிருந்தால் நிலைமை மோசமாகி விடும் என்பதால்தான் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று காங்கிரஸ் தலைமை யோசித்தது.

பஞ்சாப், ஆந்திரா காங்கிரசுக்கு இளம் தலைவர்கள்
அதன் ஒரு பகுதியாக பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் எதிர்ப்புக்கு நடுவே நவ்ஜோத் சிங் சித்து காங்கிரஸ் கட்சித் தலைவராக்கப்பட்டுள்ளார். நவ்ஜோத் சிங் சித்து வயதில் ரொம்ப இளையவர் இல்லை என்று சொன்னாலும், அமரீந்தர் சிங்கை விட இளையவர் தான். எனவே வருங்காலத்தையும் சேர்த்து காங்கிரஸ் யோசிக்க தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாகத்தான் ஆந்திர மாநிலத்தில் ரேவந்த் ரெட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் தேடும் இளம் தலைவர்கள்
இந்த வரிசையில், தமிழ்நாட்டில் இளைஞருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடம் யோசிக்கத் தொடங்கியிருக்கிறது. ராகுல் காந்தியும் மீண்டும் அந்த யோசனைக்கு வந்திருப்பதாக தெரிகிறது. தமிழக பாஜகவில் புதிதாக வந்து சேர்ந்து இருந்தாலும் தலைவர் பதவிக்கு வயதில் குறைந்தவருக்கு வாய்ப்பு வழங்கியிருப்பதையும், காங்கிரஸ் மேலிடம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. எனவே அடுத்த தேர்தலுக்கு முன்பாக காங்கிரசை வலுப்படுத்த வேண்டும் என்றால் நாமும் ஒரு இளம் தலைமுறையை களமிறக்க வேண்டும் என்ற சிந்தனையில் இருக்கிறது காங்கிரஸ்.

போட்டியில் கார்த்தி சிதம்பரம்
தமிழக காங்கிரஸ் கட்சியில் 50 வயதுக்கு குறைவானவர்கள் என்று எடுத்துக்கொண்டால், கார்த்தி சிதம்பரம், விஷ்ணுபிரசாத், மாணிக்தாகூர், ஜோதிமணி ஆகியோர் உள்ளனர். இவர்கள் அனைவருமே காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி இடத்தை பிடிப்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். கட்சியின் தற்போதைய தலைவர் கேஎஸ் அழகிரி தலைமையில் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலை அந்தக் கட்சி எதிர்கொண்டது. பொதுவாக காங்கிரஸ் கட்சியில் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை தலைவர் மாற்றப்படுவது வழக்கம். நிறைய கட்சிகள் இருப்பதால் ஒவ்வொருவரையும் திருப்திபடுத்த தலைவர் பதவியை இப்படி சுழற்சி முறையில் வழங்குகிறார்கள் என்று கூட சொல்வது உண்டு. ஆனால் இப்போது அது மாதிரி இல்லாமல் கட்சியை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இளைஞர்களுக்கு வாய்ப்பு தர இருப்பதாக கூறப்படுகிறது.

கேஎஸ் அழகிரி தலைமை
இந்த வரிசையில் சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் முன்னிலையில் இருக்கிறார். அதேநேரம் அழகிரி தலைமையில் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களில் முன்பை விடவும் காங்கிரஸ் சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை குவித்திருந்தது. திமுக கூட்டணியில் அந்த கட்சி இருப்பது இதற்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

தலைவர் பதவிக்கு லாபி
இந்த ஒரு காரணத்திற்காக தான் காங்கிரஸ் மேலிடம் அழகிரியை மாற்றுவதற்கு யோசித்துக் கொண்டு இருக்கிறது. மற்றபடி இளம் தலைவரை அந்த பதவிக்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான் கட்சியின் விருப்பமாக இருக்கிறது. "திமுக கூட்டணியில் இருந்ததால்தான் காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் நல்ல வெற்றியை பதிவு செய்ய முடிந்தது.. அழகிரிக்கு தனித்த மக்கள் செல்வாக்கு கிடையாது.. எனவே இளம் தலைவரை காங்கிரஸ் தலைவர் ஆக்கினால், வருங்காலத்தில் கூட்டணி இல்லாமல் காங்கிரஸ் போட்டியிடலாம் அல்லது காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டுமென்று திராவிட கட்சிகள் ஏங்கும் நிலையை உருவாக்கலாம்.. எனவே நாம் தொலைநோக்கு சிந்தனை கொண்டு இந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.." என்று காங்கிரஸ் மேலிடத்துக்கு தலைவர் பதவிக்கான லாபியில் இருப்பவர்கள் தகவல்களை அனுப்பிக் கொண்டு இருக்கிறார்கள் என்கிறது கதர் சட்டை வட்டாரம்.

சீனியர்கள் முட்டுக் கட்டை
ஆனால் காங்கிரஸ் கட்சியில் பழம் தின்று கொட்டை போட்ட சீனியர்கள் இவ்வாறு இளம் தலைமுறைக்கு வழி விடுவார்களா என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. சீனியர் ஒருவருக்கு தலைவர் பதவி கொடுத்தாலே இன்னொரு கோஷ்டி அதை ஏற்பது கிடையாது. டெல்லிக்கு நடையாய் நடக்க துவங்கி விடுவது வழக்கம். அப்படி இருக்கும்போது கார்த்தி சிதம்பரம் அல்லது ஜோதிமணி போன்ற இளம் தலைவருக்கு தலைவர் பதவியை கொடுப்பது என்பது காங்கிரஸ் வரலாற்றில்.. அதுவும் தமிழ்நாடு காங்கிரஸ் வரலாற்றில் நினைத்துப் பார்க்க முடியாத பெரிய விஷயம். ஒரு வேளை ஆளும் கட்சியாக இருந்தால் இதை செய்யலாம். எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் இது பெரிய ரிஸ்க், என்று சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில் கிசுகிசுக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications