ஐயப்ப மாலை போட்டிருக்கீங்க.. துபாய் ஹோட்டலில் நடந்த உண்மைய சொல்லுங்க! அண்ணாமலைக்கு காயத்ரி கேள்வி
சென்னை: துபாய் ஹோட்டலில் என்னை பற்றி 150 பேர் முன்னிலையில் கேவலமாக பேசினீர்களே அது குறித்த உண்மையை இனியாவது சொல்லுங்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம், காசி தமிழ் சங்கமம் தொடங்கி தற்போது வரை பாஜகவை கேள்வி எழுப்பி கொண்டே வருகிறார். இடையில் அவர் 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் வகித்த கட்சி பதவியும் தற்போது இசையமைப்பாளர் தீனாவுக்கு வழங்கப்பட்டுவிட்டது.
இந்த நிலையில் அண்ணாமலை குறித்து மீண்டும் ஒரு ட்வீட் போட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார். இந்த ட்வீட்டில் அண்ணாமலையிடம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார்.

காயத்ரி ட்வீட்
அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது: அண்ணாமலையின் வார் ரூம் தாக்குதல் வியூகம் என்னவெனில் பிக்பாஸில் எனது கேரக்டரை சிதைத்தது, மற்றொன்று நான் திமுகவின் ஸ்லீப்பர் செல் என்பது. எந்தவித ஆதாரமும் இல்லாமல் இவர்கள் கொண்டுவருவது இவற்றைதான். பெண் குறித்து வதந்திகளையும் தேவையில்லாத கிசுகிசுக்களையும் பேசுவதற்காகவே இந்த வார் ரூம் செயல்படுகிறது.

பாஜக நிர்வாகி அலிஷா அப்துல்லா
பாஜக நிர்வாகி அலிஷா அப்துல்லா அவரது பிரச்சினைகள் குறித்து பகிரங்கமாக பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அதுவும் பாஜக அலுவலகத்தில்! அப்படியிருக்கும் போது எனக்கு ஏன் அந்த அனுமதி கிடைக்கவில்லை. என்னை கிண்டல் செய்வதற்கு பதிலாக எனக்கு ஒரு கேள்விக்கு விடை கொடுத்தால் போதும். இது பாஜகவின் உள்கட்சி பிரச்சினை அல்ல.

அண்ணாமலை
என் மீது அண்ணாமலையால் வைக்கப்பட்ட தனிநபர் தாக்குதல் ஆகும். மாநில தலைவர் அண்ணாமலை சபரிமலைக்கு மாலை அணிந்துள்ளார். அவர் இந்த நேரத்தில் நிச்சயம் பொய் பேசமாட்டார். எனவே துபாய் ஹோட்டலில் 150 பேர் முன்பு என்னை பற்றி அவதூறாக நீங்கள் பேசியதை ஒப்புக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் என் மீதான குற்றச்சாட்டை மறுக்க வேண்டும்.

அண்ணாமலை மவுனம்
எனது விவகாரத்தில் அண்ணாமலை அமைதியாக மவுனம் காப்பதை என்னால் ஏற்க முடியாது. என்னிடம் ஆதாரங்கள் உள்ளன. சமூக நீதியும், பெண்ணின் நேர்மையும் என் அரசியல் வாழ்வை விட எனக்கு முக்கியம். நான் தவறு செய்திருந்தால் என் மீது நடவடிக்கை எடுக்கலாம். உண்மை வெளியே வரும் வரையிலும் நீதி நிலைநாட்டப்படும் வரையிலும் நான் தொடர்ந்து போராடுவேன்.

அலிஷாவுக்காகவும் போராடுவேன்
அலிஷா அப்துல்லா கட்சி அலுவலகத்தில் பிரஸ்மீட் கொடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெண்களை ஒரே மாதிரியாக சமமாக நடத்த மாட்டீர்களா, நான் அலிஷா அப்துல்லாவுக்கு ஆதரவாக நிற்பேன். பெண்களை இழிவுப்படுத்துவதை ஒரு போதும் ஏற்க மாட்டேன். அலிஷாவுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என நம்புகிறேன்.என்றும் காயத்ரி ரகுராம் தனது தொடர் ட்வீட்களில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். திருச்சி சூர்யா சிவா, மற்றொரு நிர்வாகியான டெய்சி சரணிடம் ஆபாசமாக பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது அலிஷா அப்துல்லாவும் திருச்சி சூர்யா குறித்து ஏகப்பட்ட புகார்களை தெரிவித்துள்ளார். தனது அலுவலகத்திற்கு அண்ணாமலை அனுப்பியதாக வந்து, தன்னை வந்து சந்தித்துவிட்டு எனது உடை குறித்தும் உடல் உறுப்புகள் குறித்தும் பேசியிருந்தார் என சென்னை கமலாலயத்தில் இருந்து அலிஷா பேட்டி அளித்திருந்தார்.












Click it and Unblock the Notifications