மாட்டிறைச்சி பிரியாணி- எஸ்சி ஆணையத்தின் அதிரடி உத்தரவுக்கு காரணமான ஆம்பூர் பிரியாணி திருவிழா
சென்னை: அரசு நடத்தும் பிரியாணி திருவிழாக்களில் மாட்டிறைச்சியை தவிர்க்கக் கூடாது என மாநில ஆதிதிராவிடர், பழங்குடி ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. ஆம்பூர் பிரியாணி விழாவில் மாட்டிறைச்சி தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சை காரணமாக ஆதி திராவிடர் பழங்குடி ஆணையம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் புவிசார் குறியீடு பெறும் நோக்கில் கடந்த மே 13,14,15 ஆகிய மூன்று நாட்களில் ஆம்பூர் பிரியாணி திருவிழா 2022 நடைபெறும் என அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த திருவிழாவில் 20-க்கும் மேற்பட்ட பிரியாணி வகைகள் மற்றும் 30 - க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

ஆம்பூர் பிரியாணி திருவிழா
அதேநேரத்தில் ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி தவிர அனைத்து பிரியாணி வகைகளும் கிடைக்கும் என மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா கூறியிருந்தார். இதற்கான காரணத்தை அவர் வெளியிடவில்லை. இதுதான் மிகப் பெரும் சர்ச்சையானது. ஆம்பூர் சுற்று வட்டாரங்களில் அதிக எண்ணிக்கையில் பீப் பிரியாணி கடைகள் இருக்கும் நிலையில் அதை தவிர்ப்பது ஏன்? என்கிற கேள்விகளும் முன்வைக்கப்பட்டன. பிரியாணியிலும் சமூக ஒதுக்கலை கடைபிடிப்பதா? என பல்வேறு தரப்பினர் கண்டனமும் தெரிவித்தனர்.

சர்ச்சையால் ரத்து
மேலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகக் கடைப்பிடிக்கப்படும் உணவுத் தீண்டாமை இது; பீப் பிரியாணி இல்லாமல் திருவிழா நடந்தால் மாவட்ட நிர்வாகம் நடத்தும் பிரியாணி திருவிழாவுக்கு எதிரிலேயே பீப் பிரியாணி கடைகளை நடத்துவோம் எனவும் தலித் அமைப்புகள் அறிவித்தன. இந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து மழையை காரணம் காட்டி பிரியாணி திருவிழா ரத்து செய்யப்பட்டது.

உணவு தீண்டாமை
அத்துடன் இந்த பிரச்சனை ஓயவில்லை. தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்துக்கும் இது தொடர்பாக புகார் அனுப்பி வைக்கப்பட்டது. அதில், ஆம்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் 2 லட்சத்துக்கு மேற்பட்ட மக்களின் முக்கிய உணவு மாட்டிறைச்சி. ஆனால் அரசு விழாவில் மாட்டிறைச்சிக்கு அனுமதி மறுப்பது உணவுத் தீண்டாமை. இது உளவியல் ரீதியான வன்முறைத் தாக்குதல். ஆகையால் அரசு பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சியை அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தனர்.

பீப் பிரியாணியை தவிர்க்க கூடாது
இதனடிப்படையில்தான் தற்போது, அரசு ஏற்பாடு செய்யக்கூடிய பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணி தவிர்க்கப்படக் கூடாது; அப்படித் தவிர்த்தால் அது பாகுபாட்டுக்கு வழி வகுக்கும். இனிவரும் காலங்களில் நடைபெறும் திருவிழாக்களில் மாவட்ட நிர்வாகம் பாகுபாட்டுக்கு வழிவகுக்கக் கூடாது என ஆதி திராவிடர், பழங்குடிகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications