நார்மல் டெலிவரியாகும்னு நெனச்சோம்.. ஆனால் கடைசி நேரத்தில் சிசேரியன்.. என்ன காரணம்? டாக்டர் பரூக்
சென்னை: கர்ப்பகாலத்தில் பெண்களின் உடல்நிலை நன்றாகவே இருக்கும். ஆனால் கடைசி நேரத்தில் திடீரென சிசேரியன் செய்துவிடுவது ஏன் என்பது குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கர்ப்ப காலம் முழுவதும் நான் நன்றாகவே இருந்தேன். எல்லாம் நார்மல் என்றே என்னை பரிசோதித்த மருத்துவர் கூறினார். ஆனால் கடைசி நேரத்தில் பிரச்சனை என்று சிசேரியன் செய்து விட்டார்கள்.
இப்படி நம்மில் பலருக்கும் அனுபவம் இருக்கும் ஏன் எனக்கும் உண்டு. என் மனைவிக்கு ( அவரும் மருத்துவர்) கர்ப்ப காலம் முழுவதும் எல்லாம் நார்மல் தான். கடைசி மாதத்தில் செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் கர்ப்பபை நீர் மிகவும் குறைந்துள்ளதாக மருத்துவர் கூறினார். இப்போது முடிவு எங்கள் கையில். சிக்கலான நிலையில் கர்ப்பம் தொடர அனுமதித்து சுகப்பிரசவம் நடைபெறுகையில் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அதனால் ஏற்படும் அசம்பாவிதங்களை சந்திப்பதா?
மாரடைப்பு தெரியும்.. அதென்ன சைலண்ட் ஹார்ட் அட்டாக்! இந்த அறிகுறி இருந்தால் உடனே டாக்டர் கிட்ட போங்க
அறிவியல் அளித்த வாய்ப்பு
இல்லை அறிவியல் நமக்களித்திருக்கும் மற்றொரு வாய்ப்பான சிசேரியனை தேர்ந்தெடுப்பதா? என இரண்டு வாய்ப்புகள் முன்னே இருந்தன. நாங்கள் இரண்டாவது வாய்ப்பை தேர்ந்தெடுத்தோம். இதபோல பலரும் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களைக் கொண்டு மருத்துவர் முதலிலேயே சொல்லாமல் கடைசி நேரத்தில் கூறி காசு பார்த்து விட்டார் என்று கூறுவதை பரவலாக கேட்க முடிகிறது.
என்னென்ன பிரச்சினை
இந்த அத்தியாயம் முழுவதும் கர்ப்ப காலத்தில் கடைசி பிரசவிக்கும் நேரத்தில் ஏற்படும் பிரச்சனைகள் எப்படி சிசேரியனுக்கு வழிவகுக்கின்றன என்பதை பற்றியதே பிரசவ நேரத்தில் அல்லது கடைசி மாதத்தில் வரும் பிரச்சனைகள் பின்வருமாறு:
1. நீண்ட நேரம் பிரசவிக்க எடுத்துக்கொள்ளுதல் (Prolonged labour)முதல் குழந்தையை ஈனும் தாயெனில் அவள் தனது பிள்ளையை பிரசவிக்க குறிப்பிட்ட நேரம் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு மூன்றாம் பிள்ளைகளை பெற்றெடுப்பவள் அதை விட குறைவான நேரத்தையே எடுத்துக்கொள்வார். இந்த நேரத்தை கணிக்க partograph எனும் அளவிடும் வரைபடம் பயன்படுத்தப்படும்.
காத்திருப்பு நேரம்
பிரச்சினைக்குரிய காத்திருப்பு நேரத்தை கடந்தால் குழந்தையின் நலம் தொடர்ந்து சோதிக்கப்படும். தொடர்ந்து வலி சரியாக ஏற்படாமலும் கர்ப்ப வாய் திறக்காமலும் இருந்தாலும் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படும். அதனால் குழந்தை இறப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு. இதை தடுக்க இருக்கும் வழி சிசேரியன் சிகிச்சை.
தாமதமான பிரசவம்
2. தாமதமான பிரசவம் ( delayed labour) ஒரு பெண் கருவுற்றவுடன் அவளது கடைசி மாதவிடாய் சுழற்சி தேதியை கொண்டு அவளுக்கு உத்தேச பிரசவிக்கும் தேதி வழங்கப்படும். மேலும் அவளுக்கு செய்யப்படும் ஸ்கேன்கள் மூலம் அந்த பிரசவிக்கப் போகும் தேதி உறுதி செய்யப்படும். இதை dating scan என்போம். இப்படி சரியாக எல்லாம் சென்று கொண்டிருக்கையில் சிலருக்கு அவர்களது பிரசவிக்கும் தேதியன்று வலி வராது. பலருக்கும் அந்த தேதிக்கு முன்னரே கடைசி மாதத்தில் வலி வந்துவிடும்.
வலி வராத பெண்கள்
இப்படி வலி வராத பெண்களை மருத்துவமனையில் அனுமதித்து மருத்துவரின் பரிந்துரையில் ஒரு நாளோ இரண்டு நாளோ காத்திருப்பு நிலையில் வைக்கப்பட்டு அப்போதும் வலி வரவில்லையெனில் சிசேரியன் செய்யப்படுகிறது. ஏன் இன்னும் அதிக நேரம் காத்திருக்க கூடாது? நன்கு வளர்ந்த மனித சிசுவுக்கு கருவறைக் காலம் 270 நாட்களேயாகும். அதற்கு மிகவும் முந்துவதோ பிந்துவதோ குழந்தைக்கு நல்லதல்ல. குழந்தை மூச்சுத்திணறலுக்கு செல்லும் . இறப்பு ஏற்படும். தாய்க்கும் பிரச்சனை ஏற்படுத்தும் வாய்ப்பு உண்டு. இதை தடுக்க இவ்வகை பெண்டிருக்கு சிசேரியன் செய்யப்படுகிறது.
பனிக்குட நீர்
3. பனிக்குட நீர் அளவில் மிகக் குறைவது (oligohydramnios)இந்த பிரச்சனை குழந்தை வளர்ச்சி நன்றாக அடைந்து விட்ட கடைசி மாதத்தில் நிகழலாம். காரணம் தாய்க்கு ஏற்படும் நீர் இழப்பு , நோய் தொற்று, காய்ச்சல் , புரதபற்றாக்குறை போன்றவை பனிக்குட நீர் மிகவும் குறைவது குழந்தைக்கு திணறலை ஏற்படுத்தி காட்டுப்பீயை தாயின் கர்ப்பபையிலேயே போக வைத்து அதை குழந்தை உட்கொண்டு உள்ளேயே இறக்கும் வாய்ப்பாகிவிடுகிறது. இதை தடுக்க இருக்கும் ஒரே வழி சிசேரியன் மட்டுமே.
ரத்த கொதிப்பு
4. கர்ப்ப காலத்தில் ரத்த கொதிப்பு இருப்பவர்களுக்கு அல்லது சிலருக்கு பிரசவ நேரத்தில் ரத்த அழுத்தம் திடீரென மிக அதிகமாகிறது. இதனால் வலிப்பு நோய் ஏற்பட்டு தாயின் உயிருக்கு ஆபத்தாகிறது. இதை தடுக்க அவசர நிலையில் சிசேரியன் செய்ய நேர்கிறது.
இடுப்பெலும்பு
5. சிலருக்கு இடுப்பெலும்பு நன்றாக பெரிதாக இருந்தும் குழந்தைக்கு தலை கீழாகவே இருந்தும். பிரசவிக்கும் தருவாயில் குழந்தை பல படிநிலைகளைக் கடந்து கீழிறங்கி வருகையில் எங்கேனும் சிக்கிக் கொள்வதை (dystocia) என்கிறோம். இப்படி சிக்கிக்கொண்டாலும் அதன் உயிருக்கு சிக்கல் தான் அந்த சூழ்நிலையிலும் சிசேரியன் செய்யப்படுகிறது.
குழந்தைக்கு திணறல்
6. இன்னும் சிலருக்கு பனிக்குடம் பிரசவ வேலை ஆரம்பிப்பதற்கு முன்பே உடைந்து விடும். இதை premature rupture of membrane என்போம். இந்த நிலையில் குழந்தை இருந்தால் திணறல் ஏற்பட்டு உள்ளேயே மலம் கழித்துவிட வாய்ப்புண்டு. ஆகவே இந்த நிலையில் இருக்கும் பலருக்கும் சிசேரியன் அவசர தேவையாக செய்யப்படுகிறது.
பிரசவ கால வலி
7. இன்னும் இக்காலத்தில் சில சகோதரிகளுக்கு பிரசவ கால வலியைப் பொறுத்துக் கொள்ள இயலாமலும் சரிவர முக்கி குழந்தையை கீழே உந்த முயற்சி செய்வதில் சுணக்கம் காட்டுவதிலும் குழந்தை நீண்ட நேரம் பிறப்புறுப்பு வாசலில் தங்கி மூச்சுத் திணறும் வாய்ப்பு உண்டு. இதனால் தாயின் விருப்பப்படி சிசேரியன் செய்யப்படும் சூழலும் உண்டு. தேவையான இடத்தில் தேவையான நபருக்கு சரியான நேரத்தில் செய்யப்படும் சிசேரியன் சிகிச்சைகள் உயிர்காக்க வல்லவை. சிசேரியன் குறித்த முடிவை கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்கும் மகப்பேறு மருத்துவர் எடுப்பது என்பது இரு உயிர்களை காக்கும் நடவடிக்கையாகும்.
உயிர் காக்கும் சிசேரியன்
சிசேரியன் இரு உயிர்காக்கும் ( தாய் மற்றும் சேய்) முக்கிய சிகிச்சை. சிசேரியன் பரவலாக்கப்பட்ட பிறகு இன்னும் சொல்லப்போனால் இலவசமாக அரசு மருத்துவமனைகளில் எளிதில் அடையக் கூடிய தூரத்தில் கிடைத்த பிறகு தாய் சேய் மரணங்கள் இந்திய அளவில் பெரும்பகுதி குறைந்திருக்கின்றன. இன்னும் சிசேரியன் குறித்து சிகிச்சை அளிக்கும் மருத்துவரும் தாய்மாரும் முடிவு செய்வதே சிறந்த பலன்களைத் தரும். சரியான நேரத்தில் சரியான முறையில் செய்யப்பட்ட சிசேரியன் சிகிச்சையால் காக்கப்பட்ட சேய் மற்றும் தாயின் உயிர்கள் ஏராளம். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தனது சமூகவலைதள பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.